Thursday 9 July 2009

யார் எழுதச் சொன்னது?










அன்றும் பக்கத்து வீட்டிலிருந்து பலத்த சத்தம் கேட்டுகொண்டிருந்தது. இது ஒன்றும் புதியதல்ல வழக்கமான ஒன்றுதான். மாமியாருக்கும் மருமகளுக்கும் பலத்த சண்டை. மருமகள் எதோ பலத்த குரலில் கத்தினாள். பிறகு ஒரு நிசப்தம். நான் வழக்கமாக வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். மனைவி எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் கிச்சேனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். பிறகு வெராண்டாவுக்கு வந்து என்னிடம் இன்னிக்கி கொஞ்சம் சண்டை அதிகம் தான். நான் "சரி விடு, நமக்கு என்ன வந்தது" என்று தூங்கப் போகத் தயாரானேன்.

"அம்மா அப்பா தூங்கியாச்சா" என்றேன், அவர்கள் அப்பவே தூங்கப் போய்விட்டார்கள், கோபியும், கார்த்தியும் என்றேன், கார்த்தி தூங்கப் போயிட்டான், கோபி எதோ புக் வேணும் என்று பிரெண்டு வீட்டிற்கு போயிருக்கான், வர நேரம் தான் என்றாள்.
கோபி வந்தவுடன் நாங்கள் தூங்க சென்றோம், மறுநாள் காலையில் எழுந்து சீக்கிரம் வேலைக்கு போகவேண்டும், அந்த "tender quotation" கொடுக்காவிட்டால் மேனேஜர் காச்சு காச்சு என்று காச்சு விடுவார்.

மறுநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், மனைவி எனக்கு காபி எடுத்து வந்து கொண்டே "ஏங்க உங்களுக்கு தெரியுமா, பக்கத்து வீட்டு கிழவரும், கிழவியும் நேற்றைய இரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்களாம்". என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு ஒரே பையன், ஒரு மகள், எங்கோ அமெரிக்காவில் இருக்கிறாள், ஏழு எட்டு வருடத்திற்கு ஒரு முறைதான் வருகிறாள், அதுவும் காரில் வந்து அவர்களை ஒரு மணி பார்த்துவிட்டு திரும்ப சென்று விடுவாள். அவர்கள் அந்த தம்பியின் வீட்டில் தங்கி நான் பார்த்ததில்லை.

என் மனைவி "எங்கு போயிருப்பார்கள், முதியோர் இல்லத்துக்கு போயிருப்பார்களோ என்றாள்".

"முதியோர் இல்லம் என்ன சத்திரமா, அங்கேயும் சேர ஏதாவது நிபந்தனை இருக்கும், அந்தமாதிரி சண்டை போட்டு வருபவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டால் இன்றைக்கு எல்லா முதியோர் இல்லமும் ஹவுஸ் புல்லாக இருக்கும்" என்றேன்.
"சரி விடு, இன்னக்கி என்னவோ கடைத்தெருவுக்கு போகணும் என்று சொன்னயே வா போகலாம் என்றேன்".

நாங்கள் கடைத்தெருவில் இருக்கும் பொழுது என் மனைவி கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது. நடைபாதை கடைகளில் நடுவே, கிழவரும் கிழவியும் கழுத்தில் ஒரு பெரிய சாமி படத்தை மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர், முன்னே ஒரு கிழிந்த வேட்டியில் சில்லறை நாணயங்கள் சிதறிக் கிடந்தன.

அதைக் கண்டவுடன், என் மனைவியின் கண்களில் நீர் முட்ட ஆரம்பித்தது, "என்னங்க அநியாயம் இது, வாங்க அவங்களை நம்ம வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம்" என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம்மா நமக்கு எதற்கு வீண் வம்பு வா வீட்டிற்கு போகலாம்" என்றேன்.
"ஆமாம் நான் சொல்லுவதை என்னிக்கி நீங்க கேட்டிருக்கீர்கள், நம்ம வீட்டு அவுட் ஹவ்ஸ் வாடகைக்கு விட காலியாகத்தானே இருக்கிறது அதில் அவர்கள் இருந்து விட்டு போகட்டும்".

"இதோ பார் இந்த வம்பெல்லாம் நமக்கு எதற்கு, பேசாமல் வா" என்று நகர ஆரம்பித்தேன்.

"ஆமாம் உங்களுக்கு ஆபீஸில் ஜானுக்கும் பூனுக்கும் பத்தாயிரமும், இருபதாயிரமும் கொடுத்து ஏமாறத் தெரியும் இந்த மாதிரி வயதானவர்களுக்கு செய்வதற்கு யோசனை"

சரியான இடத்தில் என்னை அடித்துவிட்டாள்.
நாங்கள் பிறகு அவர்களை அணுகி, வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதாக சொன்னவுடன், மிகவும் முரண்டு பிடித்து பின்பு தான் வந்தார்கள்.

மனைவி இரவு அவர்களை எங்களுடன் உண்ண வைத்தாள். கிழவி அழுதுகொண்டே சாப்பிட்டாள்.

பின்பு வழக்கமாக வெராண்டாவிற்கு பேப்பரை எடுத்துக்கொண்டு கிழவருடன் அமர்ந்து பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு இப்பொழுது எழுபத்தாறு வயதாகிறதாம், அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வெள்ளைக்காரக் கம்பனியில் செயலாராக இருந்து, ஓய்வு பெற்றவராம். பக்கத்து வீடும் அவர் ஓய்வூதியத்தில் வாங்கியதாம், பெண் கல்யாணம் முடிந்தவுடன் அதை மகன் பெயருக்கு மாற்றிவிட்டாராம்.

நேற்று சண்டையில் கிழவி மருமகளிடம் ஏன் என்னிடம் சண்டை போடுகிறாய், நான் தான் எல்லா வீட்டு வேலையும் இந்த தள்ளாத வயதில் செய்கிறேன் என்பதற்கு, நீ செய்யும் வேலைக்கு கிழவற்கும் சேர்த்து தானே தண்ட சோறு போடுகிறேன் என்று சொன்னாளாம்.

கிழவர் அதை மகனிடம் சொல்லி, "உன் பெண்டாட்டியை கேட்கக்கூடாதா என்றதற்கு, நீ உன் பெண்டாட்டியைக் கேள்" என்று சொன்னானாம்.
அடுத்த நாள் நான் வேலைக்கு போய் வீட்டில் நுழையுமுன் பக்கத்து வீட்டுக்காரன் என்னை பிடித்துக் கொண்டான்.

"ஏன் சார் உங்களுக்கு ஏன் வம்பு, அவர்களை எதற்கு உங்கள் வீட்டில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டான்"

"ஏம்பா நீ செய்வது உனக்கே நியாயமாக இருக்கிறதா, இந்த தள்ளாத வயதில் அவர்கள் எங்கு போவார்கள் சொல்லு" என்றேன்.

"எங்கேயாவது போகட்டும் சார், இங்கே அருகிலேயே இருந்தால் என் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள் மற்றவர்கள் தான் என்ன நினைப்பார்கள்" ன்றான்.

"அவர்கள் நினைப்பது இருக்கட்டும், அவர்களை சண்டையோ சச்சரவோ நீதானே பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று மேலும் நான் அந்தக் கேள்வியை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன்.

"ஏம்பா இந்த வீடுக்கூட அப்பா உன் பெயருக்கு கொடுத்திருக்கிறார் அந்த நன்றிக்காவது அவர்களை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டாமா?"

"யார் எழுதச் சொன்னது?" என்றான்.

அடப் பாவி!!!!!!!

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

மணிஜி said...

அதானே...அடப்பாவி...

கும்மாச்சி said...

பின்னூட்டத்திற்கு நன்றி தண்டோரா.

VISA said...

nalla azhuthamaana kealvi. aanaal antha kealvin valiai unarum vagail ungalin kathai amaipum paathira padaipum illai.
Anyway good idea good thought good writing.

நசரேயன் said...

நல்ல கேள்விதான்

JesusJoseph said...

நன்றாக இருந்தது
இது பல குடும்பங்களில் நடக்கும் விஷயம்.
கண்டிப்பாக எந்த பெற்றோரும் தங்கள் சொத்தை குழந்தைகள் பெயரில் சாகும் முன் எழுத கூடாது.

நல்ல கருத்து

கலையரசன் said...

அதுசரி.. இப்ப அவங்க எங்க பாஸூ?

தமிழ். சரவணன் said...

இப்போ லேட்டஸ்ட் பேசன் முதியோர் இல்லம் எல்லம் கிடையாது... 498ஏ என்னும் டவுரி கேசு இருக்கு... இந்த மாதிரிகேசுல இது வரைக்கும் சுமார் 1,50,000 மாமியார்கள், நாத்தனார்கள் மற்றும் குடும்பபெண் உறுப்பினர்கள் உள்ள போயிறுக்காங்க...
இதுல கொடுமை என்னான்ன போடுற நூறு கேசுல 2 கேசுதான் உண்மைன்னு நிறுபிக்கப்படுது...

கார்த்திகைப் பாண்டியன் said...

மனதை ரணமாக்கும் உண்மை..:-(((((

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.