Thursday 30 September 2010

எந்திரன்-விமர்சனம்

நான் எழுதும் முதல் தமிழ் பட விமர்சனம். அயல் நாடுகளில் இன்றே எந்திரன் திரையிடப்பட்டது. முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைத்தது பெரிய அதிசயம், அதைப் பற்றிய பதிவு தனியாகப் போடவேண்டும்.


எண்பதுகளில் வந்த சுஜாதாவின் என் இனிய இயந்திராவும், ஜீனோவும் இணைத்து எடுக்கப்பட்ட கதைதான் கரு. சுஜாதாவின் திரைக்கதையும், வசனமும் படத்தின் பலம். தன் கடைசி பங்களிப்பை மிக சரியாக செய்திருக்கிறார். படத்தின் பெயரை தமிழாக்கம் செய்திருப்பதிலேயே அவருடைய திறமை பளிச்சிடுகிறது.

இரண்டே முக்கால் மணிநேரம் ஓடும் படத்தை சங்கர் மிக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நம்ம ஊரு கதையை ஹாலிவுட் ரேஞ்சில் எடுத்திருப்பதற்கு சங்கருக்கு பாராட்டுகள்.

சூப்பர்ஸ்டார் அசத்துகிறார். முக்கியமாக எந்திரனாக வருபவரின் “பாடி லாங்குவேஜ்”, ரோபோ ஆடும் நடனங்களில் அவரின் உழைப்பு தெரிகிறது. கிளைமேக்ஸில் விஞ்ஞானி தான் உருவாக்கிய ரோபோவுடன் கலந்து தன் கோட்டைக்குள் நுழைந்தவுடன் கண்டு பிடிப்பதிலும், கருப்பு ஆட்டை கண்டுபிடித்து கனைக்கிறாரே, இது அவருடைய ஸ்பெஷாலிட்டி. நகைச்சுவையில் சந்தானம் கருணாஸ் கூட்டணியை டம்மி ஆக்கிவிட்டு “எந்திரன்” தூள் கிளப்பிவிட்டார். ரஜினிக்கு நகைச்சுவை இயல்பாக நன்றாகவே வரும். படத்தில் நமக்கு தீபாவளி வாழ்த்தும் அட்வான்சாகவே சொல்லுகிறார். முக்கியமாக இதில் ரஜனிக்கு தேவையில்லாத “பில்டப்” மற்றும் “பஞ்ச் டயலாக்” இல்லை.

எந்திரன் சனாவுடன் காதல் கொண்டு நள்ளிரவில் சந்திக்கப் போய், சனா தன்னை கடித்த “ரங்குஸ்கியை” பிடிக்கப் போய் கொசுக்களுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில், சுஜாதா, சங்கர் கூட்டணியின் படைப்பு ரசிக்க வைக்கிறது.

ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் கொள்ளை அழகு. நடனத்தில் அசத்தியிருக்கிறார். அவர் ரோபோவை முத்தமிடும் பொழுது அரங்கமே “கபர்தார்” என்று கத்துகிறது.

இசைப்புயல் ரஹமான், “காதல் அணுக்கள்”, “இரும்பிலே ஒரு இதயம்” பாடல்களில் வித்யாசமான இசையைக் கொடுத்து பட்டையை கிளப்பிருக்கிறார். அரிமா அரிமாவில் ஹரிஹரன் அடித்தொண்டையில் “சின்னஞ்சிறுசுகளின் இதயம் திருடும் சிலிகான் சிங்கம் நான்” என்கிறார். ஆமாம் குழந்தைகளுக்கு பிடித்தப் படமாக இருக்கும்.

“காதல் அணுக்கள் படமாக்கப்பட்ட விதம், எடுக்கப்பட்ட இடம் நாம் இதுவரை பார்த்திராத ஒரு லொகேஷன். ரசூல் பூக்குட்டி தன் பெயரை நிலை நாட்டியிருக்கிறார்.

மின்சார வண்டி சண்டை காட்சியில் பீட்டர் ஹெய்ன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தை பார்க்க நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இருந்தும் படத்தின் மயக்கத்தில், சூப்பர்ஸ்டார் நடிப்பில் திளைத்திருக்கிறேன்.

கலாநிதி மாறன் கொடுத்த விளம்பரத்திற்கு எந்திரன் சற்றும் குறையவில்லை.

மொத்தத்தில் எந்திரன் – மனதில் நிற்கிறான். ஆம் அவன் அமரன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 22 September 2010

எந்திரனும் எதிர்வரப் போகும் தேர்தலும்

எந்திரன் எவ்வளவு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்பதை கருவில் உள்ள குழந்தை கூட சொல்லும். பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் இப்பொழுதெல்லாம் லீவ் கடிதங்கள் “As I am suffering from “yenthiran” fever, I kindly request” , என்று எழுதப்படுகின்றன. இனி பாலாபிஷேகம், பீராபிஷேகம் என்று களைகட்டும். ஏற்கனவே எல்லா வானொலிகளிலும் “அரிமாவும் கிளிமாஞ்சாரோவும்” ஒரு நாளைக்கு நூற்றி இருபதுமுறை ஒலிபரப்பப்படுகிறது. “எந்திரன் எப்போ வருவான் எப்போ வருவான்” என்று ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஜுரம ஏற்கனவே அபாய எல்லையைத் தொட்டுவிட்டது. இதற்கு சற்றும் குறையாதது வரப் போகும் சட்டமன்ற தேர்தல். தமிழ் நாடு 2011 ல் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறது.


இனி கூட்டணி, பேரணி என்று ஊரு நாடிக்கப்படும். ஏற்கனவே யாரு வேட்டி துவைக்கப் போகிறார்கள், இல்லை உள்பாவாடை துவைக்கப் போகிறார்கள் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு சீட்டு, ரெண்டு சீட்டு கட்சியெல்லாம் இப்பொழுதே துண்டு போட்டு ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டனர். முப்பது நாற்பது சீட்டுகள் பேசும் கட்சிகள் முண்டியடித்து பேரம் பேசத் தொடங்கிவிட்டனர். இன்னொருக் கட்சி நானே ராஜா நானே மந்திரி என்று கூவிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சி ஒற்றர்கள் வைத்து வேவு பார்த்து கொண்டிருக்கின்றனர். உளவுப் படையின் அறிக்கையில்தான் கூட்டணி தர்மம் காக்கப்படுமா இல்லை தாக்கப்படுமா என்று தெரியும்.

ஆளுங்கட்சி அறிவிக்கப் போகும் இலவசங்கள் ஏலம் போகும். எதிர் கட்சி ஏளனப் பேச்சு எங்கும் எதிரொலிக்கும். லாரிகளுக்கு கிராக்கி ஏறும். டாஸ்மாக் விற்பனை விண்ணைத்தாண்டும். போஸ்டர் வியாபாரம் கல்லா கட்டும். தலைவர்களை வரவேற்க வெடி விற்பனை, ஏற்கனவே சிவகாசிக்கு மொத்த ஆர்டர் செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. இனி சந்து முனைகளில் பந்தல்கள் பெருகி மைக் செட் நூற்றி இருபது “டெசிபலை” தாண்டும். எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் பொது ஜனம்.

எந்திரன் வெல்லுவானா?

அடுத்த ஆட்சி அய்யாவா? இல்லை அம்மாவா?, இல்லை ஐயைய்யாவா?, இல்லை அம்மையாவா?, பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

மற்றைய முடிவு தெரிய சில மாதங்கள் ஆகும்.

அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 15 September 2010

வீடு

செங்கலும், மரமும் வைத்துக் கட்டி


தங்க இடமும், பாதுகாப்பும் தந்ததால்

எங்கள் மதிப்பினில் வீடாகியதா? இல்லை

அன்பைக்கொட்டி பல கதைகள் சொல்லித்தந்த

பண்பை வளர்த்த தாத்தா அறையினாலா?

மென்மையாக எங்கள் தலையை கோதி

அன்பை விதைக்கும் பாட்டியினாலா?

அடுப்படியில் உழன்று எல்லோரின்

அடிப்படை தேவைகளை அல்லும் பகலும்

அயராது தரும் என் அன்னையின் இடமா?

நாளெல்லாம் உழைத்து இந்த வீட்டின்

மாளாத தேவைகளை பூர்த்தி செய்து

ஓய்வெடுத்து உறங்கும் அப்பாவின் அறையா?

மழை நீரில் காகிதக் கப்பல் விட

ஏதுவாகும் எங்கள் முற்றமா?

மாவும் தென்னையும் நெடிது நின்று

பூக்கள் பூத்துசொரியும் தோட்டமா?

உற்றமும் சுற்றமும் அல்லும்பகலும்

வந்து செல்லும் வாசலா?

வீடு என்பது எது?

Follow kummachi on Twitter

Post Comment

Friday 10 September 2010

கலக்கல் காக்டெயில்- 8

மெகா சீரியல்


சமீபத்திய சூடான விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டம் தான். தோண்ட தோண்ட தினமும் புத்தம் புதிய தகல்வல்கள். குள்ள நரி கம்ரன் அகமல் சிட்னி டெஸ்டை தோற்க காரணம் ஆனவர். இதில் நம்ப பாதாள புகழ் தாவூதிர்க்கு ₹ நாற்பது கோடி நஷ்டமாம். அடாடா இப்பவே கண்ணை கட்டுதே. எனக்கு என்னமோ முக்கால்வாசி விளையாட்டுக்கள் நடத்தபடுபவர்களாலேயே முடிவுகள் நிர்ணயிக்கப் படுகின்றனவோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இதற்கு உதாரணம் சமீபத்திய முத்தரப்பு ஒரு நாள் போட்டி. ந்யுஜிலாந்து இந்தியாவிடம் தோற்று இந்தியா இறுதிப் போட்டியில் வந்ததே முன்னேற்பாடு என்று தோன்றுகிறது.

அட போங்கப்பா விடிய விடிய விளையாட்டை பார்பதற்கு பதில் மெகா சீரியலே தேவலை. வாழ்க மெகா சீரியல்.



கவிதை

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்

பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்!

பாதாதி கேசமும் சீரான நாயகன்

பளிச்சென்று துணைவி வாழ்க!

படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்

பாதியாய்த் துணைவன் வாழ்க!

தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு

என்றெண்ணியே தலைவி வாழ்க!

சமகால யோகமிது வெகுகால யாகமென

சம்சாரம் இனிது வாழ்க!

- கவிஞர் கண்ணதாசன் -



ஜோக் (++18 மட்டும்)

செக்கப் (Checkup), பிக்கப்( pickup)புக்கும் என்ன வித்தியாசம்.

நர்ஸ் நம்ம கையப் பிடிச்சா அது செக்கப்பு.

நாம நர்ஸ் கையப் பிடிச்சா உடனே பிக்கப்பு.



வெண்டைக்காய்க்கும், முருங்கைக்காய்க்கும் என்ன வித்தியாசம்?.

வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா போடலாம்.

முருங்கைக்காய் சாப்பிட்டா கணக்கு டீச்சர........................., கணக்கு பண்ணலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 9 September 2010

அடை மழையும் என் தூங்காத இரவும்

மழை என்றாலே எனக்கு இன்னும் அந்த நினைவு போகவில்லை. இன்று நினைத்தாலும் அந்த தூங்கா இரவு என்னுள் பயம் பரவ செய்யும். சென்னையில் ஒரு அக்டோபர் தினம். அன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை. முதல் நாள் இரவு சற்று ஒய்ந்துவிட்டு அன்று காலை மழை வலுக்கத் தொடங்கிவிட்டது. நான் கம்பெனிக்குப் போகவில்லை. நான் விடுவிக்க வேண்டியவன் எனக்குப் பதில் காலை ஷிப்டில் தங்கிவிட்டான். என் தம்பி தங்கைகளுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை.


கடமை உணர்ச்சி தவறாத என் அப்பா வழக்கம் போல் ஆபீசுக்கு கிளம்பி விட்டார். அவரது பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஹவாய் சப்பலுடன் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்பிவிட்டார். மதியம் வரை விடாமல் மழை கொட்டிகொண்டிருந்தது. தெருவெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு தம் அடிக்கக்கூட வெளியில் செல்ல முடியவில்லை. எப்படியோ மாலை வரை தள்ளிவிட்டேன். நான்கு மணிக்கே இரவு எட்டுமணி போல் இருட்டு. இரவு ஏழு மணியாகியும் அப்பா இன்னு வீடு திரும்பவில்லை. அப்பாவைத் தேடிக்கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகலாமென்று கிளம்பினேன். போகும் வழியில் அப்பாவுடன் வேலை செய்பவர் வீடு இருந்தது. அவர் வீட்டில் சென்று அவர் வந்துவிட்டாரா பார்க்கலாம் என்று கதவைத் தட்டினேன். அவர்தான் கதவைத் திறந்தார். அப்பா இன்று மதியம் ஒரு மணிக்கே ஆபிஸை விட்டு கிளம்பிவிட்டார் என்றார். ரயில்வே ஸ்டேஷன் சென்று வண்டி வந்ததா என்று பார்க்கப் போனால் அங்கே ஒரே கும்மிருட்டு. ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு வந்து அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா மிக தைரியசாலி, கவலைப் படாதே அப்பா வந்து விடுவார் என்றாள்.இரவு மணி பத்து ஆகியது. உறங்கச் சென்றோம். எனக்கு அப்பாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலை. உறக்கம் பிடிக்கவில்லை. இரவு மணி இரண்டு ஆகியது. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியாது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நான் கம்பெனிக்கு கிளம்பவேண்டும். அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இப்பொழுது எல்லோரையும் கவலை ஆட்கொண்டது. நான் கம்பெனி செல்லவில்லை. மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேரம் ஆக ஆக எல்லோரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. கிட்ட தட்ட என் தம்பி தங்கைகள் அழும் நிலைக்கு வந்து விட்டார்ககள். மணி எட்டு ஆகிவிட்டது. மழை வலுத்து விட்டது. நானும் என் தம்பியும் குடையை எடுத்துக் அப்பாவை தேடி கொண்டு கிளம்பினோம். ஸ்டேஷன் வரை சென்றேன் வண்டி வந்தத் தடயம் ஏதுமில்லை. அப்பாவை காணவில்லை.

பயம் ஏற ஏற வீட்டிற்கு திரும்பினேன். என் தங்கை வெளியில் அப்பா எங்கே என்றாள்?. இல்லை காணவில்லை என்றேன். தம்பியும் திரும்பி வந்தான். அப்பா வரவில்லை.

அம்மா இப்பொழுதும் தைரியமாக இருந்தாள். அப்பா தன் தங்கை வீட்டிற்கு போயிருப்பார்கள் கவலைப்படாதீர்கள் என்றாள்.

சுமார் பத்து மணிக்கு அப்பா வீட்டிற்கு வந்தார். இரவு முழுதும் கண் முழித்து சிவந்த கண்களுடன் வந்தார். எங்கள் கவலையைக் கண்டு அப்பா ஆச்சர்யமுற்றார். அவர் மதியம் மூன்று மணிக்கு வண்டியில் ஏறி இருக்கிறார். வண்டியில் நல்லக் கூட்டம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும்பொழுது இறங்க முடியவில்லை. வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கும் பொழுது மின்சாரம் நின்று போய் வண்டி இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவே நின்று இருக்கிறது.

மறு நாள் மின்சாரம் வந்தவுடன் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மறு வண்டு பிடித்து வந்திருக்கிறார்.

எங்கள் எல்லோருக்கும் மழை என்றாலே அந்த நியாபகம் வந்து இன்னும் எங்களை பயமுறுத்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 7 September 2010

கந்தன் வளைகுடாதிரும்பி (Gulf return)

கடன உடன வாங்கி


கைய கால புடிச்சி

காசு மேல காச வச்சி

கல்லிவெள்ளி விசா வாங்கி

கள்ளத்தோணி ஏறி

கடல் கடந்து

கடும் வெய்யிலில்

கட்டிடங்கள் கட்டும்

கடினத் தொழிலில்

காசு பணம் சேர்த்து

கனவுலகில் வாழ்க்கை.





காலம் பல கடந்து

ஊருக்குத் திரும்புகையில்

உற்ற சுற்றம் கூடி

பெட்டி பிரித்து

பொருட்கள் சூறையாடல்

பரிவுடனே தாயிடம்

உனக்கு என்ன வேணும்

என்று வினவ

“கந்தன் நல் வாழ்வு”.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 3 September 2010

இரண்டு செய்திகள்---நல்லா அல்வா தராங்கப்பா

இன்று இரண்டு செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று உமாசங்கர் மீண்டும் பணி நியமனம். தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கர் டான்சி உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது மாநில அரசுக்கு விழுந்த அடி. ஊழலை அம்பலப் படுத்தியதற்காக பழைய கோப்பை தூசி தட்டி எடுத்து மாநில அரசு அவரை வீண் பழி சுமத்தி தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உமா சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,


மறுபடியும் தர்மம் வெல்லும்.

இரண்டாவது செய்தி, கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிகெட் வீரர்களை ஐசிசி நீக்கியிருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் எங்கு சென்றாலும் தொல்லைதான். மிகவும் ஒழுக்கமானவர், மத நெறிகளை கடைபிடிப்பவர் என்று சொல்லப் பட்ட சயீத் அன்வர், சக்லைன் முஷ்டாக் சவுத் ஆப்ரிக்காவில் பாரில் பௌன்செர்களிடம் அடி வாங்கிய செய்தி சில வருஷங்களுக்கு முன்னால் நடந்தது உலகறிந்த விஷயம். இப்பொழுது அமிர, ஆசிப், பட், மூவரும் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் வரும் செய்திகள் பாகிஸ்தான் அரசை உலக அரங்கின் முன் சங்கடப் படுத்தியிருக்கிறது.

ஆதலால் பாகிஸ்தான் இப்பொழுது இந்தியாவை இதற்கு குறை சொல்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்திய உளவு அமைப்பான ரா(RAW) தான் காரணமாம். நல்லா யோசிக்கிரானுங்கப்பா. சரத் பவார் இதை திட்டமிட்டு செய்ததாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட்டை சூது கவும்,


அதை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவும்.

சும்மா ஒரு ப்லோல வந்திடுச்சு.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 September 2010

கலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)

பாசத்தலைவனுக்கு பாராட்டு




மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு நீர்பாசன வசதியை மேம்படுத்த இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ஆயிரம் கோடியில் வெறும் இருபது கோடியே பெற்றுக் கொண்டு அதற்கு உண்டான திட்டத்தை இன்னும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லையாம்.

ஆனால் மற்ற எல்லா மாநில அரசுகளும் இந்த பணத்தை சரியாக உபயோகப் படுத்தியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆந்திர அரசு ஆயிரம் கோடியை உபயோகித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது சரி நம்ம அரசு எவ்வளவு வேலைதான் செய்வார்கள். இப்பொழுதுதான் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் மானாட மயிலாட, குடும்ப விருத்தி, திரையுலகம் எத்தனை வேலை கவனிக்க வேண்டியிருக்கிறது, இதெல்லாம் என்ன ஜூஜூபி.



ரசித்த கவிதை



பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா - நான்

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா

வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்

படிச்சிட்டு வாரேண்டா - சிலர்

படிக்க மறந்தது நெறைய இருக்குப்

படிச்சிட்டு வாரேண்டா.

நன்றி: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்



ரசித்த ஜோக்

கணவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் மனைவி அவனிடம் “ஏங்க இந்த குளியறை குழாயில் தண்ணீர் வரவில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க என்றாள்.

அதற்கு அவன் எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் வழக்கம்போல் அவன் வீடு திரும்பியவுடன் “ஏங்க இந்த ஹால் பேன் வேலை செய்யவில்லை கொஞ்சம் சரி செய்யுங்க” என்றாள்.

அவன் இம்முறை மிக எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ஏலேக்ட்ரிஷியன் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் அவன் வீடு திரும்பியவுடன் குழாயும் பேனும் ரிப்பேர் ஆகியிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்டான். அதற்கு அவள் உங்க நண்பர் வந்திருந்தார், அவரிடம் ரிப்பேர் செய்ய சொன்னேன் என்றாள்.

உங்க நண்பர் ரிப்பேர் செய்வதற்கு நல்ல சாப்பாடோ இல்லைக் கட்டிலில் விருந்தோ அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹோ அப்படியா என்ன சமையல் செய்துப் போட்டாய் என்று கேட்டான்.

அதற்கு அவள் “என் நெற்றியில் என்ன சமையல்காரி என்று எழுதியா ஒட்டியிருக்கு” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 September 2010

நான் எப்படி பதிவரானேன்?

ஓடி ஓடி ஆணி பிடுங்கிய என்னை குத்த வச்சு ஆணி பிடுங்க வச்சுட்டான் டேமேஜர். போதாகுறைக்கு ஒரு சப்ப மூஞ்சி செக்கரேடரி வேற இல்லாத ஆணியப் பிடுங்க. ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியலை. மூன்றாம் நாள் டேமஜரிடம் போய் சார் இங்கே ஆணியே இல்லை ஸார், என்னை பழைய இடத்திலேயே போஸ்ட் பண்ணிடுங்க ஓடி ஓடி ஆணி பிடுங்கறேன் ஸார்னு கெஞ்சினா, போயா போய் ஒரே ஆணியே அடிச்சு அடிச்சு பிடுங்குன்னு கடுப்பேத்தி அனுப்பிச்சுட்டான்.


ரிசெஷன் டைம் இதுக்கு மேலே கேட்டா இந்த ஆணிக்கே ஆப்பாயிடும் என்று ஒரே ஆணிய அடிச்சு அடிச்சுப் பிடுங்கிட்டு இருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் ஒரே ஆணி அடிச்சு அடிச்சு பிடுங்கினதுல தலை மொண்ணை ஆயிடுச்சுன்னு, பக்கத்து ஆபீஸ் நண்பனை பார்க்கப் போனேன். அவன் ஐ.டி டிபார்ட்மென்டில் இல்லாத ஆணியப் பிடுங்குறபய.

என்னை பார்த்தவுடன் நீ எங்கேடா இங்க ஆபீஸ் பக்கம், நீ சைட்ல ஆணி பிடுங்கறவனாச்சே? என்று எதோ பைவ் ஸ்டார் ஹோட்டலில் நுழைந்த பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறான். சரி அவனோட டீ குடிக்கும் பொழுது ஆபீசில் கணினியில் எல்லா தமிழ் பத்திரிகைகள், ப்ளாக் எல்லாம் படிச்சிட்டிருக்கான். ஏண்டா உனக்கு வேலை கிடையாதா என்றால், சும்மா நொன்ன பேச்சு பேசாத, வந்தோம டீ குடிச்சமா அப்படியே போய்க்கினே இரு அப்படின்றான். அப்புறம் அவன்தான் எனக்கு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லிக்கொடுத்தான். இதில என்னடா எழுதறதுன்னு கேட்டா எதவேனுன்னா எழுது சும்மா ரப்ச்சர் பண்ணாதே போய்க்கினே இருன்னுட்டான்.

சரின்னு வீட்டுக்கு வந்து இன்னா எழதுறது அப்படின்னு யோசிச்சு எவனோ ஒரு திருமவன் பழத்தின் பெருமையெல்லாம் எழுதினதை கோப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவுப் போட்டேன். ரெண்டு நாள் பார்த்தேன் எவனும் சீண்டினதா தெரியலே. அடுத்து கொஞ்சம் சுமரா ரூம் போட்டு யோசிச்சு ஒன்னு எழுதி அடுத்தப் பதிவப் போட்டேன். அது தமில்ஷ்ள ஒரு நாலு ஒட்டு வாங்கி அங்கேயே நின்னுது.

அதே பதிவிலேயே நான் புத்தம் புது கன்னிப் பதிவர் அதால ஓட்ட நல்லா குத்துங்கப்புன்னு ஓரு வேண்டுகோளையும் போட்டேன். அதுக்கு ஒரு மவராசன் இந்த மாதிரி அழுவர வேலை எல்லாம் வச்சிக்காத, நிறையப் படி, நல்லா எழுது, அப்புறம் முதலில் உன்னோட அவதார்ல ஒரு அட்ட பிகர போட்டிருக்கியே அத மாத்து அப்படின்னு அறிவுரை பின்னூட்டம் கொடுத்துட்டான். போதாகுறைக்கு அவனோட முதல் பதிவு ஐம்பது ஒட்டு வந்கிச்சின்னு டிஸ்கி வேறு.அந்த இரண்டாவாது பதிவு முக்கி முக்கி எட்டு ஒட்டு வாங்கி பிரபலமாக அப்படியே நின்னுச்சு.

இதெல்லாம் வேலைகாவதுன்னு இந்த முறை குத்த வச்சி யோசிச்சு பழைய அனுபவமா “துணை நடிகையும் வாழைக்காயும்” அப்படின்னு போட்டேன். அது மவனே நிறைய ஓட்ட வாங்கி பிரபலமாச்சு.

அடடா மவனே தலைப்புல கீதுடா சூட்சுமம் அப்படின்னு யோசிச்சு, “அத்தையுடன் நாங்கள் கண்ட பிட்டு படம்” “மொட்டை பாப்பாத்தி குட்டைல விழுந்தா” “என் கடப்பாரையும், சரோஜாவின் தேக்சாவும்”, அப்படி இப்படின்னு தலைப்பு குடுத்து இப்போ சுமார போவுது.

இப்போ மறுபடியும் அந்த வெறும்பய ஐ.டில ஆணி பிடுங்கறவன் பார்த்துட்டு எப்போ பிரபல பதிவர ஆகப்போறேன்னு கேட்கிறான். அடபோடா அதுக்கு எல்லாப் பதிவரையும் வம்புக்கு இழுக்கணும், எதிர் பதிவு போடணும், மோட்டுவளைய பார்த்துக்கிட்டு குந்தனும், ஓடி ஓடி ஆணி புடுங்கி நானே அம்பேல் ஆயிட்டேன். அவனாண்ட “ஏண்டா பிரபல பதிவர்ன இன்னாடா” ன்னு கேட்டேன்.

மவனே இப்போ என்னப் பார்த்தா காலிடுக்கில வால வுட்டுகின்னு ஓடற பொட்டை நாய் போல ஓடுறான்.

Follow kummachi on Twitter

Post Comment