Wednesday 7 May 2014

கையில மை..............பையில?

தேர்தல் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது, விடிந்தால் ஓட்டுப்பதிவு. அன்று செந்தில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தான். உறவினர் அந்த பிரபல கட்சியின் மாவட்ட செயலாளர், இரண்டு முறை எம்.பி. ஆக இருந்தவர். இந்தமுறை கட்சி தலைமை சீட் தரவில்லை, அடுத்தமுறை சட்டசபைக்கு சீட் தருவதாகவும் மந்திரி ஆகப்போவதாகவும் கட்சிக்குள் பேச்சு. தற்பொழுது அந்த தொகுதியில் எம்.பி தேர்தலுக்கு நிற்பவருக்கு துடியாக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். கட்சியும் வேட்பாளரும் அவரை மலைபோல நம்பியிருக்கிறார்கள்.

செந்தில் அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அவர் இல்லை. அத்தை தான் வரவேற்றார்கள். "செந்தில் நல்ல வேலை இப்பொழுது வந்தாய், மாமா தேர்தல் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள், நான் தனியாக குழந்தைகளுடன் இருக்கிறேன், நிறைய கட்சி ஆட்கள் வந்துபோகிறார்கள் என்னால் அவரகளுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை, ஆதலால் அவர் வரும் வரை சற்று இருந்து விட்டு செல்" என்றார்கள்.

செந்திலும் அவர் வரும் வரை அங்கு இருப்பதாக முடிவு செய்தான். நிறைய கட்சி ஆட்கள் வந்து அவர் எப்பொழுது வருவார் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான். நேரம் போய்க்கொண்டிருந்தது. ஒன்பது மணி அளவில் ஒருவர் காரில் வந்தார். அவர் இருக்கிறாரா? என்று விசாரித்தார்.

அதற்கு செந்தில் மாமா இல்லை என்றும் எப்பொழுது வருவார் தெரியாது என்றும் கூறி, அவசரமென்றால் அவரை அலை பேசியில் அழையுங்கள் என்று கூறினான்.

வந்தவர் அலைபேசியில் அழைப்பதற்கு ஏனோ தயங்கினார், ஆனால் அவர் உடனே கிளம்ப வேண்டும் என்ற அவசரம் அவரின் படபடப்பில் தெரிந்தது. பின்னர்  அவர் செந்திலிடம், "தம்பி காரில் சில பெட்டிகள் இருக்கின்றன அதை அவரிடம் ஒப்படைக்கவே வந்தேன், ஆனால் அவர் இல்லை நான் அதை நெடு நேரம் என்னிடம் வைத்திருக்க முடியாது எப்படியாவது அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் நான் என்ன செய்வேன்? தம்பி அதை வாங்கி நீங்கள் வாங்கி வீட்டில் வைத்து அவர் வந்ததும் சொல்லுகிறீர்களா? என்றார்.

செந்திலுக்கு தயக்கம் பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரியாது. வந்தவரிடம் சரி அவர் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன் என்றான்.

வந்தவர் தம்பி அவர்களுக்கு தெரிய வேண்டாம் இதை நான் அந்த பெட்டிகளை வாசலில் உள்ள அறையில் வைத்துவிட்டு போகிறேன், நீங்கள் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

செந்திலின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் தம்பி பயப்பட வேண்டாம் பெட்டியில் வெடிகுண்டு இல்லை என்று ஒரு பெட்டியை திறந்து காட்டினார். அதில் கட்டுகட்டுகளாக ருபாய் நோட்டுகளும், இரண்டு மை குப்பிகளும் இருந்தன. அவர் அதை செந்திலிடம் காட்டிக்கொண்டிருக்கும் பொழுதே காரில் இருந்து டிரைவர் மற்ற ஐந்து பெட்டிகளையும் இறக்கி அந்த அறையில் வைத்துவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்று சென்றுவிட்டார்கள்.

செந்திலுக்கு பெட்டியில் உள்ள பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை ஊகிக்க முடிந்தது, அனால் அதில் உள்ள மை குப்பி எதற்கு என்பது விளங்கவில்லை. இப்பொழுது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது வழக்கமாகிவிட்டது. போன பஞ்சாயத்து தேர்தலில் இதை அவன் நேரிலேயே பார்த்திருந்தான். அனால் மை குப்பி தான் உறுத்திக்கொண்டிருந்தது.

பத்து மணி அளவில் மாமா வந்தார், அவருடன் அவரது அரசியல் சகாக்கள் ஒரு இருபது முப்பது பேர் வந்திருந்தனர். மாமா வந்தவுடன் செந்திலை விசாரித்தார். செந்தில் அவரிடம் அந்த பெட்டி விஷயத்தை கூறினான்.

அவர் உடனே அரசியல் சகாக்களை அழைத்தார், அவர்களை ஆறு குழுக்களாக பிரித்து அந்த பெட்டிகளை ஒப்படைத்தார். பின்னர் அவர்களிடம் ஹூம் கிளம்புங்கள் நேரமில்லை, விடியலுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்றார்.

செந்திலுக்கு மை பாட்டில் விஷயம் அவரிடம் கேட்க தயக்கம் இருந்தும் கேட்டு விட்டான். அவரும் சிரித்துக்கொண்டே

"செந்தில் இதெல்லாம் அரசியலில் சாதாரணம்,எதிர்கட்சிகாரன் பத்தடி பாய்ந்தால் நாம் நூறடி பாயவேண்டி உள்ளது. அவன் காசு கொடுத்து வாக்களர்களை விலைக்கு வாங்கி அவர்கள் கட்சிக்கு  ஒட்டு போட செய்கிறான். நாங்கள் அவன் காசு கொடுத்த அதே ஆட்களிடம் எங்கள் பங்கிற்கு விநியோகம் செய்கிறோம், மேலும் அவனுக்கே காலம் காலமாக ஓட்டுப் போட்ட ஆட்களிடமும் காசு கொடுத்து வேலையை முடிக்கிறோம், இந்த முறை நிச்சயம் எங்கள் வேட்பாளரின் வெற்றி உறுதி" என்றார்.

இப்பொழுது செந்திலுக்கு அந்த மை குப்பிகளின் அவசியம் புரிந்தது. ஆனால் அதை எப்படி கொண்டு வந்தார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அதற்கு விடை சற்று நேரத்தில் கிடைத்தது. அந்த பெட்டியை கொண்டுவந்தவர் செந்திலின் மாமாவிடம் அந்த மைகுப்பிகளை எவ்வாறு போல்லிங் ஆபிசரிடமிருந்து பெற்றார் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா? என்று கவுண்டர் செந்திலின் காதில் கத்திக்கொண்டிருந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

rajamelaiyur said...

//அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா? என்று கவுண்டர் செந்திலின் காதில் கத்திக்கொண்டிருந்தார்.
//

இங்கயும் அப்படிதான் கேட்குது

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.