Friday 29 July 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 1


நான் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்கள் என் பார்வையில் ஒரு அலசல், இந்தத் தொடரை வாரம் ஒரு பதிவராக தொடர உத்தேசம்.

 முதலில் வந்தேமாதரம் சசிகுமார் (http://www.vandhemadharam.com/)

இவருடைய பதிவுகள் என்னைப் போன்ற கணினி அறிவு இல்லாத ஞான சூன்யங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனக்கு கணினியில் தெரிந்தது ஹார்ட்வேர், சாப்ட்வேர், மற்றும் அண்டர்வேர் மட்டுமே. இவருடைய பதிவுகளைப் படித்து என் வலைப்பூவில் ஓரளவுக்கு மாற்றங்கள் செய்திருக்கிறேன். இப்பொழுதும் எனது வலைப்பூவில் பிரச்சினை என்றால் நான் இவர் வலைப்பூவை மேய்ந்து எப்படியாவது என் பிரச்சனைக்கு உரிய இடுகையை கண்டு பிடித்து சரி செய்துவிடுவேன்.
சமீபத்தில் பிளாக்கர் தளத்தில் கூகிள் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்கிறது. அதற்கு இவர் படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்கம் அளித்த விதம் சூப்பர்.

இவருடைய பெட்டகங்களை ஆராய்ந்தால் நமக்கு பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்.
இதை தவிர இவர் இன்னும் பயனுள்ள தகவல்களை தருகிறார். சுஜாதாவின் பல சிறுகதைகளை பி.டி.எப் கோப்பில் அளித்திருக்கிறார். திரைப்படங்களை தரையிறக்கம் செய்ய அணுக வேண்டிய தளங்களை கொடுக்கிறார். இன்னும் இவர் தளங்களில் நிறைய பிரிவுகளில் நமக்கு கணினி சம்பத்தப் பட்ட அறிவுரைகளை அள்ளித்தருகிறார்.

இவருடைய கட்டுரைகளில் ஒன்று ஆபாச வலை பதிவர்களுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் ஆபாச எழுத்துக்களின் விளைவுகளை கூறும் விதம் சமுதாய நற்சிந்தனைக்கு சான்று.
மொத்தத்தில் நான் விரும்பி படிக்கும் ஒரு வலைப்பூ.

இவருடைய “டுடே லொள்ளு” சூப்பரோ சூப்பர்.
காணாமல் போன பதிவர்.

இந்த தலைப்பிலும் வாரம் ஒருவரை இடுவதாக எண்ணம்.

நைஜீரியா ராகவன்.

நான் வலைப்பூ தொடங்கிய காலத்தில் இவர் மிகவும் பிரபலம். இவருடைய துபாய் விஜயம் இரண்டு மூன்று வாரங்கள் வந்தது. எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இட்டு ஊக்குவிப்பார். இவர் தமிழ்மணத்தில் வாரம் ஒரு நட்சத்திரத்தில் வந்ததாக நியாபகம். தற்பொழுது இவருடைய பதிவுகளை பார்க்க முடியவில்லை. இவர் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறாரா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.



..................சூப்பர் ஸ்டார் பதிவர்கள் தொடரும்


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 27 July 2011

வீ டோன்ட் ஸீ டமில் மூவீஸ்


இந்த வசனம் “காதலிக்க நேரமில்லை” படத்தில் காஞ்சனா தன் அண்ணன் நாகேஷிடம் சொல்லுவதாக வரும். இன்று இணையதளத்தில் விமர்சனம் செய்வோர் இதற்கு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தமிழ் படமும் எங்கிருந்து தழுவியது என்று போட்டு அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுகிறார்கள். எதற்கு இந்த பீடிகை என்று யோசிக்க வேண்டாம்.

சமீபத்தில் வெளியாகிய “தெய்வத்திருமகள்” படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் எழுதி தனக்கே உள்ள பாணியில் ஐம்பது மார்க் கொடுத்திருக்கிறது. அதை வைத்து ஆனந்த விகடனில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதில் முக்கால் வாசி பேர் இது ஹாலிவூட் சினிமா “ஐ ம் ஸாம்” என்ற படத்தின் தழுவல் என்று எழுதியிருக்கிறார்கள். விக்ரமின் நடிப்பு ஷான் பென் நடிப்பை காப்பி அடித்திருக்கிறார் என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை, நாலு பன்ச் வசனம், இரண்டு குத்தாட்டம், நடிகையின் தொப்புள் கட்டாயம் காட்டப்படவேண்டும், காமெடி என்ற பெயரில் யாரையாவது கலாய்க்க வேண்டும்,கதாநாயகன் வில்லனை கடைசியில் பறந்து பறந்து அடித்து கத்தியால் குத்தி ரத்தம் சொட்டவேண்டும். அம்மா செண்டிமெண்ட் கட்டாயம் வேண்டும். இதையும் தாண்டி எவனாவது உணர்ச்சி பிழிய படம் எடுத்தால் தியேட்டரில் கூட்டம் இருக்காது. சரி விஷயத்திற்கு வருவோம்.

பின்னூட்டம் போட்ட முக்கால்வாசி பேர் இயக்குனர் குறைந்தபட்சம் நன்றி ஹாலிவூட் பட கதாசிரியருக்கு என்று போட்டிருக்க வேண்டுமாம். இதை போல் அபத்தம் வேறு எதுவும் கிடையாது. அந்த மாதிரி போட்டால் காபிரைட் ஆக்டில் மாட்டி தயாரிப்பாளரின் ஜட்டியை உருவிக்கொண்டு போய் விடுவார்கள். ஆனால் நம்ம ஊரு பாஸ்மதி அரிசிக்கும், மற்ற மூளிகைகளுக்கும் பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிய மற்ற வெளிநாட்டானை நாம் ஒன்றும் செய்யாமல் நமது தாராள மனதை பறை சாற்றுவோம்.

நான் தெய்வதிருமகளையும் இன்னும் பார்க்கவில்லை, ஐ ம் சாமையும் பார்க்க வில்லை. நம்ம ஊரில் ஆங்கில புலமை உள்ளவர்களே எல்லா ஆங்கிலப் படத்தில் வரும் நாலெழுத்து கெட்டவார்த்தை தவிர வேறு எதுவும் புரிவதில்லை எனும்பொழுது ஆங்கிலப் படங்களை பார்த்து அதை தழுவி, நமது கலாசாரதிற்கு ஏற்றபடி மாற்றிக் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களை ஆதரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிவுள்ள பேபி சாரா மிகவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்லுகிறார்கள். ஒரு சில காட்சிகள் மிகவும் உருக்கமாக எடுத்திருப்பதாக ஆனந்த விகடன் விமர்சனத்தில் போட்டிருக்கிறார்கள். எப்படியும் படத்தை ஒரு தடவை பார்ப்பேன். அடுத்த வருஷம் தீபாவளிக்கு சன் டி, கலைஞர் இல்லை ஜெயா டி. வியில் கட்டாயம் வரும்.  

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 26 July 2011

கலக்கல் காக்டெயில்-35


உன்னாலே நான் கெட்டேன் 

ராஜாவுடன் சி.பி.ஐ விசாரிப்பு தொடங்கியவுடன் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. ராஜா தன்னுடைய வாதத்தில் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எல்லாம் தெரியும். நான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். இது எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். சிதம்பரம் எனக்குத் தெரியாது என்கிறார். பிரதமர் வழக்கம்போல் மௌனிக்கிறார். நல்லா நாடகம் ஆடுகிறார்கள். இதை தோண்ட தோண்ட புதிய பூதங்கள் கிளம்புவது உறுதி. ராஜா ஒரே ஆளாக ஆட்டையைப் போட்டிருக்கமாட்டார் என்பது தான் பெரும்பாலாரின் அபிப்ராயம். ராஜாவிற்கு வக்காலத்து வாங்க வீரமணின்னு  ஒருத்தர் அப்பப்போ வந்து கூவிட்டு போவாரே எங்கே அவரை காணவில்லை?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

வாய்தாராணி

பெங்களூர் கோர்ட்டில் அம்மா நாளைக்கு ஆஜராகவேண்டும். இப்பொழுது அம்மா சார்பில் மூன்று புதிய மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். அம்மா வேலை பளு காரணமாகவும், மற்றும் முதலமைச்சர் பதவி, இசட் பிரிவு கண்காணிப்பில் இருப்பதால் நீதி மன்றத்தில் ஆஜராக முடியாது என்று ஒரு மனுவும், அவர் தரப்பு வக்கீல் வாதங்களை ஏற்கவேண்டும் என்று ஒரு மனுவும் இல்லை எனில் வீடியோ கான்பரசிங் மூலம் தம் வாதத்தை வைக்க அனுமதி கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனுக்களின் மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப் படுகிறது. இருந்தாலும் சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி அம்மா மீது கிரிமினல் குற்றம் உறுதி.

ஒ.பன்னீர்செல்வம் எதற்கும்  தயாராக இருங்க. அதிர்ஷ்டதேவதை உங்கள் டீக்கடை வாசலில் நிற்கிறாள்.
 
ஐ.எ.எஸ் படிப்பு வேண்டவே வேண்டாம்,  ஐந்தாம் கிளாஸ் போதும்  
தமிழ் நாட்டில் உள்ள கலெக்டர்களும் மற்ற ஐ.எ.எஸ் அதிகாரிகளும் தங்களுக்கு எப்பொழுது மாற்றல் ஆர்டர் வரும் என்று கலங்கியிருக்கிறார்கள். இந்த உத்தியோகத்தில் இது ஒரு தலைவலி. எப்பொழுதும் பெட்டி படுக்கை கட்டி வைத்து தயாராக இருக்கவேண்டும். இதில் இவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கைதான் மிகவும் பரிதாபம். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஊர் மாறி வெவ்வேறு  பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும். கொடுமைடா சாமி, அது சரி அம்மா ஆட்சின்னா இதெல்லாம் சகஜம்தான்.
இதற்குதான் வெறும் ஐந்தாம் கிளாசுடன் படிப்பை நிறுத்தினால் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து வட்டம், மாவட்டம்னு வளர்ந்து இன்று அமைச்சராகி ஏன் முதலமைச்சரே  ஆகி இதே போல மற்றைய ஆட்களைப் பந்தாடலாம். பிள்ளைகள் படிப்பைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பிற்பாடு கட்சியில் ஒரு பதவி கொடுத்து அமைச்சராக்கி விடலாம். எதற்கு இந்த ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம்?.
ரசித்த கவிதை  
தற்கொலை செய்தி
சில நொடிகள் கவனிப்பும்,
கூடவே ஒரு காப்பியும்
,
கட்டை விரலை

உயர்த்திக்காட்டும்

ஒரு ஃபேஸ்புக் "லைக்"குமாக,
உடனே மறந்து

போகக்கூடிய
சிறு நிகழ்வு மட்டுமே.
ஐ லைக் திஸ்.
- சின்னப்பயல்
மொக்கை
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."
"அதெப்படி?"
"மழையே பெய்யவில்லையே!"
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்?
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
ஜொள்ளுபடம்  

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 21 July 2011

கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

தலைவரே உங்க கட்சி போற நிலைமையைப் பார்த்தால் எங்களுக்கு இந்த பாட்டுதான் நியாபகம் வருது


நந்தவனத்தில் ஓராண்டி

அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

அறுபத்திரண்டில் அண்ணா தோற்றுவித்த ஒரு இயக்கம் அறுபத்தியேழில் ஆட்சியைப் பிடிக்கும் என்று காங்கிரஸோ இல்லை அப்பொழுதிருந்த நீதிக் கட்சியோ கனவிலும் நினைத்திருக்காது. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா, பெரியாரின் விமர்சனத்துக்கு ஆளானாலும் அவர் தோற்றுவித்த புதிய இயக்கம் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டது. அப்பொழுதிருந்த அமைச்சர் பரிவாரங்கள் அன்பழகன், ப.வு. ஷண்முகம், மதியழகன், நெடுஞ்செழியன், மற்றும் எம்.ஜி. ஆறும் நீங்களும் பெரியதாகப் பேசப்பட்டீர்கள். ஆனால் அண்ணாவின் மறைவிற்குப் பின் எம்.ஜி. ஆர் ஆதரவில் கழகத்தை உங்கள் கையில் கொண்டு வந்தீர்கள். நெடுஞ்செழியன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

கிட்டத்தட்ட அப்பொழுதிலிருந்தே உங்கள் குடும்ப ஆதிக்கம் தொடங்கியது. முதலில் முரசொலி மாறன், பின்னர் ஸ்டாலின், என்று ஒவ்வொருவராக கட்சிக்குள் கொண்டுவரப்பட்டனர்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார், தன் மக்கள் நலம் பேணுவார் என்று எதிர்த்த எம்.ஜி.ஆர் கழகத்திலிருந்து கழட்டிவிடப்பட்டார். ஆனால் அவர் புதிய கட்சி ஆரம்பித்து நீங்கள் எதிர்பாராத வெற்றியை சந்தித்து உங்களை பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்.

ஸ்டாலினின் நுழைப்பு கழகத்தின் போர் வாள் என்ற பெயருடன் நாடாளு மன்றத்தில் முழங்கிய வை.கோ வை விரட்டியடித்தது.

பின்னர் உங்களது குடும்ப ஆதிக்கம் எல்லாத்துறைகளிலும் கோலோச்ச தொடங்கியது. தயாநிதி, அழகிரி, கனிமொழி மத்திய அமைச்சரவையில் போராடி சேர்க்கப்பட்டது, இதை எல்லாம் வேடிக்கை பார்த்த அடிமட்ட தொண்டர்கள் வாயடைத்து நின்றனர். கழகத்திற்காக உழைத்து தங்களுக்கும் ஒரு நாள் காலம் வரும் என்று எண்ணியிருந்த அவர்கள் கனவில் இடி விழுந்தது. உங்களுடன் நட்பாக இருந்த ஒரு காரணத்தால் அன்பழகன் வாய் மூடி இருந்தார்.

ஆனால் உங்கள் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தவுடன் மற்றைய உங்களது அமைச்சர்களும் தங்களது வாரிசுகளுக்கு தொகுதி கேட்ட பொழுது உங்களின் மனசாட்சி பதிலளித்தது.

இதை எழுதி உங்களின் நடத்தையை தட்டி கேட்ட பத்திரிகைகளுக்கும் சாதிச் சாயம் பூசி வாயடைத்தீர்கள். நேரு குடும்பம் வரவில்லையா, ராஜ்கபூர் குடும்பம் படம் எடுக்கவில்லையா என்று விமர்சனம் செய்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

கழகம் உங்களால்தான் வளர்க்கப் பட்டதாக நினைத்து இறுமாப்பில் இருந்த உங்களுக்கு காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது மகள் சிறையில், குடும்பத்தில் குழப்பம், அடுத்த தலைவருக்கு போட்டி என்று ஆரம்பித்தவுடன் கழகக் கூட்டத்திலிருந்து கிளம்பி மகாபலிபுரம் போய் சிந்திக்க வைத்திருக்கிறது.

உங்களது எதிரிகள் கழகப் பொதுக் கூட்டம் கோவையிலோ, திருப்பூரிலோ எங்கு இருந்தாலும் அதன் முடிவை எதிர் நோக்கியிருக்கிரார்கள்.

ஆனால் கழகத்தின் உண்மையான தொண்டன், “தோண்டி” உடைக்கப் படுவதை உணர்ந்து சோகத்தில் மிதக்கிறான்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 19 July 2011

எங்கே எதிர்கட்சி தல?

எதிர்கட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர் புரட்சிக் கலைஞர் எங்கே என்று தெரியவில்லை?.


அவர் சட்டசபைக்கு வருகிறாரா? பேசுகிறாரா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதில் எழுதவும்.

சமசீர்கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும் டில்லி சென்றிருக்கிறார்கள். அது வரை பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்காமல் இழுத்தடிக்கப் போகிறார்கள். வழக்கம்போல் பிள்ளைகள் வெற்றுக்குப் பள்ளி செல்வது பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை. அம்மாவின் வீண் பிடிவாதம் மாணவர்களின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்குகிறது. இப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து எப்பொழுது தீர்ப்பு சொல்லுவார்கள் என்பது பெரிய கேள்விக் குறி.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் வேலையில் எதிர் கட்சி தலைவர் என்ன செய்கிறார்?. கொடுத்த பெட்டிக்கு எவ்வளவு க்வட்டார் வரும் என்று கணக்கு போடுகிறாரா?. நானூற்றி என்பது மார்க் வாங்கிய மகனிடம் கேட்டால் விரைவாக பதில் சொல்லியுருப்பான். பாவம் அவர் பையன் கல்லூரி சீட்டுக்கு அலைகிறார் போலும்.

நாங்கள் வந்தால் தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும், அதற்கு பல திட்டங்கள் வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த புரட்சிக் கலைஞர் அவர் முதல் மந்திரியானால் தான் சமூகப் பொறுப்புடன் நடப்பார் போல.

வைகைபுயலை வீட்டில முடக்கிற வேலையை முதலில் பாருங்கப்பு. உங்களுக்கு எவ்வளவு வேலை காத்திருக்கிறது. மாணவர்கள் எப்படி போனால் என்ன?

Follow kummachi on Twitter

Post Comment

Monday 11 July 2011

கலக்கல் காக்டெயில்-34

கே.டி. சகோதரர்களுக்கு மூக்கணாங்கயிறு....................



கண்கள் பணித்தது, இதயம் இனித்தது எல்லாம் இப்பொழுது பொய்யாகி உறவு புளித்திருக்கிறது. மாறன் ராஜினாமாவை உடன் பிறப்புகளும், சி.ஐ.டி காலனி அம்மாவும் “ஸ்வீட் எடுத்து” கொண்டாடினாங்களாம். சகோதரர்கள் ஆடித்தான் போயிருக்கிறார்கள். இதுதான் சாக்கு என்று அம்மாவும் குமுறி எடுக்கப் போவதாக ஒரு செய்தி. மொத்தத்தில் மாறன் சகோதரர்கள் பதினெட்டு வருட ஆட்டத்திற்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டிருக்கிறது.

தாத்தாவிடம் பேரன் உதவி கேட்கும்பொழுது “நம்ம தொலைக்காட்சி கழகத்தை எப்படி வளர்த்தது” என்றதற்கு “அது உங்க டி.வி” என்று பட்டும்படாமல் பதிலளித்தாராம். தலைவரே இதே காரியத்தை உங்க மற்ற வாரிசுகளிடமும் செய்யுங்க உங்கள் கடை நிலை தொண்டன் வரை பொங்கல் வைத்து கொண்டாடுவான்.

எந்திரனுக்கு நஷ்ட ஈடு என்று ஒரு கூட்டம், மார்பிங் செய்தார் என்று நித்யானந்தா கூட்டமும் சன் க்ரூப்பின் மேல் பாய்வது, எரியற வீட்டில் எவ்வளவு பிடுங்கலாம் என்ற கணக்குதான்.

பத்மநாபசாமி கோவில் எபெக்ட்



பத்மநாபசாமி கோவில் விவகாரம், இப்பொழுது எல்லாக் கோவில்களையும் ஆக்கிரமிக்கறது. ஸ்ரீரங்கம் தொட்டு, திருசெந்தூர் என்ற விரிவுபடுத்த ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இந்தக் காசை பொதுச் செலவிற்கு உபயோகப் படுத்தலாம் என்ற யோசனை அரசியல் வாதிகள் ஆட்டையைப் போட எளிய வழி. அப்படி ஒரு முடிவை அரசு எடுத்தால் எஞ்சுவது எளியவனுக்கு செல்லா நாலணா மட்டுமே.

NH-45

சமீபத்தில் காரில் திருச்சி சென்றேன். நாலரை மணி நேரத்தில் இப்பொழுதெல்லாம் திருச்சி போக முடிகிறது. அருமையான ரோடு. வண்டி ஓட்டுவது மிக ;எளிதாக இருக்கிறது. முன்பெல்லாம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் ஊருக்குள் நுழைந்து வெளியே வர முழி பிதுங்கிவிடும். வழியில் ஆறு இடத்தில் நிறுத்தி “டோல்” கட்ட வேண்டும். இங்குதான் சிறிது நிறுத்த வேண்டியுள்ளது. மற்றபடி எந்த ஊருக்குள் நுழையாமல் பைபாஸ் வழியாக போய்க் கொண்டே இருக்கலாம்.

வாழ்க நேஷனல் ஹைவேஸ்

ஜோக்ஸ் கார்னர்


மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே...

இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா



கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...



நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment

Friday 8 July 2011

அகில உலக "அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே"

அகில உலக "அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே"


உங்களுக்கு சாதாரண குடிமகன் (அதே டாஸ்மாக் பார்ட்டிதான்) எழுதும் கடிதம், மடல். தாத்தாவும் அவிக குடும்பமும் தேசிய லெவலில ஆட்டையப் போட்டு எல்லா துறையிலும் மூக்கை விட்டதனால வேறே வழி இல்லாமதான் உங்கள உட்கார வைச்சாங்க எனபது உங்களுக்கு புரிந்திருக்கும். இல்லை என்றால் கொடநாட்டில குப்புற படுத்து குமுறிகிட்ட இருந்த உங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது. சரி ஓட்டத்தான் குத்திட்டோம், அம்மா திருந்திட்டாங்க இந்த முறை போன முறை செய்த தப்பெல்லாம் செய்யமாட்டாங்க என்று தங்களுக்கு தானே சமாதானம் வேறே சொல்லிக்கிட்டாங்க.

ஆனால் வந்த முதல் நாளே பதவியேற்றவுடன் புதிய சட்டசபை வளாகத்தில் உட்காரமாட்டேன், பெருச்சாளிக் கோட்டையில்தான் உட்காருவேன்னு, இரண்டு நாளில் அந்த இடத்தைப் புதுப்பிக்க எங்க துட்டு அறுபத்தைந்து கோடி ஊதிட்டிங்க.

அடுத்ததாக சமச்சீர் கல்வி போன ஆட்சியில் கொண்டு வந்த ஒரே காரத்திற்காக அதற்கு சமாதி கட்டி ஒரு இருநூறு கோடி அம்பேல். இது போதாது என்று வழக்கு நீதிமன்றம் வந்தவுடன், ஒரு புதிய கமிட்டி வச்சு அதுல உங்க ஆளுங்களை வைத்து நீங்க சொன்னத சொல்ல வச்சிட்டிங்க.

படிக்கிற பசங்க பாவங்க அதுங்க வாழ்க்கையில் கபடி ஆடாதீங்க, சொன்னா கேட்கவா போறீங்க.

ஆட்சி அமைத்து இன்னும் ஐம்பது நாள் முடியல அதுக்குள்ளே மூன்று தபா அமைச்சரவையை மாத்தீட்டிங்க. நீங்க உங்க அஜெண்டாவில இருபைத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களும் அவர்கள் இலாக்ககளும் மாற்றப்படும் என்று வெளிப்படையா சொல்லிடுங்க. அப்புறம் ஒரு பய நாக்குல பல்லைப் போட்டு உங்களை ஒன்னும் பேசமுடியாது. இல்லன்னா இந்த பதிவர்கள் வேறு வலையில நாளுக்கு நாள் கடிதம் எழுதிக்கிட்டு இருப்பானுங்க.

மணல் கொள்ளை, அதிகாரிகளை மிரட்டி காண்ட்ராக்ட் கேட்பது, டாஸ்மாக் பார் ஏலத்தில் உங்க கட்சி ஆளுங்க ஏலம் எடுத்ததெல்லாம் நாங்க பெரிசு படுத்தமாட்டோம். ஏன் என்றால் எங்களுக்கு இதனால ஒன்னும் லாபம் நஷ்டம் இல்லை. டாஸ்மாக் முதல் கட்டிங் அப்புறம் எங்களுக்கு அவன் ஊத்தற சரக்கும் தெரியாது, விலையும் தெரியாது.

நீங்க ஆட்சிக்கு வந்தவுடன் எதிரிகளை ரவுண்டு கட்டி அடிப்பீங்க என்று எதிர் பார்த்ததுதான். இதுல ரொம்ப ஓவர் ஆக்டிங் கொடுத்துறாதீங்க அப்புறம் பழையபடி ஜனங்க தாத்தாவை குந்த வைப்பானுங்க.

எப்படி இருந்தாலும் அடுத்த ஐந்து வருஷத்துக்கு வேறே ஆளேதான் நம்ம ஜனம் தேடும்.

எப்படி இருந்தாலும் நீங்க யார் சொல்வதையும் கேட்கமாட்டீங்க, இருந்தாலும் சொல்றேனுங்க “பார்த்து சூதானமா நடந்துக்கங்க”.

இந்த மஞ்சள் கலரில் மூணு சக்கரத்தில ஓடுமே அதை மறந்துட்டிங்க போலிருக்கு.

கடைசியா ஒன்னுங்கம்மா, இந்த டாஸ்மாக்குல தினத்திற்கும் ஒரு விலை சொல்றாங்கம்மா, எப்படியிருந்தாலும் நாங்க கொடுப்போம், அப்படியே அநியாயமா விலை ஏத்தினாலும் நாங்க மத்த கழுதைங்க மாதிரி போராட்டம் எல்லாம் நடத்தமாட்டோம். அதால எங்களுக்கு ஏதாவது பார்த்து ஒரு வழி செய்யுங்க.



இப்படிக்கு



டாஸ்மாக் டகால்டி
//
//

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 7 July 2011

நான், நாணா மற்றும் அவளும்

இந்தக் கதையில் வரும் “நான்” நானல்ல. நாராயணன் என்கிற நாணாவுக்காக “நான்” நாணாவாகி இருக்கிறேன். கதையில் “நான்” நானாக வரும்பொழுது நாணா என்ன ஆவான்? என்பது தெரியாது.


விடியற்காலையில் எதிர் வீட்டில் லாரியிலிருந்து சாமான் செட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். “எடோ அதே அவ்விடயானும் இறக்கு”” என்று எங்களுக்கு புரியாத மொழியில் லாரிக்காரன் சம்சாரித்துக் கொண்டிருந்தான். நேற்றைய இரவு புல் மப்பில் படுத்து உறங்கி காலையில் என்ன அவசரம் ஒரு பத்து மணிக்கு எழுந்திருக்கலாம் என்ற எனக்கு இந்த அகால வேலை விழிப்பு எரிச்சலை தந்தது.

என்னுடன் சரக்கடித்த வேலுவும், கோபால், சங்கர் இவர்கள் எல்லாம் அங்கு ஆஜராகி கூலிக்காரனுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடப் பாவிகளா சாவப் போற ஆயாவுக்கு தண்ணி குடுக்காத இந்தப் பசங்க எதிர் வீட்டிற்கு வேலை செய்கிறார்கள் என்றால் ஏதோ புதிய “பிகர்” அந்த வீட்டிற்கு வருவது சத்தியம் என்று நானும் காலை காபியை துறந்து அங்கு ஆஜரானேன்.

அந்த வீதிக்கு புதியதாக வந்த மனிதரை வார்த்தைக்கு வார்த்தை “சித்தா”” இதை எங்கே வைக்க வேண்டும் என்று சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த என் நண்பர்கள் கூட்டம் கண்டு எனக்கு ஆச்சர்யம். இப்பொழுது வீட்டிலிருந்து “கொச்சச்சா” என்று கூவிக்கொண்டு வந்த அந்த பெண்ணைக் கண்டதும் ஆடிப்போய் நம்ம பசங்க விடியலில் வேலை செய்வதின் ஆச்சர்யம் விலகியது.

அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும், நல்ல மலையாளக் கட்டை, குதிரை வால் பின்னலிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நடையிலும், கன்றுக் குட்டி கண்களையும் கண்ட நமது பி.ஜே.பிங்க (பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க) கடை வாயில் வழியவிட்டுக் கொண்டு வந்த காரியத்தை துறந்தார்கள். கொச்சச்சன் என்று விளித்துக் கொண்டே வந்த அவள் எங்களை நோக்கி ஒரு புன்னகை வீசினாள். அதைக் கண்ட சங்கர் மூத்திரம் குடித்த மாடு போல் ஆகிவிட்டான். சித்தா நீங்க இருங்க, இவங்களோட பேசிக்கிட்டு இருங்க, நான் சாமானை எல்லாம் இறக்குகிறேன் என்று லாரிக்காரனுக்கு கை கொடுக்க சென்று விட்டான். அந்த வீட்டு அம்மாவுடன் உள்ளறையில் மற்றும் ஒரு பெண் குரல் கேட்கும் அவள் யாரென்று தெரியவில்லை.

அவர்களின் சித்தப்பா ஒரு வெட்டி என்று பேச்சு வாக்கில் புரிந்து கொண்டேன். அவருக்கு அந்த வீட்டில் மரியாதை இல்லை என்பதை அந்த பெரியவளின் நடத்தையிலும் அவர்களின் அம்மாவின் பேச்சிலும் புரிந்து கொண்டோம்.

அந்த குடும்பம் அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வேலைக்கு போய் வந்தவுடன் எல்லோரும் கோபால் வீட்டு மொட்டை மாடியில் அரட்டையை தொடங்குவோம். சித்தாவும் தவறாமல் ஆஜராகிவிடுவார். எங்களுடன் மப்பு பார்ட்டி, நைட் ஷோ என்று எல்லாவற்றிற்கும் ஒட்டிக் கொள்வார். அவரை கழற்றி விடலாம் என்றால் சங்கர் முரண்டு பிடிப்பான். ஏதோ அவரை அவனின் மாமனார் போல் நடத்திக் கொண்டிருந்தான். சங்கர் இல்லாத பொழுது எங்களுக்கு சிகரட் வாங்குவது, தண்ணி வாங்கி வருவது என்று மற்ற நண்பர்கள் அவரை எடு பிடி ஆக்கிவிட்டார்கள். அவரும் சளைக்காமல் எங்களுக்கு உழைத்துக் கொண்டிருந்தார்.

சங்கர் சித்தாவை வைத்து அவளை எப்படியும் மடக்கிவிடலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருக்கு அளவுக்கு அதிகமாகவே மரியாதை செய்து கொண்டிருந்தான்.

கடந்த மூன்று நாட்களாக சித்தாவைக் காணவில்லை. அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அண்ணனுடன் சொத்து தகராறு என்று பக்கத்து வீட்டு பாணலிங்கம் மாமா சொல்லிக் கொண்டிருந்தார். சித்தா இல்லாமல் சங்கருக்கு பசலை வந்து விட்டது.

ஒரு நாள் காலை நான் பேங்கில் பணம் எடுக்கலாம் என்று சென்றேன். அங்கு அந்த எதிர் வீட்டு அம்மாவும், கூட ஒரு பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பெண் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.

அவள் நாங்கள் முதலில் பார்த்த பெண் அல்ல. ஆனால் அவள் தங்கை என்று முகஜாடை சொல்லியது. அன்று அங்கு பார்த்த பிறகு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். அவள் ஊனமுற்றவள், ஆதலால் அவள் வெளியே அடிக்கடி வருவது இல்லை என்று என் அம்மா சொன்னாள்.

அவளின் அழகு என்னைக் கட்டிப்போட்டது. இப்பொழுது அவளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன், இதை தான் நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவனும் இதை எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் அவளைப் பார்த்ததில்லை. இதோ கதையை தொடங்க மறுபடி வந்திருக்கிறான்.

/
/
/
/
/
/

எதேச்சையாக நேற்று "நான்" அவளை அவள் வீட்டின் தோட்டத்தில் பார்த்தேன். "நானும்" இப்பொழுது சித்தாவை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றேன் அவனிடம்.


டேய் நாணா கதையை மேலே சொல்லுடா, எங்கே போகிறாய்?.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 5 July 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்

ஏழு பேர் அடங்கிய குழு அந்த ஆறாவது அறையின் இரும்புக் கதவை திறப்பதற்கான வழி முறைகளை யோசிக்கும் முன் நாம் இந்த கோவிலின் பூர்விகத்தையும், திருவாங்கூர் சமஸ்தானத்தையும் பார்ப்போம்.


பத்மநாப சாமி கோவில் வைணவர்களின் நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். ஆறாவது நூற்றாண்டில் கோவில் தொடங்கப் பட்டிருக்கலாம் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களில் கோடிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது. கோபுரமும் மற்றைய பிரகாரங்களும் பதினாறாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

கருவறையில் விஷ்ணு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கிறார். ஆதிசேஷன் தலையை உயர்த்தி விஷ்ணுவின் இடது கையில் ஏந்தியிருக்கும் தாமரையை நோக்கியிருக்கும். பத்மநாபா சாமியின் வலது கை சிவலிங்கத்தையும், ஸ்ரீதேவி, பூதேவியை நோக்கியிருக்கும். அவர் நாபியிலிருந்து வரும் தாமரையில் பிரம்மா வீற்றிருப்பார். இந்த விக்ரகம் 12008 சாளிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கற்கள் நேபாளத்திலிருந்து தருவிக்கப் பட்டதாம். இந்த விக்ரகத்தின் மேல் ஒரு ஆயுர்வேதக் கலவை பூசப்பட்டிருக்கிறது. ஆதலால் இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

கருவறை முன் உள்ள மேடை ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட காரணத்தால் ஒற்றைக்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மேடயிலேறிதான் நாம் பத்மநாபரை தரிசிக்க முடியும். இங்கு ராஜாவைத் தவிர யாரும் விழுந்து வணங்குதல் கூடாது, மேலும் நம்மிடமிருந்து தரையில் விழும் பொருட்கள் கோவிலை சேரும்.

இங்கு நைவேத்யம் செய்யும் பாயசம் மிகவும் பிரபலம். அவை ரத்தினபாயசம், மேனி துலா பாயசம், பால் மாங்கா, ஓட்ட துலா பாயசம், பால் பாயசம். வியாழன் அன்று ஒரு ஸ்பெஷல் பானகம் தருகிறார்கள். “உப்பு மாங்காய்” தேங்காய் ஓட்டில வைத்து சாமிக்கு படைக்கிறார்கள்.

இங்கு நடக்கும் உற்சவங்களில் ஆறு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் லட்சதீபம் காண கிடைக்காத காட்சியாகும், கோவிலை சுற்றி ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றுகிறார்கள்.

பாதாள அறைகள்


கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தான் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட விலை உயர்ந்த நகைகள், தங்க நாணயங்கள், வைர கற்கள் முதலியவற்றை வைத்து பாதுகாத்திருக்கிறார்கள். அவற்றில் தங்கத்திலான பதினாறடி நீளமுள்ள யானை கட்டும் சங்கிலி இப்பொழுது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. (இதனை வைத்து யானையை கட்டிப்போட முடியாதென்பது வேறு விஷயம்) அதன் எடை மட்டும் முப்பது கிலோவாம். ஐந்து அறைகளில் உள்ள புதையலின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடி. ஆறாவது அறை இரும்பு க்ராதிகளால் அடைக்கப் பட்டிருக்கிறது. அதை திறக்க ஆய்வாளர்களின் உதவியை நாடியிருக்கிறது ஏழு பேர் அடங்கிய சொத்து தணிக்கை குழு.

இந்தக் கோவில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தம். முதலில் கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க எட்டு வீட்டில் பிள்ளைமார் என்கிற நாயர் குழுவிடம் இருந்திருக்கிறது. பிற்பாடு எழுந்த பிரச்சினைகளின் காரணமாக இந்த சமஸ்தானத்தை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். ராஜா குடும்பம் தங்களை பத்மநாபதாசன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும் இந்த சொத்துக்களை இது நாள் வரை பாதுகாத்திருக்கிறார்கள். ராஜா ஒரு நாள் கோவிலுக்கு போகவில்லை என்றால் அதற்கு உண்டான அபராதத்தை கட்டியிருக்கிறார்கள்.

அவரது வம்சா வழியில் வந்த தற்போதைய ராஜா “உத்ராட திருநாள் மார்த்தாண்ட வர்மா”, இந்த சொத்துக்கள் மதிப்பீட்டிற்கு பின் தான் என் கண்கள் பேசும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் பழைய வழக்கப்படியே கோவில் செல்லாத நாட்களில் நூற்றைம்பது ருபாய் ஐம்பைத்தைந்து காசு அபராதத் தொகை செலுத்துகிறார். மேலும் கோவிலை விட்டு வெளியே வருமுன் காலில் ஒட்டியுள்ள மண்ணை கோவிலிலேயே தட்டிவிட்டு வருகிறார். கோவிலில் உள்ள மண் பத்மநாப சாமிக்கு சொந்தம் என்ற அசையாத நம்பிக்கையில் தான் கோவில் சொத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சமஸ்தானத்தின் ராஜா கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்பது காலம் காலமாக இருந்த நியதி. ராஜாவின் சகோதரியின் மகன்தான் அடுத்த பட்டத்து ராஜா. (ஆதலால் தான் கோவில் சொத்தில் ஆட்டையைப் போடாது இருந்திருக்கிறார்கள். நம்ம அரசியலாக இருந்தால் பெண்டாட்டி வைப்பாட்டி என்று வைத்து ஒரு வழி செய்திருப்பார்கள்).

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல வக்கீல் டி.பி. சுந்தராஜன் தொடுத்த பொது நல வழக்கு இப்பொழுது புதிய பிரச்சினையை கிளப்பியிருக்கிறது இப்பொழுது கேரளா அரசாங்கத்திற்கு புதிய தலை வலி ஏற்கனவே மூன்றடுக்கு செக்யூரிட்டி போட்டிருக்கிறார்கள். சொத்து மதிப்பீட்டிற்கு பிறகு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். இதை அரசாங்கம் உபயோகப் படுத்துவதாக இருந்தால் மற்றைய மத போர்டுகளில் உள்ள சொத்துக்களையும் ஆராய்ந்து கையகப் படுத்த வேண்டும் என்ற புதிய பிரச்சினை கிளம்பும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: கூகிளாண்டவர்

Follow kummachi on Twitter

Post Comment

Monday 4 July 2011

கலக்கல் காக்டெயில்-33

ஐம்பது நாள் அம்மா ஆட்சி .


புதிய அரசு அமைந்து ஐம்பது நாட்கள் ஆகப்போகிறது. அதற்குள் இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம். ஆற்காட்டார் செய்ததைவிட சற்று அதிகமாகவே “நத்தம்” தன் வேலையைக் காட்டுகிறார். இப்பொழுதெல்லாம் கரண்ட் கட் இரண்டுமணி முதல் ஆறுமணிரை நீடிக்கிறது. ஏதோ “மோடி” அறுநூறு மெகாவாட் உபரி மின்சாரத்தை தரப்போகிறார் என்ற செய்தி பார்த்த நியாபகம். போன சனிக்கிழமை சென்னையில் பல இடங்களில் காலையில் ஒன்பது மணிக்கு போன கரண்ட் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்ப வந்தது. இந்த வார ஜூனியர் விகடன் மடிக்கணினி, மிக்சர், கிரைண்டர் கொள்முதலில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுதி புலம்ப ஆரம்பித்திருக்கிறது. இது ஒன்லி ட்ரைலர் தான் மெயின் பிக்சர் இனி தான் இருக்கிறது. நல்ல ஆட்சி மாற்றம்.

திறக்க திறக்க கோல்ட்

திருவணந்தபுரம் பத்மநாபசாமீ கோயிலின் நிர்வாக சீர்கேட்டை ஆராய போடப்பட்ட பொது நல வழக்கு, முன்னூறு வருடங்கள் மூடி வைக்கப்பட்ட அறைகளை திறக்க வைத்திருக்கிறது. இது வரை ஆராயப் பட்ட நகைகளின் மதிப்பே ஒரு லட்சம் கோடி தேறுமாம். இன்னும் ஒரு அறை திறக்க கோர்ட் ஆணைக்கு காத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு கோடி அங்கிருக்கிறதோ தெரியாது. திர்வான்கூர் மகாராஜா சேர்த்து வைத்த சொத்து, அவர் சந்ததிகளுக்கு தெரியாது போலிருக்கிறது. ஆனால் இந்தக் கோயில் இன்னும் மகாராஜா பேரில்தான் இருக்கிறது. அதனால் அந்த சொத்து பெறும்பாலும் ராஜா குடும்பத்தை தான் போய் சேரும். இந்த வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதிகள் “நரி மூஞ்சியில் முழித்திருக்க வேண்டும்”. நம்ம ஊரில் இந்த மாதிரி கோயில் சொத்து இருந்தால் என்றைக்கோ ஆட்டையைப் போட்டிருப்பார்கள்.

நாலணா செல்லாக் காசு

நாலணா அபீட் ஆகிறதாம். ஒரு “அண்ணா”வை சமாளிக்கவே நம்ம பிரதமருக்கு கண்ணைக் கட்டுகிறது. அவர் எப்படி நாலு அ(ண்)ணாவை சமாளிப்பார். அதான் ஒழிக்கறாங்காட்டியும். ஏதோ ஒரு மொக்கையன் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

திகார் ஜெயில்

நம்ம ஆளுங்க உள்ளே போனதிலிருந்து இட்லி, வடை, சாம்பார் போட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு நல்ல சாப்பாடு அங்குதான் கிடைக்கும் போலிருக்கிறது. நல்லா சாப்பிட்டு, யோகா, டென்னிஸ் எல்லாம் ஆடிவிட்டு, பெரிய ஆளுங்களை நண்பர்கள் ஆக்கிக்கொண்டால் பிற்காலத்தில் நோகாமல் நோன்பு கும்பிடலாம் போலிருக்கிறது. அதற்கு பெரிய அளவில் ஆட்டையைப் போட வேண்டும். திறமை உள்ளவர்கள் இந்த யோசனையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment