Tuesday 24 July 2012

பதிவிற்கு இடைவேளை

அன்புள்ள வலைப்பூ நண்பர்களே,


வெகுவாக எதிர்பார்த்து ஒரு வழியாக இன்று விடுமுறை தொடங்குகிறது. இன்று இரவு ரோமிற்கு பயணம். பின்னர்இரண்டு வாரங்களுக்கு "ஐர ஐர ஐரோப்பா" என்று சுற்றுவதாக உத்தேசம். ஆதலால் எனது மொக்கைகளுக்கு தாற்காலிகமாக விடுமுறை.

நம்ம  பிரணாப் உலகம் சுற்ற தொடங்குமுன் தொடங்கிவிடவேண்டும் என்று பாடிகாட் முனீஸ்வரனுக்கு நேந்துகிட்டதால் மேற்படி பயணம்.

நேரம் கிடைத்து, கனெக்ஷனும் கிடைத்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் இடலாம் என்று எண்ணம்.

இரண்டு  வாரங்கள் தாங்குவதற்கு சில ஜொள்ஸ்


இன்னாது மொக்கைகள் இல்லையா?




ரெண்டுவாரம் இல்லையாம்? கிழிஞ்சுது போங்க.
வணக்கம்

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 21 July 2012

சரத்குமார் பயோடேட்டா


இயற்பெயர்
ராமநாதன் சரத்குமார்  
நிலைத்த பெயர்
சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்
தற்போதைய பதவி  
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.எ   
தற்போதைய தொழில்
அம்மாவிற்கு சொம்படிப்பது   
உபரி தொழில்
நடிப்பது    
மறந்த தொழில்
பத்திரிகையாளர்    
தற்போதைய சாதனை
அ.இ.அ.தி.மு.க.வின்(அறிவிக்கப்படாத) கொள்கை பரப்பு செயலாளர்
நீண்டகால சாதனை
நடிகர் சங்கப்பதவி, சமத்துவ மக்கள் கட்சி  ஆல் இன் ஆல் அழகு ராஜா.    
சமீபத்திய நண்பர்(கள்)
இனத்தவர்கள் அல்ல     
நீண்டகால நண்பர்
கேப்டன் (ஒரு காலத்தில்)   
மறந்தது   
டிரேவல்ஸ் சொந்தக்காரர்
மறக்காதது  
மகள்கள்  
சமீபத்திய எரிச்சல்
தே.மு.தி.க வளர்ச்சி   
நிரந்தர எரிச்சல்
துணைவியார் அம்மாவிற்கு சொம்படிக்காதது     
நம்புவது
தொண்டர்கள் (இருந்தால்)    
நம்பாதது
அம்மாவின் எண்ணங்கள்   
பிடித்த பல்லவி
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
பிடிக்காத பல்லவி
கண்ணுபட போகுதையா  
சட்டசபை
அம்மாவிற்கு காவடி எடுக்குமிடம்    


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 July 2012

கலக்கல் காக்டெயில்-80


மமதா ஊதிய சங்கு

மமதா கடைசியில் இந்த முடிவைதான் எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான். “தீதி” இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று முலயாம் துனைநாட அவர் அந்தர் பல்டி அடிக்கும்பொழுதே “தீதி” இந்த முடிவுதான் எடுத்தாகவேண்டும். அல்லது யாருக்கும் ஓட்டளிக்காமல் இருப்பது என்பது திரிணமூல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆக மொத்தத்தில் இது சங்மாவுக்கு ஊதிய சங்கே.

இனி ராஜ் பவனில் தூயிமிஸ்டும், ரசகுல்லாவும் விருந்தில் வைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

ராஜேஷ்கன்னா

எழுபதுகளின் இந்தி திரைப்பட உலகத்தின் சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கண்ணா மரணம், அவருடைய ரசிகர்களுக்கு இழப்பு. அவர் நடித்த ஆராதனா யாரும் மறக்கமுடியாது. ஆனந்த் தியேட்டரில் இந்தப் படம் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.

நாங்கள் கல்லூரியில் இருந்த காலத்தில் “ரூப்தேரா”வும், “மேரேசப்புநோக்கி”யும் தெரியவில்லை என்றால் சகாக்கள் டாஸ்மாக்கில் க்வார்டரை கால்மணிநேரமாக குடிப்பவன்போல் பார்ப்பார்கள்.


செங்கோட்டையனுக்கு ஆப்பா?

வருவாய்துறை அமைச்சராக இருக்கும் கே.எ. செங்கோட்டையோன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு என்.டி. வெங்கடாசலம் நியமிக்கப்பட உள்ளார்.

அம்மா ஆட்சியில இதெல்லாம் சகஜம்தான். மன்னார்குடி மாபியா நீக்கப்பட்ட பொழுது கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே “செங்கு” ஆடியதுதான் காரணமா? தெரியவில்லை.


ரசித்த கவிதை

மவுனம் சுமக்கும் பறவைகள்

குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.
நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.
மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பறந்து கொண்டிருக்கின்றது
மவுனத்தைச் சுமந்தபடி.
.............................நன்றி:கதிர்மதி


நகைச்சுவை


அந்த விமானம் இயந்திரக் கோளாறினால் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தது. அந்த இளம்பெண் எழுந்து நான் எப்படியும் சாகப்போகிறேன், சாகும் தருவாயில் ஒரு பெண்ணாக முழுமைப் பெற்று இறக்க விரும்புகிறேன் என்று தன் உடைகளை எல்லாம் களைந்து எறிந்தாள்.

பின்னர் “இங்கு உள்ளவர்களில் எவனாவது ஒரு நல்ல ஆண்மகன் கடைசிமுறையாக என்னை பெண்ணாக உணர வைக்க முடியுமா?” என்றாள்.

அந்த இளைஞன் எழுந்து தன் சட்டையைக் கழற்றி “இந்தா இதற்கு இஸ்திரி போட்டுக் கொடு” என்றான்.

இந்த வார ஜொள்ளு 




 
18/07/2012

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 July 2012

கண்ணீரில் பிழைக்க வைத்தான்


இன்று காலை எழுந்தவுடன் செய்தித்தாளில் கண்ட “அமெரிக்க போர் கப்பல் மீன்பிடி படகு மீது துப்பாக்கி சூடு” என்ற செய்தி இன்றைய நாள் முழுவதும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. நானும் கடல் வாசி என்பதால் இந்த மீனவர்களின் பிழைப்பு பற்றி நன்கு தெரியும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மீன்பிடி தொழிலின் முதலாளிகள் உள்நாட்டவரே. அவர்களிடம் சொற்ப கூலிக்கு வேலை செய்பவர்கள் தான் இந்த மீனவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நமது தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியிலிருந்து வந்தவர்களே. சிறுபான்மையினர் ஈரானியர்கள்.

நான் வேலை செய்யும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் இந்த மீன்பிடி படகுகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் அவ்வாறு அவர்கள் தவறாக நுழைந்து விட்டால் பெறும்பாலும் நாங்களே அவர்களை தொடர்புகொண்டு அந்த இடத்தை விட்டு போக சொல்லிவிடுவோம். அவர்கள் தமிழர்கள் என்பதால் எங்களிடம் உள்ள தமிழரையோ இல்லை மலயாளியையோ அனுப்பித்து அவர்களிடம் பேசி உண்மையை தெளியப்படுத்துவோம். ஆனால் அவர்கள் கடலோர காவற்படையிடம் சிக்கிவிட்டால் நிலைமை ரொம்ப மோசம். தற்பொழுது ஜி.பி.ஆர்.எஸ் போன்ற கருவிகள் இருந்தாலும் அவர்கள் வலைவீசுமிடம் மீன்கள் அதிகம் நிறைந்த எங்களது இடம்தான். அவர்களின் பிழைப்பிற்கு அவர்கள் எல்லைதாண்ட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

இன்று காலை செய்தியிலோ அமெரிக்கா கப்பற்படை இவர்களை அருகில்  வரவேண்டாம் என்று சொல்லியும் இந்த அப்பாவி மீனவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளதாக தெரிகிறது. தற்பொழுதுள்ள அரசியல் நிலைமையில் அமெரிக்க போர் கப்பலும் இரானிய தற்கொலை படை என்று நினைத்து  அதிக ரிஸ்க்  எடுக்காமல் சுட்டதில் அப்பாவி “சேகர்” பலியாகியுள்ளார்.
இங்கே ஒரு பலியானது மிகவும் வருத்தம் தருகிறது. அதற்கு வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாயும், அமைச்சர் கிருஷ்ணாவும் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் நம்ம அண்டைநாடான ஸ்ரீலங்கா தினமும் நம்முடைய தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டிருப்பதில் மத்திய அரசு எந்த வித அக்கறையும் காட்டாதது வேதனையாக உள்ளது.  நம்முடைய முதலமைச்சர்களும் கடிதம் எழுதி எழுதி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு இருந்த “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற எழுச்சி எல்லாம் இப்பொழுது அலைக்கற்றையில் அடிபட்டு போயிருக்கிறது.

என்று விடியுமோ? 





.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 July 2012

மலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்



நல்லாத்தான் ஆளுறாங்கப்பா. ஒரு கூட்டம் குடும்பத்தை நிறுத்தி கொள்ளையடிக்குது, தமிழை பேசி தாலியறுக்குது என்று மக்கள் நல்லா ரோசனை செய்து இன்னொரு கூட்டத்தை கொண்டு வச்சா அவிக செய்யற அலப்பறை தாங்க முடியலை. பிரச்சனை பிரச்சனை என்று டாஸ்மாக் போனா அங்கே ஒரு பிரச்சனை கூல் இல்லாத பீரு போல ....ண்டிய காட்டி ஆடிச்சாம்.

கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையிலே வையின்ற கணக்கா அம்மா கொடநாட்டில குந்திக்கின்னு கூடுவாஞ்சேரியில கக்கூசு அடைப்புன்னா கூட பிரதமருக்கு கடிதம் எழுதிகிட்டு இருக்கு.  இங்கே அமைச்சருங்க மலையேறிய ஆத்தா எப்போ மலை இறங்கும் நாம பொடனில புழுதி பட ஓடி சொம்படிக்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


அங்கே தான் அப்படி என்றால் தமிழீன தலைவர் டெசோ மாநாடு, தமிழீழம் என்று குரல் விட்டு தொங்கிய கட்சியை தூக்கி நிமிர்த்தலாம் என்றால் அலைகற்றை ஊழல் அரை வேட்டியையும் கோமணத்தையும் உருவி விட்டதால் செட்டியார் பேசிய இரண்டாம் நிமிடம் டெசோ மாநாட்டில் தனி தமிழீழம் கேட்கமாட்டோம் என்கிறார்.

பாவம் அவரு நிலைமை அப்படி, சரி வூட்லயாவது நிம்மதி கிடைக்குமென்றால் அங்கே மனைவி, துணைவி மகள் மகனென்று ஆயிரம் பிரச்சினைகள்.

சிங்கள வீரர்களுக்கு இந்திய அரசாங்கம் ராணுவ பயிற்சி அளிப்பதை எதிர்த்து அம்மா சும்மா கடிதம் கடிதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கு எல்லா கடிதங்களையும் தொடைச்சிப் போட்டுடுறாரு போல. தாம்பரத்தில் பயிற்சி கூடாதென்றால் நாங்க குன்னூருக்கு போவோம் என்று பூச்சாண்டி காட்டிகொன்டிருக்கிறார்கள். மொத்தத்தில் ஈழத்தமிழர்களை வைத்து எல்லோரும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்


அப்பாவி ஈழத்தமிழனோ கள்ளத்தோணியேறி எட்டாயிரம் மைல் கடந்து உயிரைப் பணயம் வைத்து அகதியாக ஆஸ்திரேலியாவில் புகலாம் என்ற நப்பாசையில் சிங்கள போலீசிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்.


அட எப்படியோ போங்கப்பா, நம்ம கவலையெல்லாம் நாளை பா.ம.க வின்  டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா?



Follow kummachi on Twitter

Post Comment

Saturday 14 July 2012

பதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ


பதிவு போட ஆரம்பித்த நாட்களில் இருந்தே எனக்கு ஒரு பிரச்சினை. அதனுடைய உண்மை எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். பிரச்சினை இதுதான். நான் மூளையை (தக்காளி அது இருக்கா என்றெல்லாம் கேக்கப்படாது, ஆமாம்) கசக்கி பிழிந்து அனுபவம் அது இது என்று ஏதோ ஒரு சுமாரான நடையில் எழுதி ஒரு பதிவ போட்டா அது எப்படியோ ஹிட் ஆகி நிறைய வோட்டுகளையும் பின்னூட்டங்களையும் பெற்ற பின்பு அப்பீட் ஆவதே வழக்கமா போச்சு. அதற்கு காரணம் பெரும்பாலும் நான்தான்.
தக்காளி ஒட்டு வேணுமுன்னா நான் என்னய்யா செய்வேன்?

கை நடுக்கத்தில் (அதற்குதான் சரக்கடிக்கும் பொழுது பதிவிடக்கூடாது)  அடுத்த பதிவு போடும் பொழுது அப்பீட் ஆகிவிடும். இப்படித்தான் “கமலா டீச்சர்” என்று பதிவு போட்டு அது விகடன் குட் ப்லோக்ஸ் பிரிவில் வந்து இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது.

தற்பொழுது “தெரு நாய்” என்று ஒரு பதிவு போட்டேன். நாய் வளர்க்கும் ஆசை என்ற என் மகளின் ஆசையை நிராகரித்த என் மனைவியின் மனநிலை எப்படி காலப்போக்கில் மாறியது என்பதை விளக்கிய பதிவுதான் இது. அதுவும் இன்று காலை காணாமல் போய்விட்டது. பிற்பாடு அதை மீள்பதிவாக போட்டது ஒரு கிளைக்கதை.
அட்ட பிகர்தான் ஆனால் அள்ளிடுவோமில்ல

அதே பிட்டு ரேஞ்சில் பதிவு போட்டால் நம்ம டாஸ்மாக் வருமானம் போல் எக்குதப்பாய் எகிறி ஹிட்டாகிவிடும். இதில் உள்ள நியாயம் நம்ம பி. சிதம்பரம் விலைவாசி ஏற்றத்தை நக்கலடிப்பது போல் மற்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால் எனக்கு புரிவதில்லை.

ஆதலால் இனி முடிவு செய்துவிட்டேன். அப்பப்போ பிட் பதிவு போடுவது என்று.

வாழ்க "பிட்" வாசகர்கள், வாழ்க "பிட்" பதிவர்கள்,

பிட்டே வணக்கம்.

Follow kummachi on Twitter

Post Comment

தெரு நாய் (மீள்பதிவு)


“நாய் பேச்சே இனிமேல் வீட்டுல யாரும் எடுக்கக்கூடாது”
இது வீட்டம்மாவின் கட்டளை. இதற்கு காரணம் என் மகள்தான். அவள் வகுப்புத் தோழியின் வீட்டில் அழகான நாய்க்குட்டிகளைக் கண்டதும் அதில் ஒன்றை நம் வீட்டில் வளர்க்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.  அதைக் கேட்டுதான் வீட்டு அம்மா இட்ட கட்டளை. அவள் பல்லியைக் கண்டாலே அலறுவாள், நாய் என்றால் கேட்கவா வேண்டும். அதை கேட்டு என் மகளின் முகம் மாறியது. அவளை எப்படியோ சமாதானப் படுத்தி “போய் வீட்டு பாடம் செய்” என்று அங்கிருந்து அனுப்பி வைத்தேன்.

அப்பொழுதுதான் வெளியே போய் விட்டு வந்த மகன் “எங்க அந்த நாயி ஏன் ஜாமெட்ரி பாக்சை எடுத்துக் கொண்டு விட்டது” என்று தங்கையை பற்றி புகார் செய்து கொண்டிருந்தான். 

“டேய் சும்மா இரு இப்பொழுதுதான் அம்மா நாய் பேச்சே எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாள் நீ வேறே” என்றேன். 

மனைவிக்கு நாயெல்லாம் வளர்க்கக்கூடாது, நாய் வளர்க்கிறது என்றால் நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என்றாள்.

இருந்தாலும் என் பெண்ணிற்கு நாய் வளர்க்கும் ஆசை போகவில்லை. புலம்பிக் கொண்டே இருந்தாள். சரி எந்த நாய் வளர்க்கலாம் சொல் என்றேன். உடனே உற்சாகமாகிவிட்டாள். இணையத்தில் எந்த நாய் உயர்ந்த வகை என்று தேட ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் உலகில் கிட்டதட்ட நூற்றி அறுபது நாய் வகைகள் (தெருநாய்கள் நீங்கலாக) இருப்பது தெரிய வந்தது. பொமேரேனியன் என்றால் வேண்டாம் ஒரே சத்தம் போடும், ராட்வேலார் ஐந்து வயதிற்குப் பிறகு நரமாமிசம் சாப்பிடும், அல்சேஷன் ரொம்ப குரைக்கும், ஜெர்மன் ஷெப்பர்ட், லெப்ரடார், டால்மேஷன், பக்ஹ்,  வேண்டாம் என்று  ஒவ்வொரு வகையையும் நிராகரித்துக் கொண்டு இருந்தோம். இந்தக் கூத்தெல்லாம் மனைவிக்கு தெரியாமால்தான்.

எதிர்த்த மனையில் அப்பொழுது வீடு கட்டி முடியும் தருவாயில் இருந்தது. அங்கிருந்த மணல் மேட்டருகிலேயே அங்கு வேலைய செய்யும் சித்தாள் குடும்பம் தங்கியிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள பத்து வயது சிறுமி ஒரு நாய்க்குட்டியை எங்கிருந்தோ கொண்டு வந்து வளர்த்து வந்தாள். குட்டி பிறந்து ஒரு மாசம் தான் ஆகியிருக்கும். அதன் தாய் எங்கே என்று தெரியாது. குட்டி கருப்பு கலந்த வெள்ளை நிறத்துடன் மிக அழகாக இருக்கும்.  

அன்று காலை எழுந்தவுடன் வண்டி நிறுத்துமிடத்தில் அது ஒடுங்கிக்கொண்டு இருந்தது. எதிர் வீட்டு அந்த சித்தாள் குடும்பத்தை காணவில்லை. நாய்க்குட்டி உணவு இல்லாமல் மிகவும் சோர்ந்து இருந்தது. என் மகள் அதற்கு வீட்டிலிருந்து பால்,  பிஸ்கட் எல்லாம் வைத்தாள். பிறகு அது எங்கள் வீட்டையே சுற்றி வந்தது. நாளடைவில் அது சுதந்திரமாக எங்கள் வீட்டு தோட்டத்திலும், மொட்டை மாடியிலும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு இருக்கும். சாப்பாடு வேளையில் வீட்டு கதவருகே வந்து அழகாக “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” போஸில் உட்கார்ந்து கொண்டிருக்கும். நாளடைவில் எங்கள் வீட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அது நன்றாக வளர்ந்து விட்டது. வீட்டிற்கு யார் வந்தாலும் குரைத்து விரட்டி விடும். குரியர் ஆட்கள் கம்பி கேட் அருகிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.

வீட்டில் மனைவி சமையல் எரி வாயு தீர்ந்துவிட்டது, ஏஜென்சிக்கு சொல்லி இருபது நாள் ஆகிறது இன்னும் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏஜென்சிக்கு போன் செய்தால் “ஸார் எங்கள் ஆட்கள் மூன்று முறை வந்தார்கள் நீங்கள் வீட்டில் இல்லையாம்” என்றான்.

வீட்டிலே இல்லையா? யார் சொன்னது நாங்க வீட்டிலே தான் இருக்கோம் அவரை இப்போ வர சொல்லுங்க என்றேன்.

அரை மணி கழித்து அவன் வந்தான், நாய் விடாமல் குரைத்தது. நான் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு திரும்ப ஆயத்தமானான்.

நான் அவனை கூப்பிட்டு வாயா வீட்டிலே தான் இருக்கோம் என்றேன், அதற்கு அவன் ஸார் நாய் இருக்குது அதை பிடித்து கட்டுங்க இன்னா ஸார் மூணு தபா வந்தேன் இந்த நாயால திரும்பப் பூட்டேன் ஸார் என்றான்.  

“யோவ் அது தெரு நாய் நாங்க வளர்க்கிறது இல்லை ஒன்றும் செய்யாது வா, குரைக்கிற நாய் கடிக்காது உனக்கு தெரியாதா வா” என்றேன்.

“அடப்போ ஸார் அது எனக்கு தெரியும், உனுக்கு தெரியும் நாய்க்கு தெரியுமா” என்றான். “ஸார் உனுக்கு அடுத்த முறை சிலிண்டர் வேணுமென்றால் நாயை விரட்டு” என்றான்.

“அது தெரு நாய்ப்பா நாங்கள் வளர்க்கிறது இல்லை” என்றதற்கு “சுடுதண்ணி ஊத்து ஸார் ஓடிடும்” என்றான்.

இதை கேட்டுக்கொண்டிருந்த மனைவி “என்ன சொல்லுறே நீ வாயில்லா ஜீவன் மேல் சுடு தண்ணி ஊத்துறதா, என்ன பேச்சு இது. உனக்கு பயமா இருந்தா எங்களிடம் சொல் நான் நாயை பிடித்துக் கொள்கிறன்” என்றாள்.
(இன்று காலை கலக்கல் காக்டெயில் பதிவிடும்பொழுது “தெருநாய்” என்ற பதிவு தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே மீள்பதிவு. இத்துடன் பல நல்ல உள்ளங்களின் விமர்சனங்களும் பாராட்டுகளும் நீக்கப்பட்டுவிட்டன.)

Follow kummachi on Twitter

Post Comment