Thursday 6 September 2012

சிவகாசி

சிவகாசி தீப்பெட்டி தொழிலுக்கும், பட்டாசு தொழிலுக்கும், அச்சுத்தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊர். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியிலும், பட்டாசு உற்பத்தியிலும் தொண்ணூறு விழுக்காடு நாட்டிற்கு அளிக்கிறது. இந்த நகரத்தின் சுறுசுறுப்பைப் பார்த்து இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இந்த நகரத்தை ஒரு குட்டி ஜப்பான் என்று அழைத்தார். சிவகாசியில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை. இங்கு எல்லோருக்கும் வேலை உண்டு.

நேற்றைய தினம் எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் சிவகாசி பற்றிய செய்திகள் ஆக்கிரமித்தன. சிவகாசியின் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலையிலில் நடந்த கோரவிபத்து கிட்டத்தட்ட ஐம்பது உயிர்களை குடித்திருக்கிறது, மேலும் அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமுற்று கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த  தொழிற்சாலையில் உள்ள நாற்பத்தியிரண்டு அறைகளில் மொத்தம் நூற்றி என்பது பேர் விபத்து நடந்த வேளையில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.  ஒரு அறையில் தீப்பிடித்து வெடிமருந்துகள் வெடித்து மற்ற அறைகளுக்கு பரவி, பின்னர் வெடிமருந்து கிடங்கிலும் தீ பரவியிருக்கிறது. மதிய வேளையில் தொடங்கிய தீ மாலை வரை நீடித்திருக்கிறது.

தீயணைப்பு வண்டிகள் தொழிற்சாலையின் அருகே செல்ல சரியான பாதைகள் இல்லை. மேலும் இந்த தொழிற்சாலையில் ஒவ்வவொரு  அறைக்கென்று அனுமத்திக்கப்பட்ட அளவிலான வெடிமருந்தை விட  (மூன்று கிலோ மட்டுமே) அதிக அளவு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விதிமுறைகளை கண்காணித்து உரிமம் வழங்குவதற்கு என்று அரசு ஒரு அதிகாரியையும் சில உதவியாளர்களையும் நியமித்து உள்ளது. ஆனால் சிவகாசியில் உள்ள  பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கைகளுக்கு இது மிகவும் சொற்பமே.

சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் பிற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கியமான பட்டாசு விபத்துகள்:
24.9.2002
கோவில்பட்டி அருகே முடக்கமிட்டான்பட்டி பட்டாசு தீ விபத்தில் 16 பேர் பலி. 34 பேர் காயம்.
2.7.2005
சிவகாசி மீனாம்பட்டி விபத்தில் 20 பேர் பலி. 15 பேர் காயம்.
22.2.2006
சிவகாசி பர்மா காலனி விபத்தில் 12 பேர் பலி.
12.6.2007
சிவகாசி நாராயணபுரம் விபத்தில் 4 பேர் பலி.
7.7.2009
மதுரை அருகே வடக்கம்பட்டி விபத்தில் 19 பேர் பலி.
20.7.2009
சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி விபத்தில் 18 பேர் பலி.
27.7.2009
சிவகாசி விபத்தில் 3 பேர் பலி.
16.6.2010
சிவகாசி விபத்தில் 7 பேர் பலி.
24.9.2010
சிவகாசி விபத்தில் ஒருவர் பலி.
21.1.2011
விருதுநகர் விபத்தில் 8 பேர் பலி.
26.4.2011
சிவகாசி விபத்தில் 2 பேர் பலி.
29.6.2011
தூத்துக்குடி குரும்பூரில் 4 பேர் பலி.

எந்த அரசும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இது வரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

விபத்திற்கு பின் நஷ்ட ஈடு, அமைச்சர்கள் செல்வது, பின்னர் முதல்வர் செல்வதெல்லாம் கண்கெட்ட பின்பு செய்யும் வேலை. ஊடகங்களுக்கு தீனி.

இம்மாதிரி வெடிமருந்து தொழிற்சாலைகளில் முதல் கட்ட தீயணைப்பு வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும். அங்கிருக்கும் மின்சார உபகரணங்கள் (Intrinsically safe) தீப்போறியோ அல்லது  அதிக வெட்பமோ உருவாக்காதவைகளாக இருக்க வேண்டும். இதெல்லாம் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இதைப்பற்றிய கேள்விகள் எழும்போது ஒப்பிற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

வருடா வருடம் இம்மாதிரி விபத்துகள் பலிவாங்கும் உயிர் சேதத்திற்கு என்ன விடை வைத்திருக்கிறார்கள்?  விசாரனைக்கமிஷன் அமைப்பதனால்  என்ன பயன்? யாருக்கு லாபம்?அப்படியே அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு விதித்தாலும் என்ன நடக்கும், என்பது நமக்கு தெரிந்ததே.


Follow kummachi on Twitter

Post Comment

23 comments:

Unknown said...

உயிர் இழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....அதே நேரத்தில்...கடைசி பத்தி...செவிடன் காதில் ஊதிய சங்கு...!

கும்மாச்சி said...

செவிடன் காதில் ஊதிய சங்கு, தெரிந்தும் ஊதுவோம்.

rajamelaiyur said...

வருடா வருடம் தீபாவளி போல விபத்தும் வருகிறது .. இதை தடுக்க அரசு என்ன செய்ய போகிறது ?

Unknown said...

நல்ல பதிவு..... தொடருங்கள் வாழ்த்துக்கள்....
தங்களுடைய பதிவு அதிக வாசகரை சென்றடைய நண்பனின் பதிவு பக்கத்தில் இணையுங்கள்..

http://nanpaninpathivu.blogspot.com/.....

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த வருடம் தமிழகத்தில் தீபாவளியை (யாரும் பட்டாசு வெடித்து) கொண்டாட கூடாது...

கும்மாச்சி said...

தனபாலன் நல்ல கருத்து தான்.

NKS.ஹாஜா மைதீன் said...

எப்போதுமே ஏதாவது உயிர்பலிகள் நடந்தால்தான் அரசு அதுபற்றி யோசிக்கும்....இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் பாவம் ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வர்தான் என்ன செய்வார்?

கும்மாச்சி said...

ஹாஜா வருகைக்கு நன்றி.

அரசு யோசிப்பது இருக்கட்டும், நடவடிக்கைகள் என்ன? வெறும் நஷ்டஈடோடு போய்விடுமா? என்பதே நம் கேள்வி.

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர் வணக்கம்.
சிவகாசி வெடி விபத்து மட்டுமல்ல இது போன்ற சம்பவங்கள் எங்கு எப்படி நடந்தாலும் வருந்த்தக்கதே,கண்டிக்கதக்கதே.
அதே சமயம் இது மாதிரி நடைபெறும் அசம்பாவிதங்களில் எல்லோரும் கிட்டதட்ட அனைவருமே அரசாங்கத்தைக் குறை சொல்வதே வாடிக்கை.அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி.
ஏன் மக்களாகிய நமக்கு பங்கு இல்லையா?
ஒரு வாதத்திற்கு பேசுவோம்.அரசாங்கமும் அதிகாரிகளும் தவறே செய்கிறார்கள்.ஆனால் மக்களாகிய நாம் சரியாக இருக்கலாமே? அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.
நாம் நடத்தும் தொழிலை நியாயமாகவும்,நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இயக்குவேன் என மக்களாகிய நாம் முடிவு செய்து விட்டால் யாருக்கும் லஞ்சம் தந்து செயல்பட வேண்டியது இல்லையே?
ஒரு ரூபாய்க்கு பட்டாசு தயாரித்தால் மூன்று ரூபாய் இலாபம் என்ற பேராசைதானே இத்தனை உயிர் பலிகளுக்கு காரணம்.
ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை,நியாமான கூலி,தகுந்த பாதுகாப்பு இருந்தால்தான் வேலை செய்வேன் என்று முடிவு செய்தால் மற்றொரு சக தொழிலாளி அதை விட குறைவாகவும்,எந்த கட்டுபாடும் இல்லாமல் வேலை செய்கிறேன் என போய் நிக்கிறான்.
அரசாங்கமும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் அங்குள்ள மற்ற கட்சிகள் (ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்) தொழிலாளிகளை முடிக்கிவிட்டு வேலை வாய்ப்பு இல்லை,பண்டிகை காலத்தை நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி கொண்டாடுவது?சோற்றுக்கே வழி இல்லை என கோசம் போட வைக்கிறார்கள்.
ஆக இதற்கு நிரந்தர தீர்வு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.சட்டத்தின் விதிகளை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
நன்றி.வணக்கம்.
கொச்சி தேவதாஸ்

கும்மாச்சி said...

தேவதாஸ் ஸார் உங்கள் கருத்து ஏற்புடையது. எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிகவும் கொடுர சம்பவம் .

settaikkaran said...

செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

கும்மாச்சி said...

சேட்டை வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

தேவதாஸ் சாரின் கருத்துக்களோடு உடன் படுகிறேன்! அரசை குறைசொல்லாமல் நாம் திருந்த முயற்சிப்போம்!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் said...

படித்ததும் மனம் வலிக்கத் தான் செய்கிறது கும்மாச்சி அண்ணா! ஆனால் வருடாவருடம் இதே மாதிரி படித்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

மிகவும் கோரமான விபத்து. வருடா வருடம் பலமுறை நடந்து கொண்டிருக்கிறது.

Rasan said...

இது மிகவும் கோரமான சம்பவம். இது மாதிரி ஒரு சம்பவம் நிகழாமால் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என்னுடைய தளத்தில்

தன்னம்பிக்கை -3

தன்னம்பிக்கை -2

கும்மாச்சி said...

ராஜன் வருகைக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

வேதனையான நிகழ்வுகள்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரத்தினவேல் அய்யா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.