Wednesday 24 April 2013

மின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்

விடுமுறையில் ஆறுவாரம் ஊருக்கு சென்று விட்டு திரும்ப ஆணிபிடுங்க வந்து ஒருவாரம் கூட ஆகவில்லை மறுபடியும் ஐந்து நாட்களுக்கு ஊருக்கு போகவேண்டிய வேலை. ஏற்கனவே விடுமுறையில் சென்று விட்டு வந்து மின்வெட்டைப் பற்றி ஏகத்திற்கு புலம்பியாகிவிட்டது. இனி எனது வலைப்பூவில் இதைப் பற்றிய எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். மேலும் வலைப்பூவிற்கு வருபவர்களும் "அதான் தெரிந்த விஷயமாகிவிட்டதே வேறே ஏதாவது மொக்க போடுயா இல்லை என்றால் நடப்பதே வேறு"  என்று பின்னூட்டத்திலும் தொலைபேசியிலும் மிரட்டியதால் தற்காலிகமாக வேறு மொக்கையை தொடர்ந்தேன். ஆனால் போனவாரம் சென்று திரும்பிய பொழுது நிலைமை வேருவிதமாகிவிட்டது.

ஒருவாரத்திற்குள் சென்னையில் வெயில் ஏகத்திற்கும் எகிறிவிட்டது. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஒரு வழியாக ஒப்பேற்றி ஆகிவிட்டது. அன்று ஊருக்கு திரும்பும் நாள் இரவு ஒரு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பவேண்டும். காலையில் பேங்க் வேலைகளை முடித்துவிடலாம் என்று தி. நகர் பக்கம் கிளம்புமுன் மின்சாரம் போய்விட்டது. சரி இந்த முறை சுழற்சி முறையில் நம்ம ஏரியாவில் வேலை செய்கிறார்கள் போலும் என்று கிளம்பிவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு திரும்புமுன் ஏரியாவில் மற்ற இடங்களில் மின்சாரம் இருக்கவே நம் வீட்டிலோ இல்லை தெருவிலோ பிரச்சினை போலும் என்று அடுத்த வீட்டில் கேட்டால் அவர்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லையே என்றார்கள்.இரவு ஊருக்கு கிளம்புவது பிரச்சினை ஆகிவிடுமே என்ற கவலை தொற்றிக்கொண்டது.

இது என்னடா சோதனை என்று உதவி மின் பொறியாளர் அலுவலகம் சென்றேன். அங்கு சென்றால் புகார் வாங்கும் பெஞ்சில் ஒருவர் இருந்தார். அவரை பார்த்தால் ஒரு சாயலில் ஆற்காட்டார் போலவும் மற்றொரு சாயலில் நத்தம் போலவும் "OHMS LAW" தெரியாதவர் போல் இருந்தார். அவரிடம் சார் "எங்க வீட்டில் மின்சாரம்.........." என்று ஆரம்பிக்கும் முன்னரே உதவி பொறியாளர் அறையை நோக்கி கையை நீட்டினார். அங்கு சென்றால் அவர் அலுவலகத்தில் நாய் ஒன்று இருந்தது. அது சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர் பேச நேரம் கேட்கும் பொழுது ஒரு பார்வை பார்ப்பாரே அது போன்ற பார்வையை வீசிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தது. சிறிது நேரம் அங்கு காத்திருந்தும் வேறு ஆட்களையோ அல்லது நாயையோ காணவில்லை.

பின்னர் அரை மணி நேரம் கழித்து மறுபடியும் சென்றால் புகார் பெஞ்சில் ஆளை காணவில்லை. நாய் மட்டும் தலையையே தூக்காமல் கண்ணை விழித்து "அவனடா நீயி" ரேஞ்சில் பார்த்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது. மறுபடியும் கஜினி வேலையே தொடர்ந்தேன், இந்த முறை என் அதிஷ்டம் புகார் பெஞ்சில் இருந்தவர் "சார் இந்த நோட்டுல உங்க அட்ரெஸ் எழுதிவிட்டு போங்க என்று ஆள் அனுப்புறேன்" என்றார்.  நோட்டில் அட்ரெஸ் எழுதியும் அடுத்த இரண்டு மணிநேரத்தில் யாரும் வரவில்லை. மறுபடியும் என் படையெடுப்பை தொடர்ந்தேன். இந்த முறை மற்றும் இரண்டு பேரும் இரண்டு நாய்களும் இருந்தன. அவர்களிடம் சென்று கேட்டபொழுது "தோ உங்கவீட்டுக்கு தான் சார் வரோம் நீ போ சார்" என்றார்கள். நான் போவதாக இல்லை.  பின்னர் ஒரு அரைமணி அவர்களுடனே காத்திருந்ததால் வேறு வழியில்லாமல் வந்தார்கள்.

வந்து சுவிச்போர்டை செக் செய்து "கேபிளில் பால்ட்டு கீது சார், தோ பாரு ந்யூட்ரலில் பவர் வருது" என்றார்கள். "சரிங்க அதுக்கு என்ன வழி" என்றால் "நாளைக்கிதான் சார் பகலில தெருவ நோண்டணும் நீ இன்னா செய் இன்ஜினீயர பார்த்து ஒரு கம்ப்ளைண்டு குடு அவரு ஆளு அனுப்புவாரு என்றார். "அவர நான் எங்கே பார்க்கிறது அவர் ஆபிசுல நாய்தான் இருக்குது" என்றேன்.

"சார் என்ஜினீயர என்ன வேணா சொல்லிக்க ஆனா நாய ஒன்னியும் சொல்லாத அவன் பேரு மணி சார்" என்றார் ஒரு ஒயர்மென். 

"அது சரிங்க இப்போ ஏதாவது கொஞ்சம் வழி பண்ணுங்க" என்றதற்கு "இன்னா சார் சரி பக்கத்து வூட்டு போர்டுல ந்யூட்ரல் எடுத்துக்கலாம்" என்றார்கள். சரி என்று பக்கத்து வீட்டு ஓனரிடம் பெர்மிஷன் கேட்கலாம் என்று போனால் ஒயர் மேன்களோ "நீ சும்மா இரு சார் நாங்க பார்த்துக்கிறோம்" என்றனர்.  இருந்தாலும் அவரிடம் நான் சென்று கேட்டதற்கு முடியாது என்றார். யாரு பில்லு கட்டறதாம் என்றார். அவரிடம் உங்கள் வீட்டிலிருந்து கரண்ட் எடுக்கவில்லை ந்யூட்ரலில் தான் கனெக்ட் செய்கிறேன் என்றாலும் அவருக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. பிறகு அவரிடம் வோல்டேஜ், பேஸ், ந்யூட்ரல்,எர்திங், ஒம்ஸ் லா எல்லாம் விளக்கியபின் அரை மனதாக ஒத்துக்கொண்டார்.

எப்படியோ அன்று ஒரு பேசில் கரண்டு வந்து  ஊருக்கு கிளம்பியாகிவிட்டது.  இங்கு வந்து ஊருக்கு போன் செய்தால் மனைவி மறுபடியும் மின்சாரம் இல்லை பக்கத்து வீட்டுக்காரர் அந்த ஒயரை பிடுங்கிவிட்டார்,  இப்பொழுது ஏதாவது செய்யவேண்டுமே என்றாள்.

சரி அந்த உதவி பொறியாளரைபார்த்து விஷயத்தை சொல்லு என்றேன்.

இரண்டு நாட்களாக தெருவில் நோன்டிக்கொண்டிருக்கிறார்களாம், மின்சாரம் இன்னும் வரவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா....

உங்களின் கவலைகளை அந்த நாயிடம் சொல்லி
இருந்தாலும்... உங்களைப் பாவமாகவாவது பார்த்து இருக்கும்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சிங்கார சென்னையிலேயே இப்படியா...!?!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

corpbank said...

fan ஓடினாலே வேர்த்து விறுவிறுக்கும் சென்னைல கரண்ட் வீட்டில இல்லனா, நினைச்சுப்பார்ககமுடியலை. தண்ணி இல்லை, கரண்ட் இல்லை, ரோடு சரியில்ல. ஆனா METROPOLITAN CITY - போங்கடா

corpbank said...

பிரச்சனையின் தீவிரம் நேரில் அனுபவிப்பது போல் எழுதியிருக்கிறீர்கள். கொடுமைதான். கரண்ட் இருந்தாலே அருவியாய் வியர்வை. நினைத்து பார்கக முடியவில்லை. கரண்ட் இல்லை, தண்ணி இல்லை, ரோடு சரியில்லை. ஆனா மெட்ரோபாலிட்டன் சிட்டி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

பூ விழி said...

என்ன லக் பாருங்க அந்த நாய்க்கு உங்க பதிவு வர அளவுக்கு நான் கூட இந்த வாட்டி கடைசியில் நாய் படம் தான்போட்டு இருப்பீங்க கரண்டு கடுப்புள்ள விட்டுடீங்க போல

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பூவிழி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.