Monday 6 June 2011

எம். ஆர். கே. ...........................டி.சி.டி, பி.டி.பி.சி.டி.

எங்கள் பார்ட்டி சங்கர் வந்தவுடன்தான் தொடங்கும். அவன் வானிலை அறிக்கை கேட்காமல் பார்ட்டிக்கு வரமாட்டான். பார்ட்டி என்பது எங்கள் அறுவரின் வாரக்கடைசியில் எல்லோரும் சேர்த்திருக்கும் பொழுது நடக்கும் “ஜலப்ரவாகம்”தான். இது எல்லா வாரத்திலும் நடக்காது. ஏனெனில் குமாருக்கும் எனக்கும் மூன்று வேலை ஷிப்ட் டூட்டி. ஆதலால் எங்களுக்கு சலவைக்கடை போல் பிரதி திங்கள் விடுமுறை என்று ஆரம்பித்து, சனி ஞாயிறு விடுமுறை வர எப்படியும் ஒரு ஒன்ரரை மாதம் ஆகிவிடும். இருந்தாலும் எப்படியாவது ஒரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லீவ், ஷிப்ட் சேன்ஜ் என்று போட்டுவிட்டு “தீர்த்தவாரி” ஏற்பாடு செய்து விடுவோம்.


சங்கர் மப்பில் கூட பில் கொடுக்கமாட்டான். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லுவான். அடுத்த முறை கொடுக்கிறேன் என்பான். தப்பித்தவறி கையில் காசு இருந்தால் கூட, இல்லைடா இந்த காசு “நாய் ............த்தில் தேனடை போல” தொட முடியாது என்பான். நாளைக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணம் என்பான்.

வானிலை அறிக்கை கேட்டு விட்டு ரமணன் நாளைக்கு மழை வரும் என்று சொல்லியிருக்கார் ஆதலால் நல்ல சில்லுன்னு பீர் சொல்லு என்பான். வெயில் மண்டையை பிளக்கும் என்று சொன்னால் விஸ்கி வாங்கி ராவாக அடிப்பான்.

நிற்க. தலைப்பில் எம்.ஆர்.கே. என்று போட்டுவிட்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு எம். ஆர். கேயைப்பற்றியது. பெரும்பாலும் நாங்கள் நல்ல மப்பில் கடையை விட்டு வெளியே வந்து கையேந்தி பவனுக்கு நடந்து செல்லும் பொழுது எதிரே எம். ஆர். கே தூய வெள்ளை நிறத்தில் அரை பாண்டும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வேர்த்து வியர்க்க வாக்கிங் போய்விட்டு எதிரே வருவான். இவனுக்கு வானிலை அறிக்கை எல்லாம் கிடையாது. ஒரு நாளும் நடையை விடமாட்டான். தண்ணி. ஊஹூம்.... வாசனை கூட பார்க்கமாட்டான். நல்ல கிரிக்கெட் பிளேயர். எங்களுக்கெல்லாம் அவன் எம். ஆர். கே, அவன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது இருந்தாலும் அவனது விளையாட்டு திறனால் அவன் நாங்கள் வசித்த இடத்தில் மிகவும் பிரபலம்,. எங்கள் கம்பெனியில் தான் அவனும் பணி புரிந்தான். எங்கள் கம்பனி அவனை சேர்த்துக் கொண்டதில் கிரிக்கெட் ரேங்கிங்கில் எங்கேயோ கடைசி இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஏன்டா உன் பெயர் இவ்வளவு சின்னது, பெயருக்கு முன்னால் இத்தனை எழுத்துக்கள் போட்டிருக்கிறாயே என்றால் மையமாக சிரிப்பான். பேருக்கு பின்னால் இருப்பது அவன் படித்த பட்டங்கள், மேலும் படிக்க இனி இல்லை என்பதால் மீதி எழுத்துக்களை முன்னால் போட்டுக் கொண்டாயோ என்று கிண்டலடிப்போம்.

வீட்டிற்கு மிகவும் அடங்கியவன். அவர்கள் குடும்பம் சற்றே பெரிய குடும்பம். நிறைய தம்பி தங்கைகள். அவன் அப்பா ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் அவர்களின் வசதிகள் பெருகலாயிற்று.

எம். ஆர். கே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பான். அவனது தெருவில் அவன் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருந்த மீனா அவனி “லவ்வி”னாள். பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எம். ஆர். கேவிற்க்கு அவன் அப்பாவிடம் சொல்ல பயம், அம்மாவிடம் சொல்லி சொன்ன பொழுது, அந்த மனுஷனுடன் நான் பேச முடியாது, வேணுமென்றால் உன் நண்பன் “என் பெயரை” சொல்லி அவனை பேச சொல்லு ஒரு சமயம் கேட்பார் என்று சொல்லிவிட்டாள். அதற்கு காரணம் உண்டு. அவனை எப்பொழுது பார்க்க சென்றாலும் அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவார். மற்ற என் நண்பர்கள் யார் போனாலும் ஏண்டா அவனை கூப்பிடறிங்க அவன் தண்ணியடிக்க வரமாட்டான் என்று ஏடா கூடமாக பேசுவார். ஒரு முறை என் நண்பர்கள் மற்ற எல்லோரும் என்னை பாரில் பில் செட்டில் செய்ய விட்டு வெளியே நின்று கொண்டிருந்த பொழுது அவர்களைப் பார்த்துவிட்டார். ஆதலால் அவருக்கு நான் மிகவும் நல்ல பையன் “ஒன்றுக்கு போகமாட்டான்” என்ற நினைப்பு. நானும் அதை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அன்று காலையில் நான் அவர்கள் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் எம். ஆர். கே காதலை சொன்னேன். எவடா அவள் போய் அவளை அழைத்து வா என்றார். நானும் மீனா வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வந்தேன். அவர் ஏதோ இரண்டு பேரையும் திட்டப் போகிறார் என்று நினைத்தேன், அதற்கு அவர் சற்றும் எதிர்பாராமல் அவளிடம் “நீ அவனக் கல்யாணம் செய்துகொள் ஆனால் அவன் குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டும். ஏன் என்றால் என் சம்பாத்தியத்தில் முடியாது என்றார். மீனா சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்.

பிறகு நான் பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றி ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுது எம். ஆர். கே வீட்டிற்கு போவேன். அவன் தங்கைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிந்த வெவ்வேறு திசையில் செட்டில் ஆகிவிட்டார்கள். எம் ஆர். கே வின் பையன் இப்பொழுது ஸ்கூல் லெவலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக மீனா சொன்னாள். எம். ஆர். கே இன்னும் நடையை விடவில்லை.

போன வாரம் மறுபடியும் சென்னை சென்றேன். பழையபடி நாங்கள் நண்பர் கூட்டம் வெகு நாட்களுக்கு பிறகு தீர்த்தவாரி. வழக்கம் போல சாப்பிட கையேந்தி பவனுக்கு வரும் வழியில் எம். ஆர். கே தரிசனம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றான். பின்பு நாங்கள் பார்க்கில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசி விட்டு வீடு போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. எழுந்தவுடன் அப்பா உனக்கு மீனா என்று யாரோ போன் செய்தாள், என்றார் அவருக்கு மீனாவை தெரியாது.

நான் எம். ஆர். கே வீட்டிற்கு போன் செய்தேன், போன் எடுத்தவர்கள் யாரும் பேசவில்லை. ஒரே அழுகை சத்தம்.

நான் விறு விறு என்று அவர்கள் வீட்டிற்கு போனேன்.

எம். ஆர். கே நடுக்கூடத்தில் கிடந்தான். அவன் அப்பா துணியால் வாயை மூடிக்கொண்டு ஏன் தோளில் சாய்ந்தார்.

என்ன வாழ்கை இது, நேற்று பார்த்தவன் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறான்.

அவன் முகத்தைப் பார்த்தேன், “அவன் இன்னும் சிரிப்பது போல் தோன்றியது”.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.