Saturday 22 August 2009

அண்ணாமலை


அண்ணாமலை பால்ய நண்பன். தெருவில் உள்ள எங்கள் டீமுக்கு பெரும்பாலும் விளையாட வரமாட்டான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன். கோடை விடுமுறையில் வெய்யில் அதிகமாகி வெளியே விளையாட முடியா விட்டால் அண்ணாமலை வீடுதான் அடைக்கலம். காலை பத்து மணிக்கு தொடங்கும் சீட்டுக்கச்சேரி மாலை எங்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கும் வரை நடக்கும்.

அண்ணாமலை வீட்டிற்கு கடைசி பிள்ளை. வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன் அக்காள் எல்லோருக்கும் அவன் குழந்தை. மனசிலும் குழந்தை தான். அவன் வீட்டின் பின்புறம் ஒரு பெரிய தோட்டம் உண்டு. அதில் சில மாமரங்களும், தென்னை மரம், கொய்யா மரம் எல்லாம் இருக்கும். எப்பொழுதாவது அவனிடம் மாங்காய், கொய்யா என்று கேட்டால் சடுதியில் மரத்தின் மேல் ஏறி எங்களுக்கு பறித்துக் கொடுப்பான்.

இதற்கு நேர் மாறு, அவன் எதிர் வீட்டில் இருந்த ஜெயராமன். அவனுக்கும் அண்ணாமலைக்கும் ஒத்து வராது. எங்கள் எல்லோரிடமும் அண்ணாமலையின் அக்காளைப் பற்றியும், அம்மாவைப்பற்றியும் தவறுதலாக சொல்லி என்னுடைய நட்பை கெடுக்க முயற்சி செய்தான். அதோடு இல்லாமல் எங்களுக்கு அண்ணாமலையின் அக்கா அம்மாவைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

ஒரு நாள் காலை எப்பொழுதும் போல் நான் பால் வாங்க சென்றபொழுது, அண்ணாமலை எதிரே சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தான். நான் எப்பொழுதும் போல் அவனிடம் பேச்சுக் கொடுக்க அவன் வண்டியை நிறுத்தி என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அவசரமாக எங்கேயோ சென்றான். பாலை வாங்கி திரும்ப வரும்பொழுது அண்ணாமலையின் வீட்டில் கூட்டம் இருப்பதைக் கண்டு அங்கு சென்றேன். அண்ணாமலையின் அம்மா கிணற்றில் இரவு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அண்ணாமலை காலையில் என்னிடம் பேசிய பொழுது தன் துக்கத்தை துளியும் காட்டிக் கொள்ளாதது எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்.

அவன் அஞ்சா நெஞ்சன். எந்த வீர விளையாட்டும் அவனுக்கு அத்துப்படி. எங்களுக்கு கம்புச்சண்டை, கராத்தே எல்லாம் அனாவசியமாக அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்துக் கற்றுக் கொடுத்தான். இன்று ஓரளவுக்கு என்னைப் போன்றவனுக்கு துணிவு இருக்கிறதென்றால் அதற்கெல்லாம் அண்ணாமலைதான் காரணம்.

அந்த முறை நான் விடுமுறைக்கு ஈரோட்டில் எனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ள சில பையன்களுடன் ரயில்வே பாதை ஓரமாக உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த ரயிலிலிருந்து என்னை யாரோ கூப்பிட்டார்கள். பார்த்தால் அண்ணாமலை. கோடை விடுமுறைக்கு பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தான். என்னைப் பள்ளித் தோழர்களுக்கு ஆனந்தமாக அறிமுகம் செய்து வைத்தான். அண்ணாமலையின் ஆனந்த சிரிப்புக்கு ஆயிரம் கோடி கொடுக்கலாம்.

அன்றுதான் நான் அண்ணாமலையை கடைசியாகப் பார்த்தது. விடுமுறை முடிந்து திரும்பி ஊருக்கு வந்த பொழுது, எனக்கு அந்த இடி காத்திருந்தது.

அண்ணாமலை சாலக்குடியில் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, பாறைகளின் நடுவே விழுந்து இறந்து விட்டானாம்.

உலகில் எத்தனையோ பேர்கள் இறக்கிறார்கள், அண்ணாமலையின் மரணம் இயற்கையின் அகோரம்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

பித்தன் said...

life is like that good people most needed in heaven than hell (world)

VISA said...

rompa varutham.:(

geethappriyan said...

may annamalais soul rest in peace

big salute for your great respect and values on your friend

vasu balaji said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

vasu balaji said...

கலக்கமாய் இருக்கிறது.

சுதந்திரன் said...

தங்களுக்கு எளிய ஒரு விருது... ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

http://sethiyathope.blogspot.com/2009/08/blog-post_24.html

தேவன் மாயம் said...

மன்நெகிழ்வான நினைவுகள்!

ஹேமா said...

கும்மாச்சி,நல்லவர்களைக் கடவுளுக்கும் பிடிக்குமாம்.
விட்டுக் கொடுப்போம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.