Thursday 12 November 2009

வழக்கொழிந்து போன விளையாட்டுகள்




கிட்டத்தட்ட ஒரு இருபது வருடத்திற்கு முன்பு இந்த விளையாட்டுகள் சென்னையில் ஏன் தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பரவலாக சிறுவர்களால் ஆடப்பட்டவை. இப்போது உள்ள கிரிக்கெட், கால்பந்து மோகத்தில் வழக்கொழிந்து போய்விட்டன. அத்தகைய பழைய விளையாட்டுகள் பற்றிய ஒரு நினைவுப் பதிவு.

கில்லி-தாண்டு


இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் போல டெக்னிக் தேவை. விளையாட்டுப் பொருட்கள் சுமார் நாலு அங்குல நீல கட்டை, இருப் பக்கமும் கூறாக சீவப் பட்டிருக்க வேண்டும், அதை நெம்பி அடிக்க சுமார் ஒன்னரை அடி நீளமுள்ள மெல்லிய உருட்டுக் கட்டை.

இரு அணிகளில் நான்கு முதல் ஆறு பேர் வரை ஆடும் ஆட்டம். முதலில் பூவா தலையா போட்டபின்பு, வென்ற அணி கில்லி அடிக்கும், மற்றைய அணியினர் அதை கேட்ச் பிடிக்க வேண்டும் இல்லை கிரிக்கெட் போல தடுத்து நிறுத்தி எண்ணிக்கையின் அளவை குறைக்க வேண்டும். கேட்ச் பிடித்தால் அந்த தாண்டு பிடித்தவன் அவுட் ஆகி அடுத்தவன் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அடித்தவன் தாண்டை குறுக்காக வைத்து எதிர் அணியினர் அதில் குறி பார்த்து அடிப்பார்கள், கில்லி தாண்டில் பட்டால் அவன் கிரிக்கெட் போல போல்ட் அவுட். இல்லையென்றால் அந்த இடத்திலிருந்து அவன் மூன்று முறை தூர தேசத்திற்கு அடிப்பான், அங்கிருத்து அவன் குத்துமதிப்பாக நானூறு என்று கேட்பான். பீல்டிங் சைடு அதை அளக்க வேண்டும் (தாண்டினால், இரு முறை தட்டி அடித்தால் கில்லியினால் அதை அளக்க வேண்டும்), அளவு சரியாக இருந்தால் அவனுக்கு அந்த எண்ணிக்கை ஏறும் . இதில் ஸ்கோர் போச்சா ஆட்டம் போச்சா என்ற வினோத விதி முறைகளும் உண்டு.

குச்சிப் ப்ளே

தேவையானப் பொருட்கள், சுமார் மூன்று அடி நீளமுள்ள ஒரு கம்பு.
ஆறு முதல் எட்டுப் பேர்கள் விளையாடும் ஆட்டம்.
முதலில் ஷா பூ த்ரீ போட்டு, எஞ்சியவன் தனது இரு கைகளையும் உயரத் தூக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலையும் ஆங்கில எழுத்து வி போல வைத்து குச்சியை தளர்வாகப் பிடிக்க வேண்டும். ஒருவன் தன கம்பை இடையில் வைத்து அதை லாவகமாக தூர தள்ளி விடுவான். மற்றவர்கள் அதை தாம்பரத்திலிருந்து தண்டையார் பேட்டை வரை தள்ளிவிடுவார்கள். குச்சியை இழந்தவன் மற்றவர்களை குச்சி கல்லில் வைக்காதப் பொழுது தொட வேண்டும். அப்படிதொட்டால் அவன் அவுட். அடுத்த பலி அவன் தான். குச்சி எங்கிருக்கிறதோ அங்கிருந்து கிளம்பிய இடத்திற்கு நொண்டிக் கொண்டே வரவேண்டும். நாம் முதலில் மாட்டினால் அம்மா கூப்பிடுகிறாள் என்று “எஸ்” ஆகி விடுவது உத்தமம்.

பம்பரம்-(டாவால அபிட்)

இதில் இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உண்டு. ஒன்று பால் குடம், மற்றது தலையேறி.

பால்குடம்: எல்லோரிடமும் பம்பரமும் சாட்டையும் அவசியம். பம்பரம் புதியதாகவும், ஆணி கூறாகவும் இருந்தால் நல்லது. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். ஒரு வட்டத்திற்குள் ஒரு பத்து பதினைந்து கூழாங்கற்களைப் போட்டு முதலில் அதன் மேல் பம்பரத்தை குத்துபோல் விடவேண்டும், ஒரு கல் வெளியே வந்தாலும் எல்லோரும் அபிட் எடுக்கவேண்டும். அபிட் என்பது பம்பரத்தை சுழல விட்டு அதை லாவகமாக சாட்டையால் நெம்பி கையில் பிடிக்க வேண்டும். கடைசியாக அபிட் எடுத்தவன் தான் முதல் பலி. இப்பொழுது அவன் பம்பரம் வட்டத்தின் நடுவே வைத்து அதன் மேல் எல்லோரும் பம்பரத்தை குத்துவார்கள். இப்பொழுதுதான் ஆக்கர் என்ற சமாசாரம் வரும். குத்து வாங்க வாங்க பம்பரம் சொறிநாய் போல் ஆகிவிடும்.

தலையேறி: இது ஒரு வினோதமான விளையாட்டு, வட்டத்திற்கு பதில் இருபத்து அடி இடைவெளியில் இரண்டு கோடுகள். ஷா பூ த்ரீயில் எஞ்சியவன் பம்பரம் முதல் பலி. அவன் பம்பரம் ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டுக்கு ஆக்கர் குத்தியே அலைக்கழிக்கப்படும். இதிலும் அபிட், டாவால்ல அபிட் போன்ற வினோத சொற்களும், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை சொற்களும் அடங்கும்.

இதைதவிர மேலும் மங்காத்தா (சீட்டுகட்டு), பேந்தா (கோலிகுண்டு) விளையாட்டுக்களும் வழக்கொழிந்துப் போய் விட்டன. இந்த மாதிரி விளையாட்டுக்கள் இப்பொழுது யாரவது விளையாடுகிறார்களா என்பதற்கு சான்றுகள் இல்லை.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஞாபகம் வருதே..:-))))

பித்தன் said...

நீங்களே சொள்ளிதட்டேன்க இது வழக்கொழிந்த விளையாட்டு, இப்போ உள்ள பசங்களுக்கெல்லாம் இது ஏளின்ட் கேம். இப்போ கிரிகெட்தான் பிரதான விளையாட்டு.

vasu balaji said...

ஏழாங்கல்லு, முதுகு பங்சர், மேச்சஸ், பக்கமடிக்கிறது, பேந்தா எல்லாம் போச்சி.

ஹேமா said...

முதல்ல நீங்க எங்க போய்ட்டீங்கன்னு சொல்லுங்க கும்மாச்சி.

கோலிக்குண்டு,பம்பரம்,கிட்டிப்புள்ளு,தாச்சி மறித்தல் ஞாபகம் இருக்கு.

குப்பத்து ராசா said...

சேட்டியார் பந்து, எரி பந்து, கேர் கல்லு, திருடன் போலிஸ், கோலி, மரம் தொத்தி இன்னும் பல.. இதையெல்லாம் விட்டு விட்டீங்களே தலைவா!!!

கும்மாச்சி said...

தீபாவளிப் பண்டிகைக்கு குடும்பத்துடன் ஊருக்கு சென்று வந்தேன். பெற்றோருடன் பண்டிகைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.