Wednesday 9 September 2009

எங்கிருந்தோ வந்தார்.......



குருசாமிக்கு ஒரு அறுபத்தைந்து வயது இருக்கும். ஒரு "லொடகனி" சைக்கிளை மிதித்துக் கொண்டு சரியாக வீட்டில் எட்டு மணிக்கு ஆஜராகி விடுவார். எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வார். அவருக்கு ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபாய் கொடுத்து விடவேண்டும். (வேறு ஒரு வீட்டில் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் அந்த வீட்டிற்கு சென்று விடும் அபாயமும் உண்டு). தினக் கூலி தான். ஆனால் வேலைக்கு வராமல் இருக்க மாட்டார். அவரது மனைவி அவரிடம் போட்ட நிபந்தனை அப்படியாம். வீட்டில் சும்மா இருக்கக் கூடாது, வெளியே போய் தினமும் சம்பளம் கொண்டு வரவேண்டும். அவர் மின்சாரத்துறையில் ஒயர் மேனாக இருந்து ஓய்வு பெற்றவர்.

குருசாமிக்கு, தங்கமணி வேலை கொடுக்கும் நேரம் தொடரும் சம்பாஷனைகள் எனக்கும் குழந்தைகளுக்கும் நல்ல பொழுதுபோக்கு.

தங்கமணி: குருசாமி மொட்டை மாடியில் நிறைய தண்ணி ஊத்தி கழுவிட்டு, அப்படியே கடைக்கு போய் இந்த மாவு அரைச்சுகிட்டு வாங்க.

பிறகு அதை அவர் செய்யும் பொழுது ஏதோ முனுமுனுத்து கொண்டு செய்வார்.
வெகு நாட்கள் வரை அவர் என்ன முனுமுனுக்கிறார் என்று தெரியவில்லை.

தங்கமணி: குருசாமி என்ன முனுமுனுக்கிறிங்க, சம்பளம் பத்தலை என்றால் சொல்லுங்க.
அவர்பாட்டுக்கு தன் வேலையை தொடர்ந்து முனுமுனுத்துக் கொண்டே செய்துக் கொண்டிருப்பார். வெகு நாட்களுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் நாம் சொல்லும் வேலையை மறக்காமல் இருப்பதற்காக அதை திரும்ப சொல்கிறார் என்று.

ஒரு முறை நான் ஊருக்கு போய் திரும்பி வந்து, காலையில் என்னுடைய பெட்டியையும், பையையும் குழந்தைகள் அறையில் வைத்திருந்தேன். என் மனைவி அந்தப் பைகளை பரணையில் வைக்கச் சொல்லி குருசாமியிடம் சொன்னாள்.

அவர் குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளையும் சேர்த்து மேல வைத்து விட்டார். பிறகு என்ன, குழந்தைகளுக்கு ஸ்கூல் பஸ் வந்தவுடன் பைகளைதேடி காணாததால் ஒரே களேபரம்தான். அரைமணி கழித்துதான் எனக்கு தோன்றியது அவர் பரனையின் மேலே வைத்திருக்கலாம் என்று, பிறகு குழந்தைகளை நான் வண்டியில் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு விடும்படி ஆகிவிட்டது.

தங்கமணி, என்ன குருசாமி நேற்று வேலைக்கு வரவில்லை, நான்தான் வரசொல்லியிருந்தேனே என்றால் பதில் சொல்ல மாட்டார். நாளைக்கு கட்டாயம் வரீங்களா இல்லே உங்க மனைவிக்கு போன் செய்யட்டுமா, என்றாலும் பதில் சொல்லமாட்டார்.

சரியான அழுத்தகாரர். சிலநாள் சம்பள முன்னதாகக் கேட்பார், கொடுத்தால் ஒரு நான்கைந்து நாட்களுக்கு நம்ம வீட்டுப் பக்கம் வரமாட்டார். பக்கத்து வீட்டில்தான் வேலை செய்தாலும், நாம் கூப்பிட்டால் அவர் காதில் விழாது.

அவருக்கு வேலை எங்கும் இல்லை என்றால் நம்ம வீட்டில் சொல்லாமலே வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்.

ஆனாலும் எடுபிடி வேலைக்கு எங்களுக்கு இவரை விட்டால் ஆளில்லை.

இவ்வளவு இருந்தும் குருசாமி எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர், வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு வந்து தன்னால் ஆன உதவிகளை செய்யத் தயங்கமாட்டார்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

vasu balaji said...

இப்படி ஆளுங்க என் அனுபவத்தில் தங்கச் சுரங்கம் மாதிரி. கொஞ்சம் உள்ள நுழைய முடிஞ்சா நிறைய படிக்கலாம். நல்ல அறிமுகம்.

ஹேமா said...

இப்படி ஒரு வயதில் முதியவர் அனுபவசாலி எல்லோருக்கும் கிடைக்கமாட்டார்கள்.அவர் இன்னும் நூறாண்டு காலம் சுகமாய் வாழட்டும்.

ஹேமா said...

கும்மாச்சி,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.

கும்மாச்சி said...

ஹேமா குழந்தை நிலாவுக்கு வாழ்த்துக்கள், நிச்சயம் வருகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் கும்மாச்சி - பொதுவாக முதியவர்களை மற்றும் நமது வீட்டில் வேலை பார்ப்பவர்களை நாம் உயர்த்திப் பேச மாட்டோம் .

ஆனால் தாங்களோ மனம் திறந்து இப்படி எழுதி இருக்கிறீர்கள் -

இவ்வளவு இருந்தும் குருசாமி எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர், வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு வந்து தன்னால் ஆன உதவிகளை செய்யத் தயங்கமாட்டார்.

பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கும்மாச்சி - பொதுவாக முதியவர்களை மற்றும் நமது வீட்டில் வேலை பார்ப்பவர்களை நாம் உயர்த்திப் பேச மாட்டோம் .

ஆனால் தாங்களோ மனம் திறந்து இப்படி எழுதி இருக்கிறீர்கள் -

இவ்வளவு இருந்தும் குருசாமி எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர், வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு வந்து தன்னால் ஆன உதவிகளை செய்யத் தயங்கமாட்டார்.

பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.