Saturday 27 December 2014

கலக்கல் காக்டெயில்-162

பதிவுலகத்திற்கு வந்து எழுதிக்கிழித்ததில் இது 799வது. உருப்படியாகக் கிழித்ததில் எத்தனை தேறும் என்று தெரியாது?. விடுமுறையில் வரும்பொழுது இந்தப் பதிவை வந்த முதள் நாளன்றே போடவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உடல்நிலை காரணங்களால் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.

2014 நடந்தது என்ன?

இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளில் மத்தியில் ஆட்சி மாறியது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் சுபிட்சம் வந்துவிடும், தேனும் பாலும் பெருகி ஓடும் என்று நினைத்தோம் ஆனால் முதலுக்கு மோசமில்லை.

அடுத்த முக்கிய நிகழ்வு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. முன்னாள் முதல்வர் மக்கள் முதல்வராகி, மற்றுமொரு டீ ஆத்தியவர் முக்கிய பொறுப்பு ஏற்றுள்ளார். தமிழ் நாட்டில் ஏதாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் ஒன்றும் இல்லை. சட்டசபையை ஒரு மூன்று நாட்களுக்கு கூட்டி அம்மா புகழ்பாடி முடித்தார்கள், வழக்கம்போல் எதிர்கட்சிகள் வெளிநடப்போ இல்லை வெளியேற்றவோ செய்யப்பட்டனர்.

திரையுலகில் நீ சூப்பர் நான் சூப்பர் என்று தங்களையே சொறிந்துகொண்டு நடிகர்களும் இயக்குனர்களும் மொக்கைப் படங்கள் கொடுத்து தமிழகத்தை அவர்கள் பங்கிற்கு வதைத்தனர், நடுவில் சத்தம்போடாமல் சில நல்ல படங்கள் வந்து சென்றன.

இயக்குனர் சிகரம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் அண்ணா, எம்.ஜி. ஆர் இறுதி மரியாதை கூட்டத்தை நியாபகப்படுத்தியது.

இசை விழா

டிசம்பர் சீசன் சென்னையில் களைகட்டியிருக்கிறது. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் சபாவிற்கு கூட செல்லமுடியாதபடி வேலை. சனி ஞாயிறுகளில் தப்பித்தவறி வண்டியை எடுத்துவிட்டு லேட்டாக வந்தால் கச்சேரிக்கு வந்தவர்கள்  நம்ம பார்க்கிங்கில் வண்டியை விட்டு சென்றுவிடுகிறார்கள். பின்பு கச்சேரி முடியும் வரை அடுத்த தெருவில் வண்டியை விட்டு நடுநிசியில் கொண்டு நம்ம பார்க்கிங்கில் போடவேண்டும், நல்லா இருங்கப்பு............


ரசித்த கவிதை 

கவிதை 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..................
2014, டிசம்பர் 3 இரவு சுமார் 8 மணியிருக்கும்
'மூக்கின் மேலே
மூக்குத்தி போலே'
மச்சம் உள்ளதே............அதுவா?
என்று நீங்கள் கேட்க
கோயமுத்தூர் முனியாடி விலாஸில்
அடுப்பில் கிடந்தது கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா?
அதுவா?
 அதுவா?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்குச் சிலிர்த்துகொண்டதா?
எஸ்.பி.பி சார்

-----------------------------இசை

ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 13 December 2014

லிங்கா பன்ச் ட்வீட்டுகள்

சூப்பர் ஸ்டார் நடித்து இன்று வெளிவந்துள்ள லிங்கா படம் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அடடா இன்னா ஒரு ஸ்டைலு..........
ஆனால் ட்விட்டர் நேற்றே களைகட்டிவிட்டது. லிங்கா என்ற ஹாஷ் டேக் ஆரம்பித்து ஒரே ரணகளம்.

அவற்றில் சில..........

காலடில குத்துறத்துக்கு அவர் ஒன்றும் மலிங்கா இல்லடா, காலகாலமா நிக்குற லிங்காடா.

காட்டுல கல்லடி படுற மாங்கா இல்லடா அவர் தமிழ் நாட்டின் லிங்காடா.

படம் பட்டாசுன்னு பசங்க சொல்ட்டாங்க. நாளைக்கு ஹாஃப் டே லீவ் போடுறோம்............லிங்கா பாக்குறோம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ரெண்டே வகைதான், ரஜினிய கொண்டாடிக்கிட்டே படம் பாக்கிறவங்க, ரஜினிய திட்டிகிட்டே படம் பாக்கிறவங்க.

ரஜினி ப்ளேவர் படையப்பா விட கம்மி, ஆனா சிவாஜியைவிட அதிகம் இது போதாதா? பட்டாசை கொளுத்துங்கடா. இன்னைக்கு தீபாவளி.

பர்ஸ்ட் ஹாப் தெய்வ லெவல் மாஸ். செகண்ட் ஹாப் அதுக்கும் மேல. ரஜினி லெவல் மாஸ்.

லிங்கா டேக்க மொத்தமா சுத்துனா படம் சரியில்லைன்னு சொல்ற பீசுகள் முக்கால்வாசி துப்பாக்கி, கத்தின்னு இருக்குது. தம்பி இஸ்கூலு லீவாடா?

அந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மொக்கை படங்களையே  கொண்டாடும்  சூழலில் ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தாராளமாக சந்தோஷிக்கலாம்.

ரஜினி ட்விட்டருக்கு வரதால தான் படம் ஓடுதா? முப்பது வருசமா அவரு படம் ஓடிக்கிட்டுதான் இருக்கு லூசுங்களா! ஜெலுசில் ம்ஹூம் ஓமத்திரவம் குடிங்க!

Follow kummachi on Twitter

Post Comment

Friday 12 December 2014

லிங்கா விமர்சனம்-என்னுடையது அல்ல.....

நடிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்),
சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், இயக்குநர் விஸ்வநாத் 
ஒளிப்பதிவு: ரத்னவேலு கதை : 
பொன் குமரன் 
இசை: ஏ ஆர் ரஹ்மான் 
தயாரிப்பு: ராக்லைன் வெங்கடேஷ் 
இயக்கம்: கே எஸ் ரவிக்குமார் 

இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ரஜினியின் லிங்கா, சரித்திரமும் சமகாலமும் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதை. அரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.

கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோலையூர் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி). இந்த அணைக்காக தான் வகிக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசின் கலெக்டர் பதவியைத் துறக்கிறார். சொத்து முழுவதையும் இழக்கிறார். ஆனால், எந்த மக்களுக்காக அணை கட்டினாரோ அதே மக்களால் விரட்டப்படுகிறார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரின் நயவஞ்சகம் மற்றும் நம்ம ஊர் எட்டப்பன்களால். எழுபதாண்டு காலம் ஓடுகிறது. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து நேர்கிறது, அரசியல்வாதி ரூபத்தில். எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (இன்னொரு ரஜினி) என்பது திரையில் பார்க்க வேண்டிய மீதி. 

வாரே வா... என்ன ஒரு அருமையான கதை, அதற்கேற்ற திரைக்கதை. பாராட்டுகள். குறிப்பாக அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் அத்தனை கச்சிதம். இவற்றை மட்டும் தனியாகப் பிரித்தால் கூட ஒரு முதல் தரமான வரலாற்றுப் படம் கிடைத்துவிடும் எனும் அளவுக்கு அற்புதமான பகுதி அது. ரஜினிக்கு மட்டுமே இப்படி அற்புதமான ப்ளாஷ்பேக்குகள் அமைகின்றன.

அடுத்து ரஜினி. படம் முழுவதையும் சுமப்பவர் ரஜினிதான். அறிமுகமாகும் அந்த முதல் காட்சி பிரமிக்க வைக்கிறது. இந்த மனிதருக்கு திரையில் மட்டும் வயதே ஆகாது என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த ஸ்டைலும் அழகும் இளமையும் அவரது உடல் மொழியும் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அந்த ரயில் சண்டையில் கிரிக்கெட் மட்டையால் அவர் ஸ்டன்ட் ஆட்களைப் பந்தாடும் ஸ்டைல் அருமை.

இரண்டு வேடங்களிலுமே ரஜினி தன் ரசிகர்களை வசியம் செய்துவிட்டார் என்றால் மிகையல்ல. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்கள், காஸ்ட்யூம் பார்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள். லீ விட்டேகரின் அந்த ரயில் சண்டைக் காட்சி உறைய வைக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அத்தனை நேரமும் சலிப்பின்றி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு மனிதர் வசீகரிக்கிறார்! 

ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள். அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..! 

ஜாக்கெட் போடாத காலத்துப் பெண்ணாக வரும் சோனாக்ஷி சிறப்பாக நடித்துள்ளார். ஒரு காட்சி... எல்லாம் இழந்த ரஜினியிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார் சோனாக்ஷி. பின்னர் ஊர்க்காரர்கள் எங்கெங்கோ தேடி ஒரு நாள் அவர்களைக் கண்டுபிடித்து ஊருக்கு அழைக்கிறார்கள். மீண்டும் ராஜவாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். அதை சிம்பிளாக மறுத்துவிட்டு, இந்த வாழ்க்கை எப்படி என மனைவி சோனாக்ஷியைப் பார்ப்பார். அதைப் புரிந்து, நிறைந்த மனசு முகத்தில் எதிரொலிக்க சோனாக்ஷி பார்க்கும் பார்வையில் அவரது பக்குவ நடிப்பு தெரிகிறது. 

முந்தைய படங்களில் ரஜினியுடன் கொஞ்சம் எட்ட நின்றே காமெடி செய்த சந்தானம் இந்த முறை, மிக நெருங்கிய 'நண்பேன்டா' தோழனாக (கவனிக்க நண்பேன் மட்டும் சந்தானம் சொல்ல, டா என முடிப்பார் ரஜினி.. மரியாதை மரியாதை!!) வருகிறார். முதல் பாதி முழுக்க ரஜினியுடன் சந்தானம் கலக்குகிறார். 

வில்லனாக வரும் ஜெகபதி பாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, அனுமோகன், பொன் வண்ணன், ஜெயப்பிரகாஷ், அந்த பிரிட்டிஷ் கலெக்டர் மற்றும் அவர் மனைவி என அனைவருமே சரியாகச் செய்துள்ளனர். 

படத்தின் அத்தனை காட்சிகளுமே பிரமாண்டம்தான். அதுவும் அந்த அணை கட்டும் காட்சியும், கூடவே வரும் ஆயிரக்கணக்கான துணை நட்சத்திரங்களும்.. இவ்வளவு பெரும்படையைக் கட்டியாள ரவிக்குமார் மாதிரி இயக்குநர்களால்தான் முடியும். 

ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் 'வந்தா மட்டும் போதும்'தான். ஆனால் மற்றவர்களுக்கு...? 

படத்தின் ஆகப் பெரிய குறை.. அநியாயத்துக்கு நீளும் அந்த க்ளைமாக்ஸ் துரத்தல், பவர் ரேஞ்சர்ஸ் கேம் மாதிரி ஆகிவிட்ட அந்த பலூன் சண்டை... (ஆதவன் ராக்கெட் லாஞ்சர் மேட்டரை விட மாட்டேங்குறாரே டைரக்டர்!) இத்தனை நம்பகமான வரலாற்று ரீதியான கதையை உருவாக்கியவர்கள், எதற்காக இத்தனை சினிமாத்தன க்ளைமாக்ஸை வைத்தார்கள்? இவற்றை நிச்சயம் தவிர்த்துவிட்டு, தரையிலேயே நடப்பது போல ஒரு அழுத்தமான காட்சியை வைத்திருக்கலாம். 

முத்து, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி படங்களில் ரஜினி எல்லா சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி. சென்டிமென்ட் என்றாலும், கதையின் போக்கை எளிதில் யூகிக்க முடிகிறது. 

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமிப்பை பல மடங்காக்குகிறது. ரஜினியை ஏக ஸ்டைல், இளமை, அழகுடன் படம்பிடித்திருக்கிறார். கலை இயக்குநருக்கு செம வேலை. அந்த பிரமாண்ட அணையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் கட்டி, படமாக்கியது அசர வைக்கிறது. 

ஏ ஆர் ரஹ்மான் இன்னொரு ஹீரோ. அனைத்துப் பாடல்களும் பிரபலம். மன்னவா, இந்தியனே.. பாடல்கள் இனிமை. மோனா கேசோலினாவில் ரஜினியின் ஸ்டைல், நடனம், அனுஷ்காவின் அழகு கிறங்கடிக்கிறது. துவக்கப் பாடல் இன்னும் கூட நன்றாக ட்யூன் செய்திருக்கலாம். அதே போல, ரஜினி படங்களில் அவர் நடந்து வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பொதுவாகவே கலக்குவார் ரஹ்மான். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் அந்தக் குறையைப் போக்குகிறது ரஜினியின் நடனம். அதே பழைய உற்சாகம், துடிப்பு, துள்ளல்! 

இதுவரை ரஜினியைக் காட்டாத அளவுக்கு இந்தப் படத்தில் புதிதாகக் காட்டிவிட வேண்டும் என்ற மெனக்கெடல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு. அதற்கான பலனும் திரையில் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்ஸை நச்சென்று முடித்திருந்தால், லிங்கா வெறும் படமல்ல, சரித்திரமாய் மனதில் பதிந்திருக்கும். ஆனால் ரஜினியை, அவர் படத்தை ரசிக்க இது ஒரு பெரும் தடையல்ல.. என்ஜாய்! 

நன்றி: ஷங்கர்.
FILMIBEAT

Follow kummachi on Twitter

Post Comment

எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது...........


சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வழங்கி இருபத்தியொரு நாட்கள் பரப்பான அக்ராஹார சிறையில் ஊதுபத்தி உருட்டிய பின் ஒரு வழியாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது, சட்டசபையைக் கூட்டி "மம்மி" புகழ் பாடியது என்பதெல்லாம் செய்திகள், இதற்கெல்லாம் உச்சகட்டமாக "மம்மி" தலைமை மற்றும் அறிவுரை பேரில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று கூறி அதை அவைக்குறிப்பிலும் ஏற்றிவிட்டார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி எப்படி ஆட்சிக்கு தலைமை தாங்கலாம்? மேலும் இது இந்திய ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் கேலிகூத்தாக்கும் செயல் என்று அரசியல் வல்லுனர்கள் சொல்வதெல்லாம் ஒரு பொருட்டாக யாருக்கும் தெரியவில்லை. மதுவில் மயங்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கும் இது புரியப்போவதும் இல்லை.

வருமான வரி வழக்கில் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அபராதத்தொகையை செலுத்தி வழக்கிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!!!!!!!!!!!!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 18 தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறி ஜாமீன் வழங்கிய பின் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போன்றிருந்தது. தற்பொழுது கொடுத்த கெடுவின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கையேடு உச்ச நீதிமன்றத்தை அணுகி வழக்கை விரைவில் தொடங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி, வழக்கு ஆவணங்கள் தமிழில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வழக்கை இழுத்தடித்தவர்கள் இப்பொழுது மேல்முறையீட்டை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோருவது சில சந்தேகங்களை எழுப்புகிறது.

யாரை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டுதான் இந்த அவசரம் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது...............என்னமோ போடா மாதவா.............

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 11 December 2014

பாரதியை நினைவுகொள்வோம்

டிசம்பர் 11, பாரதியின் பிறந்தநாள். இந்த நாளில் அவரது கவிகளில் சிலவற்றை மீண்டும் நினைவுகொள்வோம்.


 அன்பு செய்தல் 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு


மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!




 சென்றது மீளாது 


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 10 December 2014

டீ வித் முனியம்மா பார்ட் - 27

மோனா மோனா மோனா கேஸ்ஸோலினா...........மோனா மோனா........

இன்னாடா செல்வம் தலிவர் பாட்டு பாடிக்கினு வர...........டிக்கட் எத்திட்டியா?.

ஐய இன்னா முனிம்மா சொல்ற, கவுண்ட்டரு தொறந்து பத்து நிமிஷம் ஆவ சொல்ல கபால்னு மூணு நாளிக்கி வித்திட்சிங்கிறான், அல்லாம் வூட்ல குந்திகினே டிக்கட்டு எத்திடுரானுங்க....இன்னா செய்ய. நீ வாங்கிட்டியா முனிம்மா?

இன்னாடா அவசரம், நமக்கு வியாவாரம் கீதில்ல, அப்பால பாத்துக்கலாம். இன்னாடா ஒரு டிக்கட்டு ஐநூறு ரூவாயாமே, இன்னாடா அவளவு துட்டு..

பின்ன தலீவரு படம்னா சொம்மாவா?

டேய் மீச இன்னாடா நிக்குற, டீ போடுறா.......

முனியம்மா ஏதானும் சேதி..........

இருடா மீச தோ அல்லாம் வந்துகினு கீறாங்க........

இன்னா முனிம்மா சகாயம் விசாரனைய ஸ்டார்ட்டு செஞ்சிகினாரா?

லிங்கம் சாரு அந்தாளு மதுரைல குந்திகினு ஆரம்பிக்க சொல்ல ஆளுங்கட்சிகாரன் வந்து அமைச்சர் செல்லூரு ராசு வராரு அவருக்கு இந்த ரூம்பு வேணும் காலி பண்ணுன்னு கீறானுங்க, அப்பால அந்தாளு கொடுத்த டைப்படிக்கிற பொம்பளையாண்ட வேல செய்யாதன்னு மெரட்டிகிரானுங்க, அந்த பொண்ணு சகாயத்தான்டையே ஓ............ன்னு அயுதுகீது.

ஆமாம் முனிம்மா அப்பால அங்க இன்னா நடக்குதுன்னு ஒட்டு கேட்டுகிறானுங்க.

அதானே நாடார் போலீசு காரனுன்களே ரெண்டு பேரு சகாயத்தாண்ட கம்ப்ளைண்ட்டு கொடுத்துகிரானுங்க, அவனுக க்வாரியாண்ட நெலம் வாங்கி பெஜாராகிக்கிரானுங்க.

இன்னா முனிம்மா இது பெரிய ஊயலா இருக்கும் போல கீதே.

ஆமாண்டா லோகு எல்லாம் டங்கமாரி பசங்க...........விசயம் வெளிய வந்தா அல்லா அமைச்சருங்க பாடு டப்பா டான்சு ஆடிடும்.

இன்னா முனிம்மா வைகோ கூட்டணி வுட்டு வெளியாந்துட்டாறு..............

அவரு இன்னா செய்வாரு, ஈயத்த வச்சி அரசியல் செஞ்சி ஒஞ்சிட்டாறு......ஒரு ......மவனும் கண்டுக்க மாட்டேங்கிறான். சாமி வேற நக்கலடிக்கிறாரு, மருத்துவர் ஐயா கச்சியும் ஓடிடுங்கிராறு. தமாசு பார்ட்டிப்பா........

முனிம்மா சட்டசப மூணு நாலு கூட்டினானுகளே இன்னா பேசிக்கினானுங்க.....

இன்னாத்த பேசுவானுங்க...........அம்மா......... தேவாரம், திருவாசகம், பெரிய பாலையத்தம்மனு, மாங்கையர்க்கரசின்னு பாட்டு பாடி ஒரே பக்கமா ஆடுறானுங்க.

எதிர் கட்சி இன்னா செஞ்சானுங்க.............

அவனுங்க வயக்கம் போல கூவிட்டு ..............கேட்டாண்ட நின்னுகினு டீ.வி.காரனாண்ட பேசிக்கினு பூட்டானுங்க.

பாலுல தண்ணி ஊத்தி துட்டுல கைவச்சானே அவன் இன்னா ஆனான்?

லோகு அது கேசு நடக்கப்போவுதுடா.........அந்தாளுக்கு ஜாமீனு கெடையாதுன்னு சொல்லி உள்ளாரையே வச்சிகிரானுங்க. அந்தாள நோண்டினா இன்னும் இதுல பங்கு வாங்கினவனுங்க பேரெல்லாம் வெளிய வரும்.

இன்னா முனிம்மா  கரெண்டு இருக்குற வூட்டுக்கு மண்ணெண்ன கடிக்காதாமே?

ஏண்டா பயம் நீ மெர்சல் ஆவுற, நம்ம வூட்ல எண்ணிக்கிடா கரெண்டு இருந்து கீது..........

இன்னா முனிம்மா குஸ்பூ கச்சி மாரிகிச்சி.............ஏண்டா லோகு உனுக்கு அரசியல்னா சினிமாகாரவளுகதானா? சொம்மா குஸ்பூ, நமீத்தானுகினு.

மோடி இன்னா செஞ்சுகின்னு கீறாரு முனிமா..........

அவரு இன்னா..........காஸ்மீருல ஒட்டு வாங்கிக்கினு கீறாரு...........அப்பால சைனா, ரஸ்யான்னு போய்கினுகீராறு. எவன் ஆண்டாலும் நமக்கு நம்ம பொயப்பு, அப்பால தொ இந்த டீக்கடைதான்...............

டேய் பழம்................இன்னாடா தலீவரு பட வியா........... ராயப்பேட்டயாண்ட வச்சானுன்களே நீ போன...........

அஹான் முனிம்மா இன்னா ஜெனம்.........உள்ளர உடமாட்டேன்னுட்டானுங்க..........அப்பால அனுஸ்காவ கண்டுக்கினு வந்துகினேன்.











Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 9 December 2014

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல் ஆங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்து அன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
இதை பாடியவர் கோவூர் கிழார். 
புலவர்கள் பல காடு மேடுகளை எல்லாம் கடந்து ஒவ்வொரு அரசரையும் கண்டு அவர்களை புகழ்ந்து பாடி அவர்கள் பரிசை ஏற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்டு வாழ்கிறோம். அப்படியிருக்க அவ்வாறு வந்திருக்கும் அந்த புலவனை எதிரி நாட்டு ஒற்றன் என்று சந்தேகம் கொண்டு தண்டிக்காதீர்கள் என்று புலவர்களின் நிலைமையை விளக்கி அரசனுக்கு அழகாக அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.
சரி அதையெல்லாம் இப்பொழுது கூறி மொக்கை போடுகிறேன் என்று கேட்காதீர்கள்.
நேற்றைய தின சட்டசபைக்கூட்டத்தில் மாநில முதல்வர் முன்னாள் மன்னிக்கவும் மக்களின் முதல்வரின் பெருமையை லாவணி பாடியதற்கும் மேலே உள்ள பாடலுக்கும் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டத்தான்.
இப்பொழுது ஓ.பி.எஸ் பாடிய லாவணி 
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே!
 தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
 "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே! 
முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே! 
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமைஎனக் கொண்ட தன்மானச் சிங்கமே! 
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே! 
தமிழகமே தனது இல்லமாய், தமிழ் மக்களே தனது சுற்றமாய் தமிழ்நாட்டின் நலனுக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தங்கமே! 
மக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களே! 
தங்கள் பொற்பாதங்களில் எனது வணக்க மலர்களைக் காணிக்கை ஆக்கி, தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கி, 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு எனது பதிலுரையை வழங்க விழைகிறேன்.
அப்பா பின்னுராங்கப்பா................போன ஆட்சியில் "அரங்கங்களில் அரைகுறை ஆடை நங்கைகளை ஆட விட்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என்று லாவணி பாடினார்கள். இப்பொழுது சட்டசபையில் வேட்டி அவிழ்த்து பாடுகிறார்கள். இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
இந்த அழகில் இரண்டு கட்சிகளும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார், சுயமரியாதை என்று கூவிக்கொண்டு கூத்தடிக்கிறார்கள். 
நாமெல்லாம் சரக்கடித்து "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று ஆடை அவிழ நடுத்தெருவில் படுத்திருந்து அடுத்த தேர்தல் காசு வரும் வரை களித்திருப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 8 December 2014

கலக்கல் காக்டெயில்-161

தேவாரமே, திருவாசகமே, தேறாதவளே.........

சட்டசபையைக் கூட்டுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி ஒ.பன்னீர்செல்வம் ஒரு வழியாக சட்டசபையைக் கூட்டி ஒரு மூன்று நாட்கள் அம்மா புகழ் பாடி மக்கள் பிரச்சினைகளை? அலசி ஆராய்ந்து தீர்ப்பும் கண்டு பல நல்ல திட்டங்களை? அறிவித்துவிட்டார். இருங்க இருங்க அவசரப்படாதீங்க. அம்மா புகழ் பாடினால் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தானகவே தீர்ந்து விடாதா? அம்மாக்கு லாவணி பாடினாலே திட்டங்கள் அறிவித்ததாகத் தானே அர்த்தம்.

இந்த கூத்தை ஜெயா டி.வியில் வேறு போட்டுக்காட்டி மக்கள் முதல்வர் புகழ் பாடினார்கள்.

ஆறு கோடி மக்கள் அம்மா என்றழைக்கும் தேவாரமே
பூமித்தாயை குளிர்விக்க மழை நீர் சேமிப்பு திட்டம் தந்த மங்கையர்க்கரசியே
இன்னும் மடிக்கணினி தந்த மகாராணியே...........என்று ஒரு பத்துப்பக்கத்திற்கு எழுதி வாசித்தார். அம்மாவின் அல்லக்கைகள் விடாது பெஞ்ச் தட்டிக்கொண்டிருந்தனர்.

இன்னும் கூட கொஞ்சம் லாவணியை சுருதி சுத்தமாகப் பாடியிருக்கலாம்.

அறுபத்தியாறு கோடி ஆட்டையைப் போட்ட அங்காள  பரமேஸ்வரியே
குன்ஹாவிடம் குட்டு வாங்கிய குணசுந்தரியே
ஜாமீனில் வந்திருக்கும் ஜான்சிரானியே
வருமான வரி வழக்கில் வெளிவந்த விடிவெள்ளியே...........ஏன்யா இதையெல்லாம் விட்டீங்க.

கேப்டன் வந்துவிட்டார்.......... அவர் வந்துவிட்டார்
மவன் சம்முகம் படத்துக்கு லொகேஷன் பார்த்துவிட்டு தாய் நாடு திரும்பிவிட்டார் கேப்டன். சட்டசபைக்கு சென்று மக்கள் பிரச்சினையை விவாதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் ஒரு மாதமாக பேப்பர் படிக்கவில்லை ஆதலால் தமிழக நடப்பு என்னவென்று தெரியாது என்று மிகவும் நிதானத்துடன் பதிலளித்திருக்கிறார். பிறகு தொண்டர்களுக்கு அறிவுரை வேறு, என்னை கிண்டலடிப்பார்கள் அமைதியாக இருங்க என்று.

ஆமாம் கேப்டன் கிண்டலடிப்பாக, அடிச்சுக்கூட கேப்பாக ஒன்றும் சொல்லிடாதீங்க................கேப்டன் நீங்க இல்லாத ஒரு மாதத்தில் சரக்கு விலை கூடிப்போச்சு. பேப்பர்ல பார்த்துட்டு சட்டசபை பக்கம் போனா கேளுங்க இது இன்னா நியாயம்.

ரசித்த கவிதை 

நீ வேறு நான் வேறு கவிதை 

ப்போதெல்லாம்
நீ கொலைகளைச் செய்ய அஞ்சுவதில்லை.
நம் சமையல் அறைக்குள்
ஜன்னல் வழியே ஊர்ந்துவரும் எறும்புகளை
பழுப்பில் சிக்கிய பருக்கைகளைத் தேடும்
மூஞ்சுறுகளை
நம் குளியல் அறையின்
மூலையில் படுத்துக்கிடக்கும் கரப்பான்களை
வேலிச் சுவரைத் தாண்டி
தலை நீட்டிக்கொண்டிருக்கும்
முருங்கைக் கிளைகளை
பழுத்துவிட்டால் புழு தின்றுவிடும் என
பிஞ்சு கொய்யாக்களை
இன்னும் நிறைய்ய்யவற்றை
நீ கொலை செய்ய அஞ்சுவதில்லை.
பூ பூத்ததும்
தென்னை வயசுக்கு வந்துடுச்சுனு
ஊருக்கே புட்டு அவிச்சிக் குடுத்தாங்க
எங்க அம்மா
உன் அழிப்பின் ரகசியங்களோ
என் பண்பாட்டை
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன!

நன்றி: கு. உமாதேவி 


ஜொள்ளு 






Follow kummachi on Twitter

Post Comment