Saturday 29 December 2012

மரணம் தின்றது......

மரணம் தின்றது
மனதில் கனவை சுமந்து
மலரத்துடித்த
மாணவியை அல்ல

மரணம் தின்றது
மலரை அல்ல
மனதில் உறைந்த
மனித நேயங்களையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
பழமை கதைபேசி
கலாசாரம் பேணும்
கயவர்களின்
மனசாட்சியையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
மனுநீதி காக்கும்
மக்கள் பிரதிநிதிகள்
மேலிருந்த
நம்பிக்கைகளையும் தான்


Follow kummachi on Twitter

Post Comment

Friday 28 December 2012

கலக்கல் காக்டெயில்-97

2012 ல் என்ன கிழித்தார்கள் 

2012ம் வருடம் முடியப்போகிறது. நமது அரசியல் தலைவர்கள் என்ன கிழித்தார்கள் என்று பார்ப்போம்.

முதலமைச்சர் அம்மா: எதிர்கட்சி தலைவரின் வாய்க்கு சட்டசபையில் பூட்டு போட்டது, ஆனாலும் வெளியே அவர் பேசும் பேச்சிற்கு ஒன்றும் செய்யமுடியாதது. தமிழகத்தை இருளும் இருள் சார்ந்த இடமாக்கியது. இலக்கியத்தில் முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை தவிர தமிழ் நாட்டிற்கு புது விளக்கமாக இருளும் இருள் சார்ந்த இடமாக்கியது.

கலைஞர்: மகளை வெளியே கொண்டு வந்தது. வழக்கம்போல் அறிக்கைகள் விட்டு மற்றபடி செயற்குழுவை கூட்டி கட்சியின் பெயர் இன்னும் பத்திரிகைகளில் வரும்படி செய்வது. போராட்டங்களை அறிவிப்பது.

மருத்துவர் ஐயா: காதல் திருமணத்திற்கு புது விளக்கம் கொடுத்து பேந்த பேந்த விழிப்பது.

கேப்டன்: சட்டசபையில் அம்மாவுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதிய பின்னும், சிறையில் இல்லாமல் இருப்பது, மற்றும் இன்னும் கட்சியில் சில எம்.எல். ஏக்களை தக்க வைத்துக் கொண்டிருப்பது.

வை.கோ: அவர் எங்கு இருக்கிறார்?.

2012ல் தமிழ் சினிமா

இந்த வருடம் வந்த படங்களில் நான் பார்த்தவையில் எனக்கு மிகவும் பிடித்தது


  1. வழக்கு எண் 18/9: பாலாஜி சக்திவேலின் திரைக்கதையில் வந்த நல்ல படம். இந்தப் படத்தை நான் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்த்தேன். படம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள், படம் முடியும் வரை வேறு ஒரு சத்தமும் இல்லை.
  2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: குறும்பட இயக்குனர் இயக்கிய படம், நல்ல திரைக்கதை, மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள், Short term memory loss கருவை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் கதையை நகர்த்திக்கொண்டு சென்றிருந்தார். ஆனால் படத்தில் வரும் கடைசி கல்யாண காட்சி அநியாயத்திற்கு நீளம்.
  3. பீட்சா: இதுவும் ஒரு குறும்பட இயக்குனரின் படைப்புதான். ஆனால் தமிழில்  வந்த சற்று வித்தியாசமான திகில் படம் என்று இதை சொல்லலாம். படத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  4. அரவான்:வசந்தபாலனின் இயக்கத்தில் வந்த பீரியட் படம்.  பரவாயில்லை. "நிலா நிலா போகுதே" பாட்டும் படமாக்கிய விதமும் கவனிக்க வைத்தது.
மற்றபடி வந்த படங்கள் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. நீதானே என் பொன்வசந்தம், இசைக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ராஜா சொதப்பிவிட்டார் என்றே தோன்றுகிறது. துப்பாக்கி, OKOK, மனம் கொத்திப் பறவை  எல்லாம் வழக்கமான புளித்த மாவுதான்.

ரசித்த கவிதை

விரல் பூக்கள் 

நான் கோபப்படும்போது
தன் விரல்களைக் குவித்தும்
நான் சிரிக்கும்போது
விரல்களை விரித்தும்
என் உணர்வுகளைப்
பூக்களாக்குகிறாள்
அந்தக் குழந்தை.
தடித்த வார்த்தைகளைப்
பிரயோகிக்கும்போது மட்டும்
நடுங்குகின்றன
அவள் விரல் பூக்கள்
வார்த்தைகளற்று.------------------------அருணாசல சிவா.

நகைச்சுவை 18+

அவனும் அவளும் அந்த பூங்காவின் மதில் சுவர் அருகே இருக்கும் மரத்தினடியில் ஒதுங்கினார்கள் . அவள் அவனிடம் "என்னுடைய இதயத்துடிப்பு தாறுமாறா எகுறனும் சீக்கிரம் ஏதாவது செய்" என்றாள்.

அவன்: "அப்படியா அதோ உன் புருஷன் வருகிறான், அப்படியே இந்த சுவர் ஏறி குதித்து ஓடு".


ஜொள்ளு  



28/12/2012


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 December 2012

இதுவும் கடந்து போகும்........

கடந்த வாரம் தலைநகரத்தில் நடந்த கோர கற்பழிப்பு சம்பவம் இப்பொழுது நாட்டையும், ஆள்பவர்களையும் போட்டு உலுக்கிக்கொண்டிருக்கிறது.

இருபத்து மூன்று வயது முதலுதவி மருத்துவம் படிக்கும் மாணவியும் அவளது நண்பனும் இரவு சினிமா பார்த்து விட்டு, தங்கள் இருப்பிடம் செல்ல தனியார் பேருந்தில் ஏறியிருக்கிறார்கள். அதுதான் அவர்கள் செய்த தவறு. பேருந்தில் இருந்த ஆறு மிருகங்கள் அவளை அடித்து உதைத்து கற்பழித்திருக்கின்றனர். தடுக்க வந்த நண்பனை கம்பியால் அடித்து அரை நிர்வாணமாக பேருந்தை விட்டு வெளியே வீசியிருக்கின்றனர். அந்த அப்பாவி பெண்ணையும் கம்பியால் அடித்து அரை நிர்வாணமாக வெளியே வீசிவிட்டு சென்று இருக்கின்றனர். காலையில் அவர்களை நினைவிழந்த நிலையில் காவல்துறை மீட்டிருக்கிறது.

அந்த தனியார் பேருந்து இவை நடந்த மூன்று மணி நேரமும் தெற்கு டில்லியை சுற்றி வந்திருக்கிறது. இந்த மூன்று மணிநேரமும் சுற்றிய அந்தப் பேருந்தை போலிஸ் தடுத்து நிறுத்தி ஏன் சோதிக்கவில்லை? என்ற கேள்வியெல்லாம் இப்பொது பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். டில்லியில் இது ஒன்றும் புதிய சமாசாரமல்ல. வருடா வருடம் புத்தாண்டு விழாக்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆள்பவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்காததுதான் ஆச்சர்யம்.

இப்பொழுது டில்லி முதலமைச்சர் காவல் துறை ஏன் கீழ் இல்லை என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார். மத்திய அரசோ பிரதரமரை அறிக்கை விட சொல்லியும், தொலைகாட்சியில் நேரில் பேசியும் மக்களை சமாதான படுத்தப்பார்க்கிறார்கள். இப்பொழுது மாணவர்களும், சில மகளிர் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு காவல்துறை ஊழியர் மரணம் அடைந்திருக்கிறார்.

எதை தின்றால் பித்தம் தெளியும், ஏதாவது செய்யவேண்டும் என்று உள்துறை மந்திரியை பலிகடா ஆக்கிறார்கள். 

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?. நம் நாட்டு அரசியல்வாதிகள் வினை விதைத்ததை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பிழைத்தாலும் இயல்பான வாழ்க்கை வாழமுடியாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இது போன்று மேலும் நடக்காமல் இருக்க அரசு என்ன செய்யப்போகிறது? என்று நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அவளை இந்த நிலைக்கு தள்ளிய கயவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.




Follow kummachi on Twitter

Post Comment

Thursday 20 December 2012

கலக்கல் காக்டெயில் -96

நாளை அழியப்போகுதா? கூலிய கொடுயா..............

ஏதோ மாயன் நாட்காட்டியாம், அதுல சொல்லியிருக்காங்களாம் நாளைக்கு அதாவது 21-12-2012 மதியம் 3:24 க்கு உலகம் அழிந்துவிடுமாம். எங்கே போனாலும் இதை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கம்பெனியில் இருக்கும் சக நண்பனும் இதையே சொல்லிக்கொண்டிருந்தான், அவன் மிகவும் விசனத்தில் இருந்தான்.

ஏன்டா மச்சி கவலைப் படுறே? அழிஞ்சிடுச்சினா யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. என்றால்,

இல்லைடா மாமு இத்துணை நாள் வேலை செஞ்சதற்குஇன்னும் கூலிய கொடுக்கலை தக்காளி மொதலாளி எல்லாத்தையும் ...த்துடுவானே அத நெனைச்சா ஒரே காண்டா இருக்கு என்கிறான்.

அடப் போங்கடா ......................

மோடிக்கு  கப்பு, ஆயாவுக்கு ஆப்பு

குஜராத் தேர்தலில் மறுபடியும் நாலாவது முறையாக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காங்கிரஸ் தோற்ற ஏமாற்றத்தில் போன முறையைவிட இந்த முறை பி.ஜே.பி. இரண்டு இடங்களை கம்மியாக பெற்றுள்ளது, ஆதலால் இது மோடிக்கு தோல்வியே என்று அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயா இனி தனது மகனை நம்பாமல், காங்கிரஸ் மானம் கப்பல் ஏறாமல் இருக்க உண்மையான தலைவரை தேர்ந்தெடுப்பது நல்லது.

ஓடும் பேருந்தில் கற்பழிப்பு

தலை நகரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதை வைத்து பாராளுமன்றத்தில் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் இப்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். கயவர்கள் கம்பியால் அடித்ததால் அவளது குடலில் பெரும் பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. அவள் பிழைத்தாலும் அவளால் இனி வாயால் உணவு உண்ண முடியாது.

இதையும் வைத்து அரசியல் செய்யும் நமது தேசிய அரசியல்வாதிகளை என்ன செய்வது?.

ரசித்த கவிதை

அடிமுட்டாள்
அயோக்கியன்
அதிபுத்திசாலி
ஒரு ஞானி
அனைவரும்
குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரிதான்
வட்ட வட்டமாக வந்தது.

---------------------தென்றல் 





ஜொள்ளு

20/12/2012

Follow kummachi on Twitter

Post Comment

Monday 17 December 2012

நீதானே என் பொன்வசந்தம்

கௌதம் வாசு(லூசு)தேவ மேனன் படம் என்று எதிர் பார்த்து போனால் படமும் அதே போலதான். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா வரை தக்காளி ஒரே மாதிரிதான் கதை களம், கமல்ஹாசன் அமெரிக்காவில் கொலைகாரர்களை வேட்டையாடுவது நீங்கலாக.

நீதானே என் பொன்வசந்தம், கதை யாரோ ரேஷ்மா கட்டாலாவாம். அம்மணி கதையை திரைகதையாக்கியதில்தான் பிரச்சினை. கௌதம் அதை தன் பாணிக்கு மாற்றி புளிப்பூற்றிவிட்டார்.

ஜீவாவை பள்ளி மாணவனாக பார்க்க சகிக்கவில்லை. சிறுவயது தொட்டு பழகி அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் காதல் கதை  சமீபத்தில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நியாபகம். இருந்தாலும் இந்தப்படத்தில் சமந்தாவின் முகபாவங்களுக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும். அதுவும் ஜீவா வேறொருத்தியை மனக்கப்போகிறார் என்று தெரிந்தவுடன் வீட்டில் தன் அக்காவிடம் புலம்புமிடம் சூப்பர்.

படத்தின் ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ், எம்.எஸ். பிரபு படத்தை ஓரளவிற்கு தூக்கி நிறுத்துகிறார்கள். ஜீவா எம்.பி.யே படிக்கப்போகுமுன் மொட்டை மாடியில் சொல்லும் காட்சியை ஏன் லாங் ஷாட்டிலேயே எடுத்திருக்கிறார் என்பது விளங்க வில்லை. ஜீவாவின் மேல் நம்பிக்கை இல்லையோ.

படத்தில் ஒரு குண்டு பெண் வருகிறார். நடிகர் மோகன் ராமின் மகளாம். அம்மணி உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. அம்மணி சந்தானத்திற்கு ஜோடியாக சேர்ந்து ஒரு சில நிமிடங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பரோடி(Parody) செய்கிறார்கள். சந்தானம் வழக்கம்போல் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.


விண்ணைத்தாண்டி  வருவாயா மொக்கை காதலை தூக்கி நிறுத்த ஏ.ஆர். ரஹ்மான் இசை கைகொடுத்த அளவிற்கு இந்தப் படத்தில் இளைய ராஜா செய்யவில்லை என்றே தோன்றுகிறது. "நீதானே ஏன் பொன்வசந்தம்" பாடலை பாடியது யார்? தமிழ் உச்சரிப்பில் அத்துனை கொலை, நீங்களுமா ராஜா?

ராஜா இந்த மாதிரி படங்களில் உங்களது குரலை தவிருங்கள். படத்தில் எல்லோரும் மெச்சும் "சாய்ந்து சாய்ந்து" மெட்டு சூப்பார்தான், அந்தப் பாடலை வேறு யாராவது ஒரு பாடகரை வைத்து செய்திருக்கலாம்.

படத்தில் எனக்குப் பிடித்த பாடல், காற்றை கொஞ்சம்............தான்.

இந்த முறை படத்தை டோஹாவில் சிடி சென்டர் திரையரங்கில் பார்த்தேன் ஆதலால் ஓரளவிற்கு சகிக்க முடிந்தது.

மொத்தத்தில் நீதானே ஏன் பொன்வசந்தம், கொஞ்சம் புழுக்கமான வசந்தம்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 14 December 2012

தோணி பயோடேட்டா



 இயற்பெயர்
 மகேந்திர சிங் தோணி
 நிலைத்த பெயர்
டோனி 
 தற்போதைய பதவி
இந்திய  கிரிக்கட் அணியின் தல
தற்போதைய தொழில்
டெண்டுல்கருக்கு வக்காலத்து வாங்குவது, பிட்ச் தயாரிப்பளர்களை கடுப்படிப்பது
உபரி தொழில்
பத்திரிகையாளர்களை  சமாளிப்பது
பலம்
ரசிகர்களின்  உலக கோப்பை நியாபகம்
பலவீனம்
கூட ஆடுபவர்கள்
தற்போதைய சாதனை
இங்கிலாந்து வெற்றிக்கு உதவியது
 நீண்டகால சாதனை
விளம்பரங்கள்
சமீபத்திய  எரிச்சல்
மொகிந்தர் அமர்நாத்தும், செலேக்க்ஷன் கமிட்டியும்
நீண்டகால  எரிச்சல்
நம்மூரு பிட்சுகளில் வெளிநாட்டு பௌலர்கள் விக்கட் எடுப்பது
பிடித்த வார்த்தை
முதல் நாளிலேய "டர்னர்"
பிடிக்காத வார்த்தை
பாட்டிங் பிட்ச்
எதிர்கால திட்டம்
இந்திய டீமின் நிரந்தர தல




Follow kummachi on Twitter

Post Comment

Friday 7 December 2012

கலக்கல் காக்டெயில்-95

"FDI" மத்திய அரசின் கடைசி மூச்சின் முயற்சி

சில்லறை வர்த்தகத்தில்அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை இன்று ஆளும் கட்சி, உபரி கட்சிகளின் கையை காலைப் பிடித்து இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டது.

இந்த மசோதாவினால் யாருக்கு லாபம் என்பது தெளிவாக தெரியவில்லை?, இதனால் சில்லறை  வியாபாரிகள் பாதிக்கப் படுவார்களா? நம்ம அறிவுக்கு எட்டாத விஷயம்.

ஆனால் ஒன்று நிச்சயம், அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு இதை ஒரு ஆயுதமாக பயன் படுத்தி, வெள்ளந்தி மனிதர்களின் ஒட்டு வேட்டையாடுவது நிச்சயம்.

தமிழ்நாட்டில் இதற்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. நாடார் சமூகம்தான் ஏதோ வியாபாரம் செய்வது மாதிரியும் மற்றவர்கள் "அண்ணாச்சி அரை கிலோ புளி" என்று வாங்கும் நிலயில் இருப்பதாகவும் ஒட்டு வேட்டைக்கு ஆட்டையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி  அய்யாவும், அம்மாவும் நாடார் சமூக காவலர்களாக காண்பித்துக் கொள்வார்கள்.

மாயாவதி அடித்த அந்தர் பல்டிதான் மசோதாவின் வெற்றிக்கு காரணம்.

காவிரி யூ டர்ன் அடிக்க வேண்டுமாம்

பருவமழை பொய்க்கும் போதெல்லாம் இந்த காவிரி பிரச்சினை தலையெடுக்கும். இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சினை போல இதுவும் ஒரு தீராத பிரச்சினை.அம்மா ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் காவிரி பிரச்சினையும் கை கோர்த்துக்கொண்டு வரும். இதை பற்றி நான் எப்பொழுதோ எழுதிய கவிதை இது.



காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும்

கர்நாடக மக்கள் வேண்டுதல்.

கபினி கரை புரளும் பொழுது,

காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,

கண்துடைப்பு உண்ணாவிரதம்,

கதாநாயகர்கள் மேடைச்சண்டை,

கடந்த வருடம் போல் இந்த வருடம்,

கடற்கரையில் கிடையாது,

கவலையில் தொலைக்காட்சிகள்,

அரசியல் நாடக அரங்கேற்றம்,

அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

2013 எப்படி இருக்கும்?

எல்லா தொலைக்காட்சிகளிலும் காலையில் வரும் நிகழ்ச்சி இன்றைய ஜோதிடம். இதில் ராசி வாரியாக அன்றைய நம் நாள் எப்படி இருக்கும் என்று சரியாக தப்பாக சொல்லுவார்கள். இதில் ந்யூமரலாஜி ஜோதிடம் பற்றி ஒரு நாள் கேட்க நேர்ந்தது.பிறந்த தேதியின் கூட்டுத்தொகையை வைத்து சொல்லிக்கொண்டிருந்தார்.

கூட்டுத்தொகை

ஒன்று  என்றால் ஒன்றும் விளங்காது
இரண்டு என்றால் இடிந்து விழுவாய்
மூன்று என்றால் மூளியாகிவிடும்
நாலு என்றால் நாய் படாத பாடுதான்
ஐந்து என்றால் அழிவு நிச்சயம்
ஆறு  என்றால் "ஆ............டி"டும்
ஏழு என்றால் ஏமாற்றம் தான்
எட்டு என்றால் பட்டென அழிவு
ஒன்பது என்றால் ஒழிந்துவிடும்.


ஸ்............ப்பா ............முடியலடா சாமீ..............

ரசித்த கவிதை

நானென்பது யாரென
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகிற
புனைவுகளா
காலத்தில் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
நிரப்பப்பட்டிருக்கிறது.

-------------------------லக்ஷ்மி மணிவண்ணன்


ஜொள்ளு



07/12/2012











Follow kummachi on Twitter

Post Comment

Thursday 6 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ------விமர்சனம்

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தினை இன்று தோஹாவில் உள்ள  தியேட்டரில் பார்த்தேன். இது போன்ற ஸ்டார் வேல்யு இல்லாத படங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வருவதில்லை. இந்தப் படத்தினை பற்றிய விமர்சனங்கள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே குறும்படங்கள் தயாரித்து விருது பெற்றவர். கதாநாயகன் விஜய் சேதுபதியும் மாஸ் ஹீரோ அல்ல. இருந்தாலும் நல்ல திரைக்கதையால் படம் பேசப்படுகிறது என்பது உண்மை. ஹீரோவுடன் கூட வரும் நண்பர்களின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகன் கல்யாணம் இன்னும் இரண்டு நாட்களில், அழைப்பிதழ்கள் எல்லாம் வைத்து தயாராகிக்கொண்டிருக்கின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போக தலையில்  அடிபட்டு "Temporary memory loss" ஏற்படுகிறது. நண்பர்கள் இது விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கல்யாணப் பெண்ணிடமும், வீட்டாரிடமும் மறைத்து கல்யாணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். கல்யாணம் நடந்ததா, ஹீரோவிற்கு சரியாகிவிட்டதா என்பதை படத்தில் காணலாம்.

ஹீரோவின்  நண்பனாக வரும் "சரஸ்", ன் நடிப்பு மிக இயல்பாக உள்ளது. விஜய் சேதுபதி ஒரே வசனத்தை திரும்ப என்ன ஆச்சு" என்று கூறிக்கொண்டிருந்தாலும் படம் பார்த்த நமக்கு தோன்றுவது, என்ன ஆச்சு தமிழ் திரை உலகத்திற்கு, இது போன்ற படங்கள் அடிக்கடி வருவதில்லையே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு காமெடி தோரணங்கள் கதையோடு இழைய விட்டிருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா, என்றால்"இருக்கிறது", ஆனால் இது போன்ற படங்களில் அதை பெரிதாக்குவது தவறு.

இடைவேளை வரை கொஞ்சம் இழுவையை தவிர்த்திருக்கலாம். ஹீரோவின் காதலை பிளாஷ் பேக்கிலோ, இல்லை ஆரம்பத்திலேயோ சொல்லி ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் "மெடுலா ஒப்லாங்கட்டா" மேட்டரை எடுத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பது பெருமபாலானவர்கள் எண்ணம்.


இந்த படம் இன்று நான் பார்த்த பொழுது என்னையும் சேர்த்து தியேட்டரில் ஐந்து பேர்கள்தான், இதை நான் படத்தின் தரத்திற்காக சொல்லவில்லை. நல்ல படத்திற்கு என்று கூட்டம் வந்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 5 December 2012

சமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி

தொலைக்காட்சிகளில் ஜல்லியடிக்கும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் இந்த சமையல் நேரம் என்று ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இது பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. கொரியாவோ கொட்டாம்பட்டியோ எங்கிருந்தாலும் இது போனியாகும் நிகழ்ச்சி.

 எல்லா சீரியல்களிலும் ஒரு நோட்டம் விட்டு, அதில் வர மாமியார், மச்சினி, ஓரகத்தி, அட்டகத்தி, நாத்தனார், கொத்தனார் எல்லோரையும் அடுத்த வீட்டு அம்மனியுடன் காட்டு காட்டு என்று காட்டிவிட்டு, அசரும் நேரத்தில் பெரும்பாலும் ஏதோ ஒரு ஏராள சுற்றளவு, பரப்பளவு  கொண்ட ஆண்டியோ இல்லை, சின்னத்திரை, பெரியதிரை எல்லாவற்றிலும் ஆடி, அலுத்துப்போன நடிகைகளை வைத்து ஏதாவது ஒரு மொக்கை பார்ட்டி போடும் நிகழ்ச்சி. இதனுடைய ஸ்பான்சர்கள் மசாலா, அப்பளம், பருப்பு அல்லது நெய் விற்கும் பார்ட்டிகள் என்பது எழுதப்படாட விதி ( லாஜிக் முக்கியம்).

இதில்  சமையல் செய்யும் பொழுது, இரண்டு பார்ட்டிகளும் பேசிப்பேசியே எல்லா பண்டங்களையும் வதக்கி, வாட்டி, வேகவைத்து வடித்து விடுவார்கள். நம்ம அல்லக்கை ஹீரோக்கள் படங்களில் வரும் பஞ்ச் டயலாக் போல இதில் டிப்ஸ்களும்  உண்டு. 

சமீபத்தில் "குயா" டிவியின் "ஸ்டாருடன் சமையுங்கள்" நிகழ்ச்சியில்  நம்ம கவுண்டமணி புகழ் சொப்பன சுந்தரியின் டிப்ஸ்கள்.

  1. சோறு  வைக்கும் பொழுதே சற்று அதிகமாக வடித்துவிடுங்கள், மீறும் சோற்றை தனியாக வையுங்கள் அப்பொழுதுதான் நாளை ஷூட்டிங் முடித்து வரும் பொழுது  நமக்கு நல்ல சோறு கிடைக்கும்.
  2.  ரசம்  நிறைய நேரம் கொதிக்கக்கூடது, ஏனென்றால் அதிகமாக கொதித்த ரசமும், குறைவாக கொதித்த சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவுமே இல்லை.
  3. முறுக்கு சுட்டு, தண்ணீரில் போட்டு விடுங்கள், அடுத்த நாள் அதை மிக்ஸ்யில் அரைத்து கூழாக குடிக்கலாம்.
  4. பொறியல் செய்து போனியாகவில்லை என்றால் கவலை வேண்டாம், அடுத்த நாள் வடை சுட்டு , வடைகறியாக செய்துவிடலாம்.
  5. டிபன் செய்து டிபன் பாக்சில் போட்டு வைத்தால் பிள்ளைகளுக்கு பள்ளி நாட்களில்  கொடுக்கலாம்.
  6. இட்லி மீந்துவிட்டால் கவலை வேண்டாம், தேவயானி டிபன் செய்துவிடலாம்.
  7. கோழி வறுக்கையில் மசாலா தீர்ந்துவிட்டதே என்று கவலை வேண்டாம், குருமாவில் போட்டுவிடுங்கள்.
இனி "அஜிலி குஜிலி" பணியாரம் செய்வது எப்படி என்பதை  அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம் அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது  அந்தகால அம்பாசிடர் காரை வைத்திருந்த சொப்பனசுந்தரி.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 4 December 2012

அம்மாவிடம் அடைக்கலமானார் நாஞ்சில்

ம.தி.மு.க வின் தொடக்ககாலம் தொட்டே வைகோவுடன் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று அம்மாவை போயஸ் கார்டனில் சந்தித்து அ.இ.அ,தி.மு.க வில் ஐக்கியமானார். இதனால் யாருக்கு என்ன லாபம்?, மின்வெட்டு நீங்குமா?, பால்விலை குறையுமா?, இல்லை டாஸ்மாக்கில் தான் தள்ளுபடியில் கொடுப்பார்களா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதனால் யாருக்கு லாபம்?  என்று "புதிய தலைமுறையில்"  நேர்பட பேசு நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தையும் அழைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். சத்தியமாக நமக்கு இல்லை என்பது தெரிகிறது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா? கட்சி விட்டு கட்சி தாவுவது, தலைவரிடம் எதாவது எதிர்பார்த்து கிடைக்கவில்லை என்றால், சாரைப்பாம்பு, சரக்கு மாஸ்டர், புண்ணாக்கு வியாபாரி என்று ஏசிவிட்டு அடுத்த கட்சியைப் பார்த்து போய்கிட்டே இருப்பாங்க.

தமிழ்நாட்டில் இரண்டே பிரதான கட்சிகள்தான், மற்றவர்களெல்லாம் அண்டிப்பிழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் தலையெழுத்து. மற்ற உபரிக்கட்சிகள், ஜாதிச்சாயம் பூசிக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன் கூட்டணி பேரம் பேசி "எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்று போய்க்கொண்டிருக்கின்றன.

தக்காளி  இதற்கெல்லாம் எப்பொழுது விடிவுக்காலமோ?

யாராவது மாற்றுவார்கள், அது வரை நாம் டாஸ்மாக் துணையுடன் பட்டா பட்டி தெரிய படுத்திருப்போம்.








Follow kummachi on Twitter

Post Comment

Monday 3 December 2012

2080 ல் செல்வந்தர்கள்

இப்பொழுது இருக்கும் மன்னர் "தூயா" வின் ஆட்சியில் நாடு ஓரளவிற்கு முன்னேறியுள்ளது என்று சொல்லலாம்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் முன்பு மிகவும் மோசமாம். இப்பொழுது வழக்கொழிந்து போன ஊழல் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்த அனைவரும்  நாட்டையே சூறையாடினார்களாம்.

அரசே ஏற்று நடத்திய "டாஸ்மாக்" என்று ஒரு நிறுவனத்தில் ஏதோ சோமபானங்களை விற்பார்களாம். அதை பிரஜைகள் "குடிப்பார்களாம்", பெரும்பாலும் இந்த வார்த்தையின் அர்த்தம் இன்றைய பிரஜைகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத்தான் இப்பொழுது "நக்" என்று சொல்கிறார்கள். பொழுது புலருமுன்னே அதை குடித்துவிட்டு போக்குவரத்தின் ஊடே ஆடை கலைய உறங்குவார்களாம். போனமுறை "தீபா" வின் பொழுது அனுமதி பெற்று மேலடுக்கில் தந்தையை காண சென்றபொழுது கூறிக்கொண்டிருந்தார். அடுத்த அனுமதி  இருபது வருடங்களுக்கு பிறகுதான்  என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொடுபெசியில் பேச மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி கிடைக்கும்.

அய்யா, அம்மா, ஆத்தா என்ற ஆட்சி எல்லாம் பின்னர் வந்த கிளர்ச்சிகளில் ஒழிக்கப்பட்டு இப்பொழுதிருக்கும் மன்னரின் தலைவர் "புதி" தான் புதிய தலைவராக பதவி ஏற்றாராம்.

சென்னை என்று ஒரு நகரம் இருந்ததாம், அதை கடல் கொண்டு போய்விட்டதாக உலவியில் உலவிக்கொண்டிருந்த பொழுது அறிந்தேன். ஆனாலும் அந்த நகரத்தை பார்க்கவேண்டும் என்றால் "நீர்மூழ்கி" கப்பலில் கொண்டு சென்று காட்ட தூயாவின் ஆட்சியில் ஏற்பாடுகள் நடக்கிறதாம். 2090ல் "தீபா" வின் பொழுது முதல் சேவை தொடங்குமென்று மன்னர் தூயா வாக்குறுதி அளித்திருக்கிறார். 

இப்பொழுதிருக்கும் தூயாவின் ஆட்சியில் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.  பிரஜைகளுக்கு முதலிலேயே "IM" ஆக மருந்தை செலுத்திவிடுகிரார்கள்.ஆதலால் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படியே கணவன் மனைவிகள் ஆசைப்பட்டால் அரசிடம் விண்ணப்பிக்கவேண்டும். அனுமதி பெற உன்பாடு என்பாடு என்றாகிவிடும்.

அரிசி, கோதுமை, காய்கறி எல்லாம் வழக்கொழிந்துவிட்டன. "உண"வு என்று ஒரு "திர"வத்தை "டாமா"வில் கொடுக்கிறார்கள். அதை வாரம் ஒரு முறை "விர" தொட்டு "நக்" செய்ய வேண்டும். சோமபானத்திற்கு பதிலாகத்தான் இப்பொழுது "நீர்" என்று ஒன்று கொடுக்கிறார்கள். ஒரு அவுன்ஸ் வாங்குவதற்கு சொத்தை விற்க வேண்டியுள்ளது.

இன்று நாட்டின் செல்வந்தர் பட்டியல் வந்துள்ளது.

"தூயா"தான் முதலிடம் -----------வருடத்திற்கு 2000 லிட்டர் நீர் உற்பத்தி திறனுள்ள தொழிற்சாலை வைத்துள்ளாராம்.

மற்ற ஒன்பது பேர்களும் அவருடைய தொழிற்சாலை உற்பத்தி திறனில் பாதியளவுகூட இல்லை. அடுத்தவர் "மயா" 900 லிட்டர் தான் "KF" ல் உற்பத்தி செய்கிறார். பின்னர் "மிட்" என்று பட்டியல் போகிறது.

"நிதி" இருநூறு என்று பொய் கணக்கு காட்டியதால் தற்பொழுது தண்டனை பெற்று "தூயா"விடம்   கருணை மனுபோட்டு காத்திருக்கிறார்.

எங்களுக்கு  "நீர்" வாங்க இருபது வருடங்களாக சேமித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வருடம் வாங்கலாம் என்றால் மனைவியோ வேண்டாம் இன்னும் ஐந்து வருடங்கள் சேர்த்த பிறகு வாங்கலாம் என்கிறாள்.

இப்பொழுது இருக்கும் சேமிப்பில் வாங்கினால் பத்து "நக்" குக்கூட காணாது என்கிறாள்.

என்னுடைய முதல் "Science Fiction" முயற்சி இது.







Follow kummachi on Twitter

Post Comment